(எம்.மனோசித்ரா)
சீனாவின் கவனக்குறைவினால் ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருந்தால் அந்நாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் வலியுறுத்தியிருந்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஆங்கில பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியருக்கு அனுப்பியுள்ள கடிதம் நாட்டில் ஊடகங்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
எம்மால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஆங்கில பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து எமது இயக்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சீன தூதரகம் அல்லது சீனா தொடர்பில் ஏதேனும் செய்திகள் பத்திரிகைகளில் அல்லது வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டால் அவை தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு சீன தூதரகத்திற்கு உள்ள உரிமையை நாம் மதிக்கின்றோம்.
எனினும் செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு கடிதம் அனுப்பி தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதானது நாட்டில் காணப்படும் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
அவ்வாறு செய்வதன் மூலம் பல ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சீன - இலங்கை நட்புக்கு ஏற்பட்டும் சேதத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
சீன அரசாங்கம் அல்லது சீனத் தூதரகம் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் அந்த செய்திக்கான திருத்தத்தினை பிரசுரிக்குமாறு அல்லது அது தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து குறித்த ஊடகத்தின் பிரதான ஆசிரியருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க முடியும்.
அவ்வாறில்லை எனில் அது தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் முறைப்பாடளிக்க முடியும். இலங்கையில் இவ்வாறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை இராஜதந்திரகளுக்கு எமது இயக்கத்தினால் கற்றுதர வேண்டியதில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
சீனத் தூதுவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எமது இயக்கம் பொது அறிவு மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக பக்க சார்பாகவும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த கருத்தினை நாம் புறக்கணிக்கின்றோம். அத்தோடு சீனாவின் கவனக்குறைவினால் கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது என்றால் அதற்காக சீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆலோசனையுடனேயே கூறினோம்.
தற்போதும் எமது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எம்மால் அவ்வாறான கருத்தினை முன்வைப்பதற்கு சீன தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டுமா என்று இலங்கைக்கான சீனா தூதரகத்திடம் கேள்வியெழுப்பும் அதேவேளை கருத்துகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் எமது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
இந்த நெருக்கடியான சூழலில் சீன அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வழங்கப்பட்டுள்ள உதவிகள் பற்றிய உண்மையை மறைக்க வேண்டிய அவசியமல்ல என்பதோடு அவை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்குமுள்ள உரிமைகளுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்தப்படாது என்பது எமது கருத்தாகும்.
எவ்வாறிருப்பினும் சீனத் தூதுவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் அரசியலமைப்பின் 14(1) அ உறுப்புரையில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் என்பவற்றுக்கு பாதகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.
எனவே இதற்காக எடுக்கப்பட வேண்டிய அதிகபட்ச நடவடிக்கை எமது இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கையில் சில நிறுவனங்கள் சீனாவிற்கு சார்பாக செயற்படுகின்ற போதிலும் நாம் அவ்வாறு செயற்பட தயாராக இல்லை என்பதோடு இலங்கை சீனாவின் ஒரு வலயமல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
எனவே தூதுவரால் வெளியிடப்பட்ட அறிக்கையை தாமாக நீக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம். அவ்வாறில்லை என்றால் இலங்கைக்கான சீனத் தூதுவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று சீன அரசாங்கத்திடம் கோரும் அதே வேளை, அந்நாடு அவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் இந்நாட்டு நுகர்வோர் சீன உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தூதரகத்தின் அவதானத்திற்கு கொண்டு வருகின்றோம்.
எம்மால் வலியுறுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமானால் நாட்டு மக்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, வெளிநபர்களால் உள்நாட்டு ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதிலிருந்தும் மீட்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM