இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலம் முடிந்துவிட்டது. இருந்த போதிலும் அதன் வடுக்களை சுமந்தவர்களாக தமிழ் மக்கள் காணப்படுகின்றனர் . எதற்காக அவர்கள் யுத்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்களோ அதற்கான காரணம் கண்டறியப்பட்டு உரிய தீர்வு காணப்படவில்லை என்பது சர்வதேசமே அறிந்த விடயம்.
இன்றைய சூழ்நிலையில் அனைத்தையும் இழந்த தமிழ் மக்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாது ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பறிபோன நிலங்கள், காணாமல்போன உறவுகள், சிறை காவலில் இருக்கும் உறவுகள் என்ற ஏக்கத்துக்கு மட்டும் குறைவில்லை.
இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையீனங்களும் ஒருவருக்கு ஒருவர் குழி வெட்டும் போக்குகளும் குறைந்தபாடில்லை.
இவற்றுக்கு மத்தியில் அனைத்து செயற்பாட்டிற்கும் அரசிடம் கையேந்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் .
மேலும் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைமையே வடக்கு-கிழக்கில் தொடர்வதாக மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர் . இதனிடையே தொடரும் துயரங்கள், நெருக்கடிகள் ஆக்கிரமிப்புகளை யாரிடம் கூறுவது என்ற ஆதங்கமும் தமிழ் மக்களை வாட்டி வருகின்றது .
கடந்த காலங்களில் தங்கள் நலனை கருத்தில் கொண்டேனும் தமிழ் மக்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்த அயல் நாடுகளும் இன்று வாய்மூடி மௌனிகளாக இருப்பது தமிழ் மக்களின் துயரை இரட்டிப்பாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல், சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படைத் தரப்பினர் மற்றும் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதாகவும், இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்போர் போராட்டங்களுக்கு முன்பும் பின்பும் அது குறித்து விசாரிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மேலும் வலுப்பெற்றுள்ளது. அச்சுறுத்தலான ஒரு சூழலை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன.
இதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது தொடர்பாக கிடைத்த அறிக்கைகள் கவலை அளிக்கின்றன எனவும், இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என்றும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள கரிசனையில் ஒரு சிறிய அளவையேனும் அரசு காட்டுமானால் தமிழ் மக்கள் நிம்மதி அடைவார்கள்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM