(எம்.மனோசித்ரா)
நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்று மாளிகாவத்தையில் மூவர் உயிரிழந்த சம்பவம் இலங்கையின் பொருளாதார நிலைமையை தெளிவாகக் காண்பிக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 87 வீதமாகும். இவ்வாண்டின் இறுதிக்குள் அந்த கடன் தொகை 93 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு 2021 ஆம் ஆண்டாகும் போது இந்த கடன் தொகை நூற்றுக்கு நூறு வீதமாகக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மாளிகாவத்தையில் அண்மையில் பதிவாகிய 3 உயிரிழப்புக்கள் நாட்டில் மக்களின் பொருளாதார நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் மாதமொன்றுக்கான உணவிற்காக பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1500 ரூபாவிற்காக உயிரை இழக்கும் வகையில் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மக்களுக்கு வாழ்வது கடினமாகவுள்ளது. அவர்களின் பணம் இல்லை. தொழில் இல்லை. வருமானம் இல்லை. மாத இறுதியில் அத்தியாவசிய பொருட்களும் முடிந்து விடுகின்றன. 5000 ரூபாய் நிவாரணத்தைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
அரச ஊழியர்களுக்கு பண்டிகைக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும் இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை என்ன என்பது தெளிவாகிறது.
இந்த வருடத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத நாடுகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஜென்டீனா, ஈக்குவாடோர் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளே இவ்வாறு கடனை திருப்பி செலுத்த முடியாத நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நாடுகள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இவ்வாறு கடனை மீள செலுத்த முடியாத நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடிக்கக் கூடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆசிய நாடுகளிலிலேயே இலங்கையில் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 87 வீதமாகும். இவ்வாண்டின் இறுதிக்குள் அந்த கடன் தொகை 93 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டாகும் போது இந்த கடன் தொகை நூற்றுக்கு நூறு வீதமாகும்.
2023 ஆம் ஆண்டு நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை 10 பில்லின் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கக் கூடும். இந்த வருடத்தில் மாத்திரம் 3 பில்லின் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருடத்தின் ஒக்டோபர் மாத்தில் நாளொன்றுக்குள் மாத்திரம் ஒரு பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியேற்படும்.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு அமைய ஆடை மற்றும் சுற்றுலாத்துறை தொழிலாளர்களின் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை எம்மால் இனங்காணப்பட வேண்டும். ஸ்திரமற்ற நிலைமையில் அல்லாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நிதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை அரசாங்கம் உரிய காலத்தில் சமர்பிக்க வேண்டும். எனினும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இறுதியாக மார்ச் 23 ஆம் திகதி அரசாங்கத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அது முழுமையாக தேர்தலுக்கான நிதி பற்றியதாகும். எனினும் மார்ச் மாதத்தை விட தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தற்போது அது காலம் கடந்த ஒன்றாகிவிட்டதைப் போலாக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவின் பாராளுமன்றத்தை தற்போது நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் புதிய யோசனையொன்றை நிறைவேற்றியுள்ளனர். நாம் தற்போதும் அவ்வாறானதொரு நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமலுள்ளோம்.
நிதி தொடர்பிலான யோசனையை துரிதமாக சமர்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது எண்ணிக்கை அல்லது இலக்கம் தொடர்பான பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையாகும். வாழ்தல் மற்றும் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை ஆகும். எனவே நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் உண்மை நிலைமையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
அவ்வாறின்றி தற்போது முகங்கொடுத்துள்ள எந்த நெருக்கடியிலிருந்தும் எம்மால் மீள்வதற்கான வழிமுறையை இனங்காண முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM