வாஷிங்டன், ( சின்ஹுவா) அமெரிக்காவில் இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் பேரை பலியெடுத்திருக்கும் கொவிட் -19 கொரோனாவைரஸ் பரவல் ஜனநாயகம் அதன் அடிப்படையில் தோல்வியடைந்திருப்பதையே பிரதிபலிக்கிறது என்று பராக் ஒபாமா ஜனாதிபதியாக பதவிவகித்தபோது அவரின் உரைதயாரிப்பாளராக பணியாற்றிய டேவிட் லிட் கூறியிருக்கிறார்.
" எமது வாழ்நாளின் மிகமோசமான பொதுச்சுகாதார நெருக்கடியென்று கொவிட் --19 தொற்றுநோயை கறிப்பிடுவது வழமையானதாகிவிட்டது.ஆனால், அமெரிக்காவில் தொற்றுநோயினால் இவ்வளவு பாரிய எண்ணிக்கையில் மரணங்கள் நிகழவும் தொழில்வாய்ப்புகள் பறிபோகவும் காரணம் அடிப்படையில் பொதுச்சுகாதார நெருக்கடியல்ல.அது ஜனநாயகத்தின் தோல்வியேயாகும் " என்று டேவிட் லிட் ' ரைம்' சஞ்சிகையில் இவ்வாரம் வெளியாகியிருக்கும் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
" நிபுணர்களின் ஆலோசனைகளை எமது தலைவர்கள் செவிமடுக்கவேண்டும் என்று அமெரிக்கர்களில் தெளிவான ஒரு பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள், நம்புகிறார்கள்.என்றாலும், அவ்வாறு நடப்பதில்லை.சமூக இடைவெளி வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகவும் தாமதமாக செயற்பட்டிருக்கிறோம். இதுவே அமெரிக்காவில் கொரோனாவைரஸ் மரணங்களில் 90 சதவீதமானவற்றுக்கு பொறுப்பு என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆனால், இப்போது நாம் பொருளாதாரச் செயற்பாடுகளை மீணடும் ஆரம்பிக்க மிகுந்த விரைவாக நடவடிக்கை எடுக்கின்றோம் " என்று லிட் எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவின் பல மாநிலங்கள் ஏப்ரிலில் பொருளாதாரத்தை மீளத்திறப்பதற்கான திட்டத்தை அறிவித்தன.ஜோராஜியா, தென்கரோலினா, ரென்னசி மற்றும் டெக்சாஸ் ஆகியவை குறிப்பிட்ட சில அத்தியாவசிமற்ற வர்த்தகங்களை மீண்டும் தொடங்க முதலில் அனுமதித்த சில மாநிலங்களாகும்.
கொரேனாவைரஸை கட்டுப்படுத்துவதற்கு நேரகாலத்தோடு துரிதமாக நடவடிக்கைகளில் இறங்கத்தவறிய அமெரிக்க அரசாங்கத்தின் செயலினால் மிகவும் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியத்தை கொண்டவர்கள் குறைந்த வருமானத்தைப் பெறுவோரும் வெள்ளையர்கள் அல்லாத அமெரிக்கர்களுமேயாவர் என்று லிட் சுட்டிக்காட்டினார்.
அண்மைய வருடங்களில் சீனாவின் அரசியல் வரைபடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராயும் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் சட்ட மீளாய்வு அறிக்கையொன்றை மேற்கோள் காட்டிய லிட், " அமெரிக்கர்களின் அரசியல் அதிகாரம் மேலும் வலுக்குறைத்துவிட்டது, கொரோனாவைரஸுக்கு எதிரான போராட்டததில் நாம் ஈடுபட்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வெற்றிகரமான அணுகுமுறையிலேயே அமெரிகக உயிர்கள் தங்கியிருக்கின்றன.ஆனால், காங்கிரஸின் உறுப்பினர்களின் தொழில்கள்அத்தகைய அணுகுமுறையொன்றில் தங்கியிருக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.
" உதாரணத்துக்கு கூறுவதென்றால், வைரஸ் பரவிக்கொண்டிருந்தபோது, கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்து அறிவித்த முதல் 15 அமெரிக்க மாநிலங்களும் நாட்டின் மொத்த சனத்தொகையில் 56 சதவீதத்தைக் கொண்டவையாகும்.ஆனால், அந்த மாநிலங்கள் அமெரிக்க செனட்டர்களில் 30 சதவீதத்தினரை மாத்திரமே கொண்டவை.அதனால், செனட் சபை கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் துரிதமாக செயற்படவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று லிட் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும்," மிகவும் தாமதமாக செயற்படவும் தாங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது எனறு அமெரிக்க மக்கள் நம்பிக்கைகொள்வதற்கு முன்னதாகவே மிகவும் விரைவாக பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவும் அமெரிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அளவுக்கு கொள்கை வகுப்பாளர்கள் மீது அதிகரித்த செல்வாக்கைக்கொண்டவையாக கோர்ப்பரேட் நிறுவனங்கள் விளங்குகின்றன.மக்களின் நல்வாழ்வு கொள்கைவகுப்பாளர்கள் மீது செலுத்துகின்றதையும் விட கூடுதலான செல்வாக்கை அந்த முதலாளித்துவ நலன்கள் கொண்டிருக்கின்றன.இதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
" தேர்தல்களை நாம் கையாளுகின்ற முறையில் இருந்து பிரசாரங்களுக்கு நிதியை பயன்படுத்துகின்ற முறை வரை, காங்கிரஸ் தேர்தலுக்கான மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற செயற்பாடுகள் தொடக்கம் கொள்கைவகுக்கும் செயன்முறைகளில் நிபுணர்களை உள்ளடக்குவது வரை எல்லாவற்றிலுமே இதே நிலைமைதான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வேறு எந்தவொரு கட்டத்திலும் இருந்தததையும் விட தற்போதைய அமெரிக்க குடியரசு சொற்ப எண்ணிக்கையானவர்களுக்காக சொற்ப எண்ணிக்கையானவர்களினால் சொற்பஎண்ணிக்கையானவர்கள் நடத்துகின்ற அரசாங்கமாக இருக்கிறது. அதனால், மக்களாகிய நாம் கஷ்டங்களை அனுபவிக்கின்றோம் " என்று லிட் தனது கட்டுரையை நிறைவுசெய்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM