(செ.தேன்மொழி)
நாட்டுக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் சர்வதேச அமைப்புகளுடனான தொடர்பிலிருந்து நீங்குவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட மாட்டார்களா என்பது தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை தேர்தலை நடாத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் அரசாங்கம், நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் அரசாங்கத்தினால் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களைக் கூட தம்வசப்படுத்திக் கொள்ளமுடியாது என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பத்திலே அரசாங்கம் முயற்சித்திருந்தால் தற்போது எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ள எந்த நெருக்கடிக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் வைரஸ் பரவலை துச்சமாக கருதியே செயற்பட்டது.
அனைத்து நாடுகளும் தங்களது விமான நிலையங்களை மூடும் போது, இங்கு மாத்திரம் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பதற்காக இலங்கையில் கொரோனா வைரஸினால் எந்த பாதிப்பும் இல்லை என்று காண்பித்து காணொளியை தயாரித்து வெளியிட்டிருந்தனர். அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று ஒருத்தர்கூட வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்க மாட்டார்கள்.
இன்று பெருந்தொகையான கடற்படையினர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிவதற்காக கடற்படையினரை அனுப்பி வைத்தவர்கள் யார்? வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கடற்படையினருக்கு பயிற்சியளிக்காது, பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்றுக்கொடுக்காது ஏன் அனுப்பினார்கள்.
இந்த செயற்பாடு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிடம் அனுமதி பெற்றுக் கொண்டார்களா? இது தொடர்பில் நடவடிக்கை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்.
எந்தவொரு செயற்பாட்டையும் கலந்துரையாடல் மற்றும் விவாதமின்றி ஒழுங்கான முறையில் நீதியான முறையிலும் முன்னெடுக்க முடியாது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு மூடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றமும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எம்மால் எந்தவித விமர்சனங்களையும் முன்னெடுக்க முடியாது.
அரசாங்கம் கொரோனா நெருக்கடியை அறிந்துக் கொண்டே பாராளுமன்றத்தையும் கலைத்துள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மூன்று மாதத்திற்குள் மீண்டும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசியலமைப்பை மீறிய செயற்பாடாகவே கருதப்படும்.
தேர்தலை நடத்தவே அரசாங்கம் முற்சித்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பிளவுப்பட்டுள்ளதை தமது வெற்றிக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்றே அரசாங்கம் எதிர்பார்த்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் எமக்கு எந்தவித அச்சமும் இல்லை, ஆனால் தேர்தலை நடத்தும் அளவுக்கு நாடு இன்னமும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவில்லை. நாட்டின் நிலமை வழமைக்கு திரும்பியதுடன் நாங்களும் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம்.
இந்நிலையில் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய தேவை எமக்கில்லை. அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி கடந்துள்ள இந்த ஆறுமாத காலத்திற்குள் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் எந்த வேலைத்திட்டத்தையாவது முன்னெடுத்ததா? வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களின் நலன் தொடர்பிலாவது அக்கறை செலுத்தியுள்ளதா? கிராமபுறங்களுக்குச் சென்று பார்த்தால் புரியும் அரசாங்கத்திற்குள்ள வரவேற்பு தொடர்பில், பொதுத் தேர்தலில் அரசாங்கத்தினால் 113 ஆசனங்களை கைப்பற்றமுடியும் என்று நாங்கள் நம்பவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் வெறுப்புற்று இருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM