(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், தற்போதும் 92 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அந்த சிறப்புக் குழுக்களின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன கூறினார்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இதுவரை மொத்தமாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 197 எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட 197 பேரில் 92 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளதாக அவர் கூறினார்.
'தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் 119 பேர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் விளக்கமறியலில் உள்ள நிலையில், தற்போதும் 40 பேர் சி.ஐ.டி. தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மொத்தமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 78 ஆகும். அவர்களில் 52 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் ' என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
இதனைவிட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் சில சம்பவங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக விஷேட விசாரணைகள் இடம்பெறுவதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவிகளும் பிரதான விசாரணைகள் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந்நிலையில் அன்றைய தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளுநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM