கொரோனா என்ன ? எதற்கும் நாம் அடங்கி விடப்போவதில்லை என்று எவரும் கூறுவார்களேயானால் அது மது பிரியர்களைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
கொரோனா அச்சத்தை அடுத்து மதுக் கடைகள் அனைத்தும் மூடி விட்ட கையோடு சட்டவிரோத சாராய உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனையடுத்து இந்த கசிப்பு உற்பத்தியை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதில் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மறைவிடங்கள் பொலிசாரால் முற்றுகை இடப்பட்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கசிப்புப் போத்தல்களும் மீட்கப்பட்டு அவை இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பெருந்தோட்டப் பகுதி மக்களை இலக்கு வைத்தே இந்த கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக பலரும் கூறுகின்றனர். அவர்கள் பாடுபட்டு உழைக்கும் பணத்தை சூறையாடுவது இந்தக் கசிப்பு உற்பத்தியாளர்களின் நோக்கமாகும்.
அந்தவகையில் நுவரெலியா நகரில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்த மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதன் போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7,500 மில்லி லிற்றர் கசிப்பும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடா மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒருபோத்தல் கசிப்பு 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களில் மாத்திரம் பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு சுற்றிவளைப்பின் போது பெருமளவு கசிப்புப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடி குடியைக் கெடுக்கும் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் அது குறித்தும் மதுப் பிரியர்களுக்கு எந்தவித கவலையோ அக்கறையோ கிடையாது என்பது புதிய விடயமல்ல.
நம் நாட்டில் இந்த நிலை என்றால் இந்தியாவிலும் அதே நிலைதான், தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஒன் லைனில் மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் நாற்பத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் மதுக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து மதுப் பிரியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். அது மாத்திரமன்றி பல்வேறு குற்றச் செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சென்னை மேல் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை விதித்துள்ளது. ஒரு நாளில் மாத்திரம் தமிழ்நாட்டில் 172 தசம் 51 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
மேலும் இரு நாட்கள் மதுக்கடைகள் திறந்து இருந்தால் இந்த தொகை இரு நூறையும் தாண்டி இருக்கும் என்று கூறப்படுகின்றது
மது விற்பனையின் போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை விதித்துள்ளது.
இவ்வுத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். நல்ல வேளையாக இலங்கையில் மதுக்கடைகள் திறக்கவில்லை. திறந்திருந்தால் கொரோனாவின் பெயரால் மதுப் பிரியர்கள் பெரும் விருந்து படைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இனியாவது மதுப் பிரியர்கள் நிலைமையை உணர்ந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் அதிலிருந்து விலகி சுயகட்டுப்பாட்டுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
மாறாக மதுவின் மீதான மோகம் அதிகரித்தால் அது கொரோனாவை விடவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
- வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM