தமிழ் அரசியல் பரப்பில் புதிய அரசியல் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சிங்கள ஊடகமொன்றுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலேயே புதிய சர்ச்சை ஒன்று தோன்றியுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்றில் விடுதலைப் புலிகளையும் ஆயுதப் போராட்டங்களையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை, அவர் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்துகொண்டு தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பில் எப்படி இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க முடியும், தாய் பகை குட்டி உறவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்.
தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தென் இலங்கையில் பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத சக்திகள் எம்மை குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , இது தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழின விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்திய இளைஞர்கள் தமது உயிரையே அர்ப்பணித்து உள்ளனர்.
அவர்களின் வேட்கையையும் தியாகத்தையும் தமிழ் மக்கள் அதற்களித்த உணர்வுரீதியான ஆதரவையும் 5 வயது முதல் கொழும்பில் வாழ்ந்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
சுமந்திரன் தமது பேட்டியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் நோக்கத்தையும் அதன் ஆயுத இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
சுமந்திரனின் இந்தக் கருத்து பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், சுமந்திரன் ஒட்டுமொத்த ஆயுதப் போராட்டத்தையும் தவறு என்று கூறியுள்ளமை மன்னிக்க முடியாத தவறு என கூறியுள்ளார்.
சுமந்திரனின் கருத்துக்கள் அவ்வப்போது சரச்சையை ஏற்படுத்துவதும் அவை தொடர்பில் வாதப்பிரதி வாதங்கள் உருவாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இது தமிழர்களின் ஒற்றுமை இன்மையை எடுத்துக்காட்டுவதுடன் தென் இலங்கை பேரினவாத சக்திகளுக்கு தீனி போடுவதாக வும் அமைந்துள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிலிருந்து எவ்வாறு மீளுவது என்று பெரும் துயருற்றுள்ளனர். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மோசமான பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.,
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று, கொரோனா தாக்கம் அவர்களை பாதித்துள்ளது. எனவே அவர்களை அதிலிருந்து மீட்கவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் தமிழ் தலைமைத்துவங்கள் தம்மாலான உதவிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
அதை விடுத்து அரசியல் சுயலாபம் கருதியோ அன்றேல், தென்னிலங்கை அரசியல் சக்திகளை திருப்திபடுத்தும் நோக்கிலோ, செயல்படுவது எந்தவகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரைசேர்க்க உதவாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM