அம்பலமாகியது ! கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல்காரர்களுக்கு மீள விற்பனை : சிக்கினர் 4 பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள்

Published By: J.G.Stephan

28 Jun, 2020 | 11:10 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனைச் செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப்  திணைக்களத்தினரால்  இவர்கள் கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

 இந்நிலையில் சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளின் போது, போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியமை  ஊடாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இந்த நால்வரும் 31.1 மில்லியன் ரூபா வரை பணம் சம்பாதித்துள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக  பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மாகாணத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சுமார் நூறு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள்  மீளபோதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய சி.ஐ.டி.விசாரணைகளை ஆரம்பித்தது.

சி.ஐ.டி.பிரதாணி பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் மெதிசிங்கவின் கீழ் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கமைய விசாரணை செய்யும்  பொறுப்பு சி.ஐ.டி.யின்  விசேட விசாரணை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவிடம் கையளிக்கப்பட்டது. அந்த விசாரணைகளிலேயே தற்போது நான்கு பொலிஸ் போதைப் பொருள் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தடுப்பு காவலில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கடந்த இரு வருடங்களுக்கு முதல் மினுவங்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையொன்றின் போது  ஐந்து கிராம் ஹெரோயினுடன்  டையில் சமிந்த எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபிட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவு குழுவொன்றின் பிரதாணி விசாரணை என்ற பெயரில் டையில் சமிந்தவை சந்திக்க மினுவங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது 'உனக்கு 100 கிலோ ஹெரோயின் வெள்ளை நிற வேன் ஒன்றில் வந்துள்ளததே. அந்த பொருள் எங்கே? 'என டையில் சமிந்தவிடம் விசாரித்துள்ளார். இதன்போது டையில் சமிந்த ஆச்சரியத்துடன் 'அன்று சேரின் குழுவினர்தானே பொருட்களை கொண்டு வந்தீர்கள்' என தெரிவித்துள்ளார். அந்த கேள்வியை எதிர்பாராத குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யாது பொலிஸார் இரு நாட்கள் தடுத்து வைத்துள்ளதாக பதிவொன்றினையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு பொலிஸ் குழு மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று டையில் சமிந்தவுடன் விசாரணைகள் நடத்தியுள்ளது. இதன்போது டையில் சமிந்தவின் தொலைபேசியை கையேற்று நடாத்திய விசாரணைகளில் நீர் கொழும்பு பகுதியில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவரது சகோதரரின் வீடொன்றில் பாரிய தொகை போதைப்பொருள் இருப்பதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வீட்டை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குழு சுற்றிவளைத்த போது அங்கிருந்த போதைப் பொருளை வேன் ஒன்றில் வந்த மூவர் எடுத்துச் சென்றதாக அவ்வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் வேனின் இலக்கத்தை அடையாளம் கண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த லெகன் ஆர் ரக வேனானது வத்தளை பகுதியில் உள்ள வாடகைக்கு வாகனங்களை கையளிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரணை செய்த போது அந்த வேனானது ஒரு இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில், முதலில் மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்கு டையில் சமிந்தவை சந்திக்கச் சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவொன்றின் பிரதானியால் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது டுபாயிலுள்ள போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் பொன்சேகா எனும் (சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள மாக்கந்துரே மதுஷின் சகா ) நபருக்கும், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஒரு குழுவால் விற்பனை செய்யப்பட்டதாக  கூறப்படும் போதைப் பொருளுக்கும் தொடர்புள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குழு டையில் சமிந்தவுக்கு ஒரு தொகை போதைப் பொருளை கிஹான் பொன்சேக்காவின் ஆலாசனைக்கமைய பொல்வத்தை பகுதியில் வைத்து கையளித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தகவல்களை மையப்படுத்தி இது குறித்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்த பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படியே சி.ஐ.டி.யும் தேசிய உளவுத்துறையும் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்தன. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய நேற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா தலைமையிலான சி.ஐ.டி குழு 4 போதைப் பொருள் தடுப்பு பிரிவினரையும், ஒரு சிவில் நபரையும் கைது செய்தது. அவர்களை தடுப்பு காவலில் வைத்து குறித்த சி.ஐ.டி விசாரணை குழு தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20