அமெரிக்காவில் ஜோர்ஸ் புளொய்ட் என்பவர் பொலிஸ் ஒருவரால் கொல்லப்பட்டதற்கெதிராக செவ்வாய்கிழமை முன்னிலை சோசலிசக்கட்சியினால் கொழும்பில் அமைதியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பொலீசார் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக முற்போக்கு மகளிர் கூட்டணி கண்டனத்தினை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை முற்போக்கு மகளிர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இந்தபோராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் பொலிசாரினால் தாக்கப்பட்டமைக்கும், 7 பெண்கள் உள்ளடங்கலாக 40இற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதனையிட்டும் எமது ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றோம்.
எதிர்ப்பினை வெளிப்படுத்தும் உரிமையானது ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையாக இருப்பதுடன் ஜனநாயக சமூகமொன்றிற்கு இது இன்றியமையாததொன்றாகவும் இருக்கின்றது.
பொலீசாரின் கொடூரத்திற்கும் வன்முறைக்கும் எதிராக உலகளவில் மக்கள் சீற்றமடைந்திருக்கின்ற இந்த நேரத்தில், இலங்கை பொலீசாரின் இத்தகைய செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் இந்த பிரச்சனைக்கெதிராக ஒன்றிணையவேண்டியதன் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக்காட்டுவதாக அமைகின்றது.
சித்திரவதை,பொலீசாரின் பொறுப்பில் இருக்கும் போது மரணம்,மிதமிஞ்சிய அளவில் படையை பயன்படுத்தல் போன்றன அமெரிக்காவிற்கு மட்டுமே உரியதல்ல என்பது நாமனைவரும் அறிந்த விடயமே. அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த சம்பவம் எமது நிறுவகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கின்ற கட்டமைப்பு ரீதியான வன்முறையை அப்பட்டமாக எமக்கு நினைவுபடுத்துவதாக அமைகின்றது.
அமெரிக்க தூதரகத்திற்கருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தினை தடுக்கும் முகமாக (கொவிட் தொடர்பான சுகாதார ஒழுங்குகளை சுட்டிக்காட்டிய) நீதிமன்ற ஆணையொன்று பொலீசாரால் பெறப்பட்டிருந்தது. ஆனாலும் 30இற்கும் அதிகமானோர் நகரமன்றத்திற்கருகில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டவர்கள் அப்போது தான் ஒன்றுகூடிய வேளையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதுகூட மிகவும் குறைந்த அளவிலான மக்கள்,பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காத வகையில் ஒன்றுகூடியிருந்தனர்.
இந்த கைது நடவடிக்கைகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போராட்டத்திலீடுபட்டவர்கள் கொவிட்-19இனை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதனை வெளிப்படுத்துகின்றனவாக உள்ளன.
ஆயினும்,போராட்டத்தை தடுப்பதன் மூலம் பொலீசார் நடைமுறைப்படுத்த முற்பட்ட நீதிமன்ற ஆணையை மீறி, பொலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக நெருக்கமான வாகனத்தினுள் திணித்தமை மூலம்,சமூக இடைவெளியைப்பேணல் போன்ற விதிகளை மதிக்காமலும் அவற்றை கவனத்தில் எடுக்காமலும் செயற்பட்டமை முரண்பாடுடையதாக அமைகின்றது.
அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கினை நடைமுறைப்படுத்துவதில் தெரிவுகளை மேற்கொள்வது இதன்மூலம் மிகமிகத் தெளிவாகின்றது. பிரபலமான அமைச்சரின் மரணச்சடங்கு அனைத்து தனிமைப்படுத்தல் விதிகளையும் மீறியதுடன், 8ம் திகதி யூன் அன்று தேர்தல் ஆணையகத்திற்கு வெளியில் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் எவ்வித தடங்கலுமின்றி போராட்டத்தினை நடத்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தன.
அரசாங்கத்தின் எதிர்ப்புகளுக்கு எதிரான ஒடுக்குமுறை என்ன என்பதையிட்டும் அதன் அடிப்படை ஜனநாயக கொள்கைகளை மதியாத்தன்மை குறித்தும் நாம் எவ்வித்திலும் ஆச்சரியப்படாதபோதும், நாட்டுப்பற்று என்கிற பேரிகையை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி பிரயோகிக்கும் அரசாங்கம், எமது சொந்த கட்டமைப்புக்களுக்கெதிரான எதிர்ப்பினை சகித்துக்கொள்ள முடியாததுபோல அமெரிக்காவுக்கு எதிர்ப்பினையும் சகித்துக்கொள்ளமுடியாததாகவே இருக்கின்றதென்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். யாரை அல்லது எதை இந்த அரசாங்கம் பாதுகாக்க முற்படுகின்றது?
எமது அடிப்படை உரிமை மீதான இந்த தாக்குதலுக்கு எதிராக குரலெழுப்பும்படி ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் போற்றுகின்ற அனைத்து முற்போக்கான பிரஜைகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இது எமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒடுக்குகின்ற முயற்சிகளுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM