(லியோ நிரோஷ தர்ஷன்)
சீன - அமெரிக்க வர்த்தக போர் இன்று அனைத்துலக போராக மாறிவிட்டுள்ளது. எதிரியுடன் நேரடியாக மோதுவது கடினமாயின் , துணை நிற்பவர்களை சாய்த்துவிட வேண்டும் என்பதில் சிவப்பு இயந்திரம் செயற்படுவதாகவே தென்படுகின்றது. குறிப்பாக தெற்காசிய நாடுகள் மற்றும் தென் சீன கடல் பிராந்தியங்கள் ஊடாக மேற்கை நோக்கி நகர்த்தப்படும் சில யுக்திகள் இங்கு முக்கியமானவையாகின்றது.
தென் சீன கடலில் ஏற்பட்ட பதற்ற நிலை , இந்திய - சீன எல்லையில் படைகுவிப்பு , பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் ஊடான சில நெருக்குதல் என்பன தெற்காசியாவூடான மேற்கு இலக்குகளுக்கான சீனாவின் நகர்வாகவே வெளிப்படுகின்றது. இது குறித்து சில விடயங்கள் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகின்றது.
ஒரு ஆயுத ரீதியிலான போரை முன்னெடுக்காமலேயே வெற்றி இலக்குகளை அடைவது சாத்தியமாகுமா ? பெரும்பாலானோர் இல்லையென்றாலும் அது சீனாவிற்கு மாத்திரம் சாத்தியமாகின்றது.
கொவிட்-19 உலக வைரஸ் தொற்று 2020 ஆண்டில் ஆரம்பத்திலிருந்தே அனைத்துலகத்தையும் முழுமையாக நிலை குலைய வைத்துள்ளது. இன்றும் மீள முடியாத நிலையே பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் சீனா கையாண்ட சில யுக்திகள்அந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தையோ அவர்களது பங்கு வர்த்தகத்தையோ எவ்விதத்திலும் வீழ்ச்சியடையச் செய்யவில்லை. மாறாக பல நன்மைகளே சீனாவிற்கு கிடைக்கப்பெற்றன. புதிய பட்டுவழிப்பாதையாக வர்ணிக்கப்பட்ட பன்னாடுகளுக்கான சீன வர்த்தக விஸ்தரிப்பிற்கு சுகாதார வழிப்பாதை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
ஆனால் தனது வர்த்தக பாதைக்கு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை கையாள்வதில் சீனா தெற்காசியாவில் சில யுக்திகளை கையாண்டது.
இதனை அரசியல் போர் யுக்தியாக கூட குறிப்பிடலாம். சீனாவின் எதிரிக்கு அமெரிக்காவா ? அல்லது இந்தியாவா ? என்றால் அது அமெரிக்கா தான் என்பது உறுதியான விடயமாகும். அவ்வாறெனில் இந்தியாவை ஏன் சீனா பல்வேறு வழிகளில் சீண்டிப்பார்க்க வேண்டும்.
ஹொங்கொங்கில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளை திசை திருப்புதல் , அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை திசை திருப்புதல் அல்லது கொவிட்-19 வைரஸை சீனா தான் பரப்பியதாக காணப்படும் குற்றச்சாட்டை மறைத்தல் போன்ற விடயங்களுக்காகவே உலக நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய எல்லை பகுதிகளில் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே உலக அரசியல்என்ற ஒரு குடைக்குள்மையப்படுத்தியதாகவே உள்ளது.
அமெரிக்கவை கையாளும் போது அதற்கு துணையாக நிற்க கூடிய இந்தியாவை முடக்குவது மாத்திரமன்றி அவுஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட பல விடயங்களில் இந்தியாவின் செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வகையானதொரு பதற்ற நிலை எல்லையில் உருவாக்கப்பட்டுள்ளதாக உலக அரசியல்சார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் போது சீனா கையாண்ட முக்கிய மூன்று யுக்திகளாக பொது கருத்தியல் போர், உளவியல் போர் மற்றும் நீதியல்போர் ஆகிய மூன்று யுக்திகளை இந்தியா மீது சீனா திணித்து தனது இலக்கை நோக்கி நகர்விற்கு வலுச்சேர்க்க முற்பட்டது.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதியளவில் சீன எல்லைக்குள் இந்திய இராணுவம் ஊடுறுவியுள்ளதாகவும் அதனை தடுக்க இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை இந்தியா உள்ளிட்ட அனைத்துலகத்திற்கும் பல மொழிகளிலும் பரப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பதற்றத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகயாகும் இதற்காக ஓநாய் போராளிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு எதிராக உலகில் யார் பேசினாலும் அதற்கு எதிராக கடுமையாக விமர்சிப்பதும் சீன திட்டங்களுக்கு ஆதரவு போக்கை உருவாக்குவதுமே இவர்களது மிக தீவிரமான செயற்பாடாகின்றது.
மற்றுமொரு விடயமாக சீனாவின் உளவியல்போர் தொடுத்தலை குறிப்பிடலாம். இந்திய - சீன எல்லை பகுதியில் நான்கு தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்பட்ட செய்மதி படங்கள் வெளியிடப்பட்டன. தனியார் நிறுவனம் ஒன்றே இந்த படங்களை வெளியிட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இது எவ்விதத்தில் சாத்தியப்படும் .
மிக வலுவான இரும்பு திரையுடைய சீனாவில் , அந்நாட்டின் தாக்குதல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் கட்டமைப்பின் படங்களை அரசிற்கு தெரியாது தனியார் நிறுவனம் எடுத்துள்ளது என்றால் அது சந்தேகத்திற்குரிய விடயமாகும். திட்டமிடப்பட்ட வகையிலேயே இந்த படங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதன் ஊடாக ஒரு அரசியல் பதற்ற நிலையை இந்தியாவில் உருவாக்குவதாக கூட இருக்கலாம். ஏனெனில் அதன் பின்னரே கூடுதலான படைகள் குவிக்கப்பட்டு எல்லை பகுதியை மழு அளவில் போருக்கு தயார்ப்படுத்தப்பட்டது.
இறுதியாக நான் செய்த அனைத்து விடயங்களும் நேர்மையானதும் சரியானதுமாகும். இந்திய இராணுவம் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளது. அதனை தடுக்கவே நாங்கள் விமானங்களை அங்கு நிறுத்தினோம் என்ற நியாத்தை வெளிப்படுத்த நீதியல் போரை அனைத்துலகிற்கும் பரப்பப்பட்டது. இவை அனைத்திலுமே ஓநாய் போராளிகளின் பங்களிப்பு மிக தீவிரமாக காணப்பட்டது. வெற்றி இலக்கை அடையக் கூடிய ஆயுதமற்ற போர்யுக்தியாகவே இவை காணப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை மையப்படுத்தி கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்திய - சீன அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM