(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார்.
அதாவது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கடந்த வருடம் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 18 ஆவது பரிந்துரையானது இவ்வாறு வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதற்கேற்பவே செய்ட் அல் ஹுசேன் நாளை மறுதினம் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இந்நிலையில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் வளாகத்தில் கிடைக்கின்ற தகவல்களின்படி இலங்கையானது மனித உரிமை பேரவையின் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கம் ஏற்கனவே உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கில் பாதுகாப்பு தரபபினர் வசம் உள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் இந்த செயற்பாடுகளில் வாய்மூல அறிக்கையில் திருப்தி வெளியிடப்படவுள்ளதாகவும் அதன்படி மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்றும் கருதப்படுகின்றது.
செய்ட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையை வெளியிட்டதும் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்போது மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளன. விசேடமாக சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கை தொடர்பான தமது கரிசனையை வெளிப்படுத்தவுள்ளன.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையில் அரசாங்கமும் இதனை முழுயைமாக அமுல்படுத்த தயார் என கூறிவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தான் எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்தப்போவதில்லை என கூறிவருகிறார். பிரதமரும் இதற்கு ஒத்த கருத்தை அண்மையில் கூறியிருந்தார். எனவே இது தொடர்பில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் இம்முறை ஜெனிவாவில் அறிவிக்கும் என நம்பப்படுகின்றது.
கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது. முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசேன் இலங்கையானாது நீதி வழங்கும் செயற்பாடு தொடர்பான பொறிமுறையின் உபாய மார்க்கத்தை வெ ளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM