இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 16 ஆவது அமர்விற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி ஆவணி மாதம் 5 என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் தற்போது முகப்புத்தகம் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பது தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரத் தளமாக மாறி இருப்பதை குறிப்பாக நீங்கள் அனைவரும் அவதானித்திருப்பீர்கள்.
முகநூலில் உள்ளவர்கள் தத்தமது ஆதரவாளர்களையும் கட்சிகளையும் ஆதரவளித்து பதிவுகளை இட்ட வண்ணமாக உள்ளார்கள். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாண தேர்தல் களம் எங்கு சூடு பிடித்துள்ளது என்பதே. இவ்விடயத்தை ஆராய்வோமானால் அந்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை விட வடக்கு, கிழக்குக்கு வெளியே வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்குரிமை அற்ற ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பூர்வீகமாகக் கொண்ட எம் சகோதரர்களாலே முகப்புத்தகத்திலும் சமூகவலைத்தளங்களிலும் மிக சூடான விவாதங்களும் கருத்துக்களும் பகிரப்படுகின்றன என்பதை மனவருத்தத்துடன் பதிவிடுகின்றேன்.
இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் தனிப்பட்ட மனிதர்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுப்பதற்கான நோக்கத்தில் அல்ல. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் பின்வரும் விடயங்கள் ஆழமாக நோக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதற்காக நான் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை உதாரணமாக எடுத்துள்ளேன்.
1994 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.) தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 11 பாராளுமன்ற இருக்கைகளுக்கானதாக இருந்து 2001, 2004 ஆம் ஆண்டு தேர்தல் பிரிதிநிதித்துவம் 9 ஆகக் குறைக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் 7 ஆக குறைக்கப்பட்டது. 7 ஆசனங்களுக்காக இன்று 330 வேட்பாளர்கள் பலகட்சிகளிலும், சுயேட்சைக்குழுக்களிலும் களமிறங்கியுள்ளனர்.
மிக முக்கியமாக தமிழ் தேசியச் சிந்தனை கொண்ட கட்சிகள் மூன்றாக உடைந்துள்ளதுடன் பெரும்பான்மை இனக் கட்சிகளும் களம் இறங்கியுள்ளன. நண்பர்களே வாக்குரிமை பிரயோகம் என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை அதை தகுதியானவர்களுக்கு அளிக்க வேண்டியது உங்கள் கடமை. ஆதை பற்றி நான் கூற முயலவில்லை ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறையுமானால், இவ்வாறு தமிழ் கட்சிகள் பல கட்சிகளாக உடைந்து பாராளுமன்றம் செல்லும் நிலமை ஏற்படின் ஒரே குரலாக தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கஷ்டமான சூழ்நிலை உருவாகும். இம்முறைத் தேர்தலில் இந்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைவடைந்து சென்றமைக்கான காரணங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழ் மக்கள் யுத்தத்தின் காரணமாக புலம்பெயர் நாடுகளுக்கு சென்றமை, அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தமை, மேலும் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாரிய இராணுவ நடவடிக்கையின் விளைவாக வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறி கொழும்பு போன்ற பிரதேசங்களில் குடியேறியமை இதிலும் குறிப்பாக யுத்தத்தின்போதான இராணுவ கெடுபிடிகளால் எம் இளம் தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறியமை போன்றவற்றை பிரதானமான காரணங்களாக கூற முடியும்.
ஆனால் இன்று யுத்தமானது நிறைவடைந்து 10 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் (தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமும் தழிழ் மக்களின் அடிப்படை உரிமைசார் விடயங்கள் தொடர்ந்து நிலுவையில் இழுபட்டுள்ள இக்கட்டான ஓர் சூழ்நிலை காணப்படினும்) எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த எம். அரசியல் தலைவர்கள் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மற்றும் தொல்பொருள் விடயங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி என தமிழ் மக்களின் பூர்வீக இடங்களையும் சின்னங்களையும் அழிக்கக்கூடிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறையவிடாது அதிகரிக்கவேண்டிய நிலமை காலத்தின் கட்டாயமாகும்.
வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் கல்வி, நிமித்தமோ, தொழில் நிமித்தமோ, திருமண பந்தத்தினாலோ அல்லது வேறேதெனும் தவிர்க்கமுடியாத காரணங்களினாலோ வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே (மிக முக்கியமாக கொழும்பு போன்ற பிரதேசங்களில்) தற்காலிகமாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படின் தயவுசெய்து உங்கள் வாக்குரிமையை பிரயோகிக்கும் இடத்தினை உங்கள் சொந்த பிரதேசங்களிலேயே வைத்திருங்கள்.
வடக்கு, கிழக்கிற்கு வெளியே நிரந்தரமாக வசிக்க வேண்டிய தேவை ஏற்படின் உதாரணமாக சொந்தமாக வீடுகளுடன் இருப்பவர்களை வாக்குரிமையை வடக்கிழக்கில் வைத்திருக்குமாறு கோரமுடியாது. இங்கே இருக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவெனில் தற்காலிகமாக வசிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு பெற்றோர்களின் வாக்காளர் அட்டைக்கு புள்ளிகள் வழங்கப்படுவதனாலும் கல்வி, தொழில் நிமித்தம் தற்காலிகமாக வசிக்கும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளினுடைய பாடசாலை அனுமதிக்காக தங்களுடைய வாக்குப் பதிவுகளை தற்காலிகமாக வசிக்கும் இடங்களில் பதிவு செய்கிறார்கள். இவ்வாறாக வாக்காளர்கள் தமது வாக்காளர் பதிவுகளை தற்காலிக வதிவிடங்களில் பதிவு செய்வதால் வாக்காளர்களின் எண்ணிக்கை வடக்கு கிழக்கில் கணிசமாக குறைவடைகின்றபோது அங்கே மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதே விகிதாரசாரத்திற்கேற்ப குறைவடைய செய்கின்றது என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.
இவ்வாறாக வடக்கு, கிழக்கிற்கு வெளியே தற்காலிகமாக வசிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களில் பெரும்பாலோரின் தொழில் துறைகளை பார்த்தால் கணனிசார் தொழில்நுட்பத்துறையினரை உதாரணமாக கூற முடியும். இவர்களுக்கான தொழில் வாய்ப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படாமையும் கணனிசார் தொழில்நுட்பத்துறையில் இலாபமீட்டக்கூடிய தொழில் நிறுவனங்கள் இல்லாமையுமே முக்கிய காரணங்களாகும்.
இரண்டாவது முக்கியமான விடயம் என்னவெனில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் இளம் தலைமுறையினர் மத்தியில் வெளிநாட்டு மோகம் ன்னும் அதிகரித்து காணப்படுவதுடன் எவ்வாறாவது கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய, நாடுகளுக்கு சென்றுவிடவேண்டுமென்ற ஒரே நோக்கத்ததுடன் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வை தொலைத்தவர்களாக உள்ளமையையும் குறிப்பிடலாம் . இதற்கு முக்கிய காரணம் புலம்பெயர் தேசங்களில் வாழும் நமது தமிழ் உறவுகள் தமது வாழ்க்கை முறையையும் தமது கஸ்ர துன்பங்களையும் வடக்கு, கிழக்கில் உள்ள இளம் தலைமுறையினருக்கும் தமது உறவுகளுக்கும் சரியான முறையில் விளங்கப்படுத்தாமையையும் குறிப்பிடலாம்.
மேலும் புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் எமது இளம் தலைமுறையினரை வெளிநாட்டுக்கு அழைப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கி அதற்காக சட்டவிரோதமான முகவர் நிலையங்களுக்கு லட்சம் மற்றும் கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி இறைப்பதற்கு தயாராக இருக்கும் நிலையுமே ஆகும். இதனால் எம் இளையதலைமுறையினர் வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெறுவதும் நம்முடைய வாக்காளர்களின் எண்ணிக்கை இன்னொரு முறையில் வெகுவாக குறைவடைய செய்வதற்கு காரணமாக அமைகின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசங்கள் முன்னேற்றமடைய வேண்டுமானால் இளம்தலைமுறையினரின் கல்வி, பொருளாதாரம் என்பன வடக்கு கிழக்கு மாகாணங்களில் உறுதித்தன்மை அடைய வேண்டும். குளிர் பிரதேசங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் கடின உழைப்பால் பெற்ற பணத்தை கோடிக்கணக்கில் வெளிநாட்டு ஆட்கடத்தல் முகவர்களுக்கு லட்சங்கள் மற்றும் கோடிக்கணக்கில் கொடுக்க தயாராக உள்ள எம் புலம்பெயர் உறவுகள், வடக்கு கிழக்கில் அவற்றை முதலிடுவதற்கு இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பார்களானால் பொருளாதார ரீதியிலும் எமது பிரதேசம் வளம்பெறுவதுடன், பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கக்கூடிய நிலையும் காணப்படும். இதன் மூலம் எம்முடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையையும் குறையவிடாது இன்னும் அதிகரிக்கசெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கு மேலாக, தற்காலிகமாக வடக்கு, கிழக்குக்கு வெளியே இருப்பவர்கள் தமது, அவசிய நோக்கத்துக்காக அல்லாமல் வாக்கு பதிவுகளை வெளிமாவட்டங்களில் செய்யாது, வடக்கு கிழக்கு மாகாணங்களிலே வாக்காளர் பதிவை மேற்கொள்ளுதல் எம்மடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவ ஸ்திரதன்மையை உறுதிப்படுத்த உதவும் என நம்புகிறேன். இங்கே விதிவிலக்காக அரசியல் காரணங்களுக்காக கொழும்பில் நிரந்தரமாக இருந்தும் மக்கள் பிரதிநிதியாக வரவேண்டுமென்பதில் காதல் கொண்டு அண்மைக்காலமாக தமது வாக்குரிமையை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரயோகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமது வாக்குரிமையை மட்டும் மாற்றாது தமது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களின் வாக்குரிமையை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதியலாம். அத்துடன் இது தொடர்பான விழிப்புணர்வை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஊடாக இலங்கை முழுவதும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமே. இது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் கரிசனைக் கொள்ள வேண்டும். அதன் மூலமே வடக்கு கிழக்கில் எமது இருப்பை உறுதிப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையுடன்.
ம.யூட் டினேஷ்
சட்டத்தரணி (தலைவர், யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM