வருவாய் ஆரோக்கியத்துக்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் இடையிலான முரண்பாடு என்பது இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை முறிறிலும் உண்மையான ஒன்றேயாகும்.
தேசிய ஊரடங்கு தொடங்கியதில் இருந்து பொருளாதாரத்தில் காணப்படும் தேக்கநிலையின் விளைவாக வருவாய் வீழ்ச்சிக்கு முகங்கொடுக்கும் நிலையில் மாநிலங்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பொதுச்சுகாதார சேவைகள் தடங்கலின்றி தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கும் பணத்தை திரட்டுவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியவண்ணம் இருக்கின்றன.
இத்தகைய ஒரு நம்பிக்கை இழந்த நிலையே, மதுபானவகைகள் சில்லறை விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து இணையவழி மூலமான ( Online Sales) விற்பனையை மாத்திரம் அனுமதித்த சென்னை மேல்நீதிமன்றத்தின் உத்தரவொன்றுக்கு எதிராக தடையுத்தரவைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது.
மாநிலங்களின் கொள்கை சுயாதீன ( Policy Space of States) இடைவெளியை பேணிக்காக்கவேண்டிய தேவையை கருத்திலெடுத்த உச்சநீதிமன்றம் மதுபான விற்பனையை நிறுத்துவதற்கு மறுத்த அதன் முன்னைய பல்வேறு இடைக்கால உத்தரவுகளை திரும்பவும் நினைத்துப்பார்த்தது ; ஒரு வழக்கில் மதுக்கடைகளை திறப்பதற்கு முற்றுமுழுதான தடையுத்தரவைப் பிறப்பிக்க அது மறுத்தது ; இன்னொரு வழக்கில் இணையவழி விற்பனை மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கும் நடைமுறை குறித்து அது யோசனை தெரிவித்தபோதிலும், எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் தெரிவைத் திணிக்கவிரும்பவில்லை.
தமிழ்நாட்டின் வழக்கைப் பொறுத்தவரை, சென்னை மேல்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம் மாநில அரசாங்கத்துக்கு சொந்தமான ' டாஸ்மாக் ' கின் ( தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கூட்டுத்தாபனம் ) விற்பனை நிலையங்களின் ஊடாக மதுபான விற்பனையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் சென்னை மேலல்நீதிமன்றம் மாநில அரசாங்கத்தை அதன் பரந்த கட்டமைப்பின் கீழான மதுபானக்கடைகள் திறந்து விற்பனையைச் செய்வதற்கு -- பௌதீக இடைவெளியை ( Physical distancing) பேணுவதற்கான பல நிபந்தனைகளின் கீழ் -- அனுமதித்தது.
ஆனால், மே 7 ஆம் திகதி மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது மாநிலம் பூராவும் கட்டுப்படுத்த முடியாத சனக்கூட்டத்தையும் நீண்டவரிசைகளையும் காணக்கூடியதாக இருந்தது.பௌதீக இடைவெளி கணக்கில் எடுக்கப்படாமல் போய்விட்டது என்பதற்கு தாராளமான சான்றுகள் கிடைத்த நிலையில், மேல்நீதிமன்றம் மதுபானக்கடைகளின் கருமபீடங்களின் ஊடான விற்பனையை தடைசெய்து இணையவழி மூலமான விற்பனைக்கு மாத்திரம் அனுமதியளித்தது.
புதிய கொரோனாவைரஸின் தொற்றுக்கு இலக்காகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து விரைவாக அதிகரித்துக்கொண்டுவருகின்ற ஒரு நேரத்தில் மதுபான விற்பனையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பரவலான்அபிப்பிராயம் கிடையாது. வைரஸ் பரவலின் வேகம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், மதுப்பாவனைக்கு தார்மீக ஆட்சேபனை இல்லாதவர்கள் கூட மதுபானவகைகளின் நேரடி (Physical sale) விற்பனை மீதான ஒழுங்குவிதிகளை ஏற்றுக்கொள்ளத்தயங்கமாட்டார்கள் எனலாம். சென்னை நகரின் மிகப்பெரிய மரக்கறி மற்றும் பழவகைகள் மொத்தவிற்பனைச் சந்தையில் கொத்தணியாக பெருமளவானோருக்கு வைரஸ் பரவக்கூடிய ஆபத்து அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அண்மைய நாட்களாக தமிழ்நாட்டில் தொற்றுநோய்க்கு இலக்காவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்றில் மேல்நீதிமன்றம் தலையீடு செய்திருக்கக்கூடாது என்ற மாநில அரசாங்கத்தின் வாதம் வலிமையானதாக இருக்கலாம். அது உச்சநீதிமன்றத்தின் ஊன்றிய கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது வெளிப்படையானது.ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலம் ஒன்றில் இணையவழி மூலமான விற்பனை சாத்தியமானதல்ல எனற மாநில அரசாங்கத்தின் கருத்து சரியான ஒன்றாக தொனிக்கவில்லை.
உண்மைநிலை என்னவென்றால், இணையவழி மூலமான மதுபான விற்பனை ' டாஸ்மாக் ' ஊழியர்கள் ஒவ்வொரு கொள்வனவுக்கும் அறவிடுகின்ற -- கணக்கில் காட்டப்படாத -- மேலதிக கட்டணத்தை இல்லாமல் செய்துவிடும். ஒவ்வொரு கொள்வனவுக்கும் அந்த ஊழியர்கள் 5 ரூபா தொடக்கம் 10 ரூபாவரை அறவிடுகின்ற மேலதிக கட்டணத்தின் வருடாந்தம் மொத்தம் கோடிக்கணக்கான ரூபாவாகும். இந்தப் பணம் அரசியல் செல்வாக்குடைய சுயநல குழுக்கள் மத்தியில் பங்கிடப்படுவதாக நம்பப்படுகிறது.
' டாஸ்மாக் ' கடைகளை மீண்டும் திறப்பது இன்னொரு சுற்று வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியத்தை எவருமே யதார்த்தபூர்வமாக நிராகரிக்க முடியாது. இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, மிகவும் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை மாநில அரசாங்கம் எடுத்து மதுபான விற்பனையும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், மதுபான கடைகளுக்கு அருகாமையில் அளவுக்கதிகமாக மக்கள் கூடுவதை தடுப்பதாக அளித்த வாக்குறுதியை அது உறுதியான முறையில் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறது.
( த இந்து )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM