2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் மண்ணிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டில் தற்போது நிலவும்கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி நினைவேந்தல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இதனை ஒழுங்கமைப்பு செய்த ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இறுதிப் போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளை எண்ணி வருடாவருடம் தமிழ் மக்கள் கண்ணீர் சிந்தி ஈகைச்சுடர் ஏற்றி தங்கள் துயரைத் துடைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இந்த வருடம் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் நெருக்கடிக்குள்ளாகி விட்டது .
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரி பொலிசார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த, யாழ் நீதிமன்ற நீதவான் ஏ . பீற்றர்போல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில் நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடத்த அனுமதி அளித்துள்ள பொலிஸார், 10 க்கும் உட்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளனர்.
அத்துடன் விடுதலைப் புலிகளை நினைவுகூர எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் விளக்கேற்றி தமது உறவுகளுக்கு இன்று அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகி வந்த நிலையிலேயே பொலிசார் இவ்வாறு 10 பேருக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளனர் .
இந்நிலையில் தமது உறவுகளைப் பறிகொடுத்த இடத்தில் தமக்கு கண்ணீர் விடக்கூட அனுமதி இல்லையா என மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்த மிழ் மக்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தடுப்பதில் பொலிஸார் , இராணுவம், புலனாய்வு பிரிவினர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 11 பேரையும் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை தமிழ்நாட்டில் தஞ்சையில் போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போன்று இலங்கையிலும் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கூரல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிவிப்பில், இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் மக்கள் மனதிலிருந்து ஒருபோதும் நீங்காதது என்பதும், உயிர்நீத்த தங்கள் உறவுகளுக்காக அவர்கள் கண்ணீர் சிந்துவதை தடுக்க முடியாது என்பதுமே யதார்த்தமாகும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM