(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சி.ஐ.டி.விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தாக்குதல்களை நடாத்த சில நாட்களுக்கு முன்னர், அந்த தாக்குதல்களின் பிரதானியாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் கும்பல், கருத்து வேறுபாடால் இரண்டாக பிளவுபட்டதாக விசாரணையாளர்கள் கண்டறிந்த நிலையில், அந்த பிளவானது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றினை நடாத்தும் நோக்கில் உளவுத் துறையினரையும் விசாரணையாளர்களையும் திசை திருப்பும் நாடகம் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுடன் நடாத்திய அவர் இதனை வெளிப்படுத்தினார்.
' கடந்த ஆண்டி ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இதன்போது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றிணை நடாத்த சஹ்ரான் கும்பல் திட்டமிட்டிருந்தமை அப்போதே வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அது குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரானின் கும்பல் 2 ஆக பிரிந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டன. அந்த பிரிவானது திட்டமிட்ட வகையிலேயே இடம்பெற்றுள்ளது. உளவுத் துறையையும் விசாரணையாளர்களையும் திசை திருப்ப அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
அத்துடன் இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், தெற் காசிய நாடொன்றில் தாக்குதல் ஒன்றினை நடாத்திய பின்னர், வெளிநாட்டில் உள்ள சில பயங்கரவாதிகள் இலங்கையை அவர்களது பாதுகாப்பு இல்லமாக பயன்படுத்த வைத்திருந்த இரகசிய திட்டங்கள் பலவும் அம்பலமாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அத்துடன் 2 ஆம் கட்ட தாக்குதலை நடாத்த முன்னர் திட்டமிட்டிருந்த பலரும் சி.ஐ.டி.யினரின் கைதில் உள்ளதாகவும் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
' இஸ்லாம் மதத்தை தவறாக விளக்கப்படுத்தி, அதன்பால் முஸ்லிம் சமூக இளைஞர்களை ஈர்த்து, தீவிரவாதம் போதிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவர் கூட, அவ்வாறு அடிப்படைவாதத்தை முஸ்லிம் இளைஞர்களிடையே போதிக்க, அமைப்புக்களை உருவாக்கி அதில் குண்டுதாரிகளுடன் இணைந்து தலைமையேற்று செயற்பட்டுள்ளமையின் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய அத்தகைய சான்றுகளும் ஏதுவாகின. 'என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது. ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந் நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
தற்போது அந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் சி.ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் இதுவரை 197 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 197 பேரில் 90 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM