கொரோனா வைரஸ் : புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்

16 Apr, 2020 | 12:19 PM
image

பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட்  சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன.

   

இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ' போர் ' ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத -- முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. அது ' போரை ' மேலும் படுமோசமானதாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.

   

கொரோனாவைரஸ் செய்யும்  அழிவுகளை நன்கு விளங்கிக்கொள்கின்ற  ஒரு நாடான சீனா உதவி தேவைப்படுகின்ற நாடுகளுக்கு உதவுவது இயல்பான  மனிதசுபாவத்தில் இருந்து கிளம்புகின்ற வழமையான ஒரு பிரதிபலிப்பாகும். மேற்குலகின் சில அரசியல்வாதிகளும் ஆய்வறிவாளர்களும் அதை அந்த மாதிரிப் பார்க்கவில்லை. அவர்களது புவிசார் அரசியல் வியாக்கியானத்தில், சீனா முகக்கவசங்களையும் காற்றோட்ட சாதனங்களையும் வைத்துக்கொண்டு முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் பிளவை  ஏற்படுத்துவதற்கு முயற்சிவருகின்றது ; அதன் மூலமாக  தாராளவாத உலக ஒழுங்கு என்று கூறப்படும் தற்போதைய ஒழுங்கை  மலினப்படுத்தி,  கொவிட் -- 19 க்கு பின்னரான உலகை முழுமையாக தனது மேலாதிக்கத்தில்  கொண்டுவருவதற்கு வழி வகுக்கின்றது.

   

உலகம் உண்மையில் பெருமளவிலான பரந்த மாற்றத்தின் விளிம்புக்கு வந்துசேர்ந்துவிட்டது. ஆனால், எதுவும் மாறவில்லை என்று கூறுபவர்கள், வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதும்  விரைவாக மாறுதலுக்குள்ளாகிக்கொண்டிருப்பதுமான உலக சமுதாயத்தை தாங்கள்  பார்க்கின்ற முறையை மீளபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.  மாறாக் கருத்துடைய பல மனப்போக்குகள் நிராகரிக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.

     

அவற்றில் முதலாவது மேற்குலகை மையமாகக்கொண்ட மனப்போக்கு.உலகின் அதிகாரமையம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டுவந்திருக்கிறது. அந்த மையம் 19 ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் புரட்சியை( Industrial revolution)  அடுத்தே மேற்கிற்கு நகரத்தொடங்கியது என்பதே உண்மை. அண்மைய தசாப்தங்களில், வளர்முக நாடுகள்  கூட்டாக எழுச்சிபெற்றதையும் சந்தைப்பொருளாதாரங்கள் மேலெழுந்தையும் அடுத்து உலக அரசியல் புதிய மாற்றங்களைக் கண்டுவந்திருக்கிறது.

   

" நாம் பல அதிகார மையங்களைக் கொண்ட ஒரு உலகில் புதியதொரு சர்வதேச சூழலில் வாழ்கிறோம்" என்று முன்னாள் அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் நீண்டகால அனுபவமிக்க புவிசார் அரசியல் நிபுணருமான ஹென்றி கீசிங்கர் ஒருதடவை கருத்து வெளியிட்டிருந்தார்.

   

இரண்டாவது, ஒரு தரப்பு முழுமையான பயன்களையும் பெற, மற்றைய தரப்பு எல்லாவற்றையும் இழந்துவிடுகின்ற ( Zero -- sum game) ) தன்மையான சர்வதேச உறவுகளின் தன்மை பற்றிய மனப்போக்கு. உலகம் பூராவுமுள்ள நாடுகள் பெருமளவுக்கு உறவுத்தொடர்புடையவையாகவும் ஒன்றில் மற்றது தங்கியிருப்தாகவும் மாறிவிட்ட நிலையில், இந்த மனப்போக்கு ஏற்கெனவே  வழக்கொழிந்துபோனது.

   

இந்த உலகமயமாக்கல் யுகத்தில் ( Era of globalization)  மனிதகுலத்தின் பொதுநலன்களை பேணிப்பாதுகாப்பதே நாடொன்றின் நலன்களை பாதுகாப்பதற்கு சிறந்த வழி என்பதற்கு மறுதலிக்கமுடியாத இன்னொரு சான்றை தருவதாக மாத்திரமே உலகளாவிய தொற்றுநோயான  கொவிட் -- 19 க்கு எதிரான தற்போதைய போராட்டம் அமைந்திருக்கிறது.

   

மூன்றாவது, இணைக்கமுடியாத கோட்பாட்டுப் பிளவுகளாகும். (Ideological divides) பொதுநலன்களை நாடவேண்டிய தேவை இருக்கின்ற நிலையில், கடக்கமுடியாத இடைவெளி என்று எதுவும் இருக்கமுடியாது என்பதே உண்மை.  பனிப்போர் காலத்தில் (Cold War)  ) சீனாவும் அமெரிக்காவும் அவற்றின் உறவுகளை சுமுகமாக்குவதற்கு தீர்மானித்தபோது இதுவே நடந்தது ; வேறுபட்ட கோட்பாட்டு நம்பிக்கைகளைக் கொண்ட சுமார் 200 நாடுகளின் பிதிநிதிகள் 2015 ஆம் ஆண்டில்  பாரிஸ் நகரில் ஒன்றுகூடி காலநிலை மாற்றத்தின் விளைவான பாதிப்புக்களை தணிப்பதற்காக பசுமைஇல்ல வாயுக்களை ( Green house gas emissions) வெளியிடுவதை குறைப்பதற்கு உடன்படிக்கையொன்றை செய்துகொண்டவேளையிலும் இதுவே நடந்தது. அவற்றுக்கிடையிலான கோட்பாட்டு இடைவெளிகள் கடக்கமுடியாதவையாக தொடர்ந்து நிலைக்கவில்லை.

   

சீனா மீது வசைமாரி பொழிந்துகொண்டிருப்பவர்கள் மற்றும் எல்லோரையும் பொறுத்தவரை, இன்னமும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் கொவிட் --19 தொற்றுநோய் தற்போதைய உலக ஒழுங்கில் இருக்கக்கூடிய குறைபாடுகளை அடையாளங்கண்டு எதிர்காலத்துக்கான அலையைப் பற்றிப்பிடிப்பதற்கான வாய்ப்பொன்றை வழங்குகிறது.

     

உலகளாவிய ஆட்சிமுறையில் அதிகரித்துவரும் பற்றாக்குறைகளே பெரிய அக்கறைக்குரியதாக இருக்கிறது.கொவிட் -- 19 தொற்றுநோய்க்கு மத்தியில், அமெரிக்க பொது அச்சுறுத்தலுக்கு எதிராக உலகளாவிய ஒன்றிணைந்த  நடவடிக்கைக்கு ஆதரவுதிரட்டுவதில் தனக்கிருக்கும் பொறுப்பை தாங்கிக்கொள்வதற்கு இதுவரையில் தவறியிருக்கிறது என்பது மாத்திரமல்ல, உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியிருப்பதன் மூலமும் கொவிட் -- 19 நோயை அரசியல் மயப்படுத்தியிருப்பதன் மூலமும் மற்றையவர்களின் முயற்சிகளை மலினப்படுத்தியும் இருக்கிறது.

   

அமெரிக்காவின் இந்த செயல், இலண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு " மிகவும் பாரிய சவாலாக அமைந்த நெருக்கடி " என்று வர்ணிக்கப்படக்கூடிய நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு  உலக ஒருமைப்பாடும்  ஒருங்கிணைப்பும் அவசியமாக தேவப்படுகின்ற இன்றைய இடர்மிகு தருணத்தில் உலகின் ஒரே வல்லரசிடமிருந்து உலகம் எதிர்பார்க்கின்ற பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.

   

இது அபாய எச்சரிக்கை விடுக்கும் ஒரு  பேச்சு அல்ல. " இந்த புமிப்பந்தில் மனிதனின் தொடர்ச்சியான ஆதிக்கத்துக்கு தனியொரு மிகப்பெரிய அச்சுறுத்தில் வைரஸ்தான் " என்று நோபல் பரிசுபெற்ற உயிரியல் நிபுணர் ஜோஷுவா லெடபேர்க் ஒரு தடவை எச்சரிக்கை செய்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

     

ஆனால், தொற்றுநோய்கள் மாத்திரம் மனிதகுலம் எதிர்நோக்குகின்ற ஒரே பிரதான சவால் என்று இல்லை.காலநிலை மாற்றம், பயங்கரவாதம், எல்லைகடந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்டவகையிலான குறறச்செயல்கள் ஏனைய சவால்களில் அடங்குகின்றன. இவையும் கூடுதல் பலம்பொருந்திய உலக ஒரங்கிபை்பையும் கூடுதல் செயலுறுதிமிக்க ஆட்சிமுறையையும் வேணடிநிற்கின்றன.

   

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உறுப்புநாடுகளாகக்கொண்ட வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதார அமைப்பான பிறிக்ஸின் ( BRICS) கடந்த வருடத்தைய உச்சிமகாநாடு பிரேசிலியா நகரில் நடந்தபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீன ஜனாதிபதி சி ஜின்பிங், " சர்வதேச விவகாரங்கள் ஒரு நாடு  அல்லது ஒருசில நாடுகிளினால் தீர்மானிக்கப்படுவதாக இல்லாமல், பரந்தளவிலான கலந்தாலோசனைகளின ஊடாக கையாளப்படவேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார். அதன் காரணத்தினால்தான் பெய்ஜிங் ' கூடுதலானளவுக்கு நீதியானதும் ஒப்புரவானதுமான சர்வதேச ஒழுங்கொன்றை ஆதாரக்கட்டுமானமாகக் கொண்ட ஜனநாயகரீதியான -- பல்துருவ ( Multipolar)  ) உலகொன்றை நியாயப்படத்திப் பேசிவருகின்றது.

   

கொவிட் -19 தொற்றுநோய்க்கு பின்னரான உலகு ஒருபோதுமே முன்னையதைப் போன்று இருக்கப்போவதில்லை.ஆனால், இந்த மாறுதல் மனிதகுலத்தின் பொதுநன்மைக்கானதாக அமைவதற்கு உலகளாவிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படமுன்வரவேண்டும்.அதற்காக கட்டாயம்  செய்யப்படவேண்டிய காரியங்களில் ஒன்று புவிசார் அரசியல் விளையாட்டுக்களை ( Geopolitical games) கைவிடுவதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04