(எம்.எப்.எம்.பஸீர்)
பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒழிக்கவும், அக்குழுக்கள் ஊடாக அறியப்படும் குற்றச் செயலகளாக அடையாளம் காணப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸ் தலைமையகம் சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் அவ்வந்த மாகாணங்களில் பாதாள உலக, திட்டமிட்ட குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்கவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யவும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவுடன் விஷேட ஊடக சந்திப்பொன்றினை இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடாத்தி, அவர் இது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தினார்.
இந் நிலையில் 9 மாகாணங்களிலும் இவ்வாறான திட்டமிட்ட குற்றங்கள், போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்படுவோர்கள் குறித்து சட்ட ரீதியில் முன்னெடுக்கத் தேவையான உதவிகளை வழங்கும் பொறுப்பு பொலிஸ் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாதாள உலகக் குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படும் ஒருவரின் சொத்துக்கள், வேறு குற்றங்கள், எதிர்காலத்தில் புரிய திட்டமிடடப்பட்டிருக்கும் விடயங்கள், தொடர்புகளைப் பேணியோர் தொடர்பில் தேவையான விசாரணைகளை செய்ய பொலிஸ் சட்டப் பிரிவு, உரிய அதிகாரிகளுக்கு தேவையான சட்ட ரீதியிலான ஆலோசனைகளை வழங்கும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகவும் பொலிஸ் சட்டப் பிரிவின் சட்டத்தரணிகள் ஊடாக அவசியம் ஏற்படின் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
இந் நிலையில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். வாராந்தம் கைது செய்யப்படுவோர் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 6 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினராலும், 2 பேர் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப் படையினர் கைது செய்த 6 பேரில், இருவர் மத்துகமவில் வாள், கத்தி, குற்றம் ஒன்றினை முன்னெடுக்க தயார் நிலையில் கைவசம் வைத்திருந்த போலி கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 29, 26 வயதுகளை உடையவர்களாவர்.
ஹங்வெல்லையில் வைத்து மூவரைக் கைதுசெய்துள்ள அதிரடிப் படை, அவர்களிடம் இருந்து கஞ்சா, வாள் போன்றவற்றை மீட்டுள்ளது. கைதானோர் 22,32,40 வயதுகளை உடையவர்களாவர்.
இதனைவிட இரத்மலானையில் வைத்து 38 வயதுடைய ஒருவரை அதிரடிப் படை கைது செய்துள்ளது.
இதேவேளை திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் ரம்புக்கன பகுதியில் வைத்து ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயினுடன் 29 வயதுடைய இளைஞர் ஒருவரையும் 50 வயது பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைதான பெண் பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இளைஞன் ரம்புக்கனையைச் சேர்ந்தவராவார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலரிடம் பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதாள உலகக் குற்றங்களை கட்டுப்படுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் நிறுவப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுக்களுக்கு உதவி செய்ய, பொலிஸ் விஷேட அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு ஆகியனவும் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM