தாரிக் என்ற சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் : பொலிஸார் தேவையான அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தகவல்

06 Jun, 2020 | 07:38 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அளுத்கம - தர்கா நகர், அம்பகஹ சந்தி  பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணில் கடந்த மே 25 ஆம் திகதி கடமையாற்றிய பொலிஸாரால் 14 வயது மன நலம் பாதிக்கப்பட்ட  சிறுவன் ஒருவன் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளிகள் சமூக வலைத் தலங்களில்  பரவி, ' ஜஸ்டிஸ் போர் தாரிக் ' எனும் 'ஹேஷ் டக்' இன் கீழ் நீதி கோரப்பட்டு வரும் நிலையில்,  அச்சம்பவம் தொடர்பில்  சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு டப்ளியூ.ஏ.சி.ஏ.பி.பீ. எனப்படும் பெண்கள்  மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் இந்த விசாரணைகளை  கொழும்பு பெண்கள்  மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

 குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சரின் கீழ் ஆரம்பகட்ட விசாரணை ஒன்று ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ள நிலையில், அதில் குறித்த சிறுவன் விடயத்தில்  பொலிஸார் கூடுதல் பலப் பிரயோகம் செய்யவில்லை எனவும் தேவையான பலப் பிரயோகத்தினையே செய்துள்ளதாகவும், அப்போதும் அச்சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டவன் என பொலிஸார் அறிந்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே இது குறித்து விஷேட விசாரணைகளை முன்னெடுக்க பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு பெண்கள்  மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொலிஸ் அத்தியட்சருக்கு பணித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள்  உத்தியோகபூர்வ தகவல்கள் பிரகாரம், குறித்த சம்பவமானது கடந்த மே 25 ஆம் திகதி மாலை 4.45 இற்கு பதிவாகியுள்ளது.  தர்கா நகர் பகுதியில் இருந்து வெலிப்பன்னை நோக்கிய பாதையில் முகக் கவசம் இன்றி  இளைஞர் ஒருவர் சைக்கிளில் செல்வதை  அம்பகஹ சந்தி பொலிஸ் காவலரணில் இருந்த உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.  

பின்னர் அந்த இளைஞர் மீள தர்கா நகர் நோக்கி வரும் போது பொலிஸார் மறித்து அவரை பிடிக்க முற்பட்ட வேளை, சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மீன் விற்பனை இடமொன்றுடன் மோதி விழுந்துள்ளார்.

 அப்போதும் அவர் சிறுவன் என பொலிஸாருக்கு தெரியவில்லை எனவும் இளைஞர் ஒருவரின் தோற்றமே காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறும் நிலையில், 

அப்போதும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாருக்கு தெரியாது எனவும் போதைப்பொருள் பயன்படுத்தும் நபர் என்ற சந்தேகத்திலேயே பொலிஸார் அவரை கைதுசெய்ய சற்று கடினமாக நடந்துகொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த களுத்துறை பொலிஸ் அத்தியட்சரின் மேற்பார்வையின் கீழான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

இதன்போது குறித்த  சிறுவன்  உயர்ந்த தொனியில் சப்தமிட்டு தப்பிக்க முயன்றதால் பொலிசார் அவசியமான பலப் பிரயோகம் செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், பொலிஸார் தமது அதிகாரத்தை அளவுக்கு மேலதிகமாக பயன்படுத்தவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பின்னர் அங்கிருந்த ஒருவர் குறித்த சிறுவனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அளித்ததாகவும் அதன் பிரகாரம் சிறுவனின் தந்தையை பொலிஸ் நிலையம் அழைத்து அச்சிறுவனை தடுத்து வைக்காமலும் நீதிமன்றில் ஆஜர் செய்யாமலும் தந்தையிடம் கையளித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கூற்றில் கூறப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் இதன்போது கடமையில் இருந்த பொலிஸார் கடமை தவறினரா என ஆராய களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் திணைக்கள மட்ட விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே,  சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க டப்ளியூ.ஏ.சி.ஏ.பி.பீ. எனப்படும் பெண்கள்  மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சகருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பனித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31