ஹேமாஸ் குரூப்பின் துணை நிறுவனமான அட்லஸ் அக்சிலியா பிஎல்சி, தனது புத்தாக்க கண்டுபிடிப்பான ஒடோமேடட் கைடட் வெயிக்கல்(Automated Guided Vehicle {AGV}) ரொபோ இயந்திரத்தை ஹோமகம ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சைகளை வழங்க போராடும் மருத்துவ குழுவினருக்கு உதவியாக இந்த ரொபோ இயந்திரம் அமைந்திருக்கும். இலங்கையில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இவ் ரொபோ இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை, நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இது போன்ற சாதனங்களை தயாரிக்க ஆர்வமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ஹோமகம ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் ஊழியர்களுடன் இணைந்து இந்த சாதனத்தின் பிரயோகம் தொடர்பான இனங்காணல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.
கொழும்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். இந்திக ஜாகொட இந்த இயந்திரத்தின் கண்டுபிடிப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “இது போன்றதொரு இயந்திரமொன்றை உள்நாட்டு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேன்மையான தொழில்நுட்ப அபிவிருத்தி அம்சங்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இது போன்ற சாதனங்களினூடாக, சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தம்மை நோய்த் தொற்று ஆபத்துக்கு வெளிப்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்துடன் கொவிட்-19க்கு எதிராக போராடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனுகூலமாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்த ரோபோ இயந்திரத்தினால் நோயாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியும் என்பதுடன் வெப்பநிலை அளவீடு போன்ற அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அத்துடன் வைத்தியர்களுக்கு ஒரு இடத்திலிருந்தவாறு நோயாளிகளை கண்காணிக்கக்கூடியதாக இருக்கும். இந்த ரோபோ இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கமரா ஊடாக அவர்களுடன் தொடர்பாடல்களை பேணக்கூடியதாக இருக்கும். மேலும், வயர்லெஸ் சார்ஜிங் ஊடாக, இந்த ரொபோ தன்னை சுயமாக சார்ஜ் செய்து கொள்ளும். இதனால் சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் இதன் அருகில் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுகின்றது.
எனவே, இந்த ரோபோ பயன்பாட்டினூடாக நோயாளர் கண்காணிப்பு தன்னியக்கமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு தமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி இடர்கள் நிறைந்த சூழலில் பாதுகாப்பாக உயிர்களை காக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த நடவடிக்கை தொடர்பில் அட்லஸ் அக்சிலியா பிரதம நிறைவேற்று அதிகாரி அசித சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரவல் காரணமாக எமது மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் இன்றைய சூழலில் எதிர்நோக்கும் சவால்களுக்கு எமது அணியினரால் தீர்வொன்று வடிவமைக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த புத்தாக்கத்தை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். கொவிட்-19 நோயாளர்களுக்கு மாத்திரம் சிகிச்சையளிக்கும் ஹோமகம வைத்தியசாலைக்கு இந்த ரோபோ இயந்திரத்தை நாம் நன்கொடையாக வழங்கியுள்ளோம்.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “60 வருடங்களுக்கு மேலாக தேசிய ரீதியில் சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் எனும் வகையில், நாட்டில் முதலிடுவதனூடாக தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கி வருகின்றௌம். எமது அணியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த புத்தாக்கம், அவசர தேவை காணப்படும் ஒரு தருணத்தில் எம்மால் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு எமது சுகாதார துறையைச் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.” என்றார்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் போது தற்போது சுகாதார ஊழியர்கள் Personal Protective Equipment (PPE) அங்கியை பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. இந்த ரோபோ இயந்திரத்தின் கண்டுபிடிப்பினூடாக, இந்த சுமை பெருமளவு குறைக்கப்படும் என்பதுடன், அத்தியாவசியமான நிலைகளின் போது மாத்திரம் சுகாதார துறையைச் சேர்ந்தவர்களுக்கு நோயாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.
ஹோமகம ஆதார வைத்தியசாலையின் மருத்துவ உயரதிகாரி வைத்தியர். ஜனித ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “இது போன்றதொரு சூழலில் எமது ஊழியர்களை பாதுகாப்பாக பேணுவது மிகவும் முக்கியமான விடயமாகும். ஒரு ஊழியருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, முழு அணியைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் முழுச் செயற்பாடும் முடங்கும் நிலை ஏற்படலாம். ரோபோ ஒன்றின் உதவியுடன் தாதியியல் உதவிச் சேவைகளை முன்னெடுப்பது என்பது, ஊழியர்களுக்கு தொற்று ஏற்படுவதை பெருமளவில் குறைப்பதால், மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பினூடாக, அரசாங்கத்துக்கு பெரிதும் பங்களிப்பாக அமைந்துள்ளது,
ஏனெனில் அதிகளவு செலவீனம் நிறைந்த Personal Protective Equipment (PPE) அங்கிகளின் பயன்பாட்டை குறைப்பதாக அமைந்துள்ளது.” என்றார். அட்லசைச் சேர்ந்த பிரதம செயற்பாட்டு அதிகாரியும் செயற்பாடுகளுக்கான பணிப்பாளருமான விராஜ் ஜயசூரியவின் தலைமையிலான உற்பத்தி மற்றும் பொறியியல் பிரிவின் புத்தாக்க அணியினரால் இந்த ரோபோ இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்லஸ் உற்பத்தி பிரிவினுள் பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்த அணியினால் முதலில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டிருந்தது.
கொரோனாவைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, தமது ரோபோ மாதிரியை வைத்தியசாலைகளில் நடமாடும் மருத்துவ உதவியாளரின் பணியை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அட்லசின் விராஜ் ஜயசூரிய தெரிவிக்கையில், “எமது அணியினர் முழு ரோபோ இயந்திரத்தையும் ஆரம்பத்திலிருந்து வடிவமைத்திருந்ததுடன், கொவிட்-19 நோயாளர்களை கண்காணிக்கக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்காக கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பணியாற்றிய வண்ணமுள்ளனர். நோயாளர்களுக்கு முகங்கொடுக்கும் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்த ரோபோ இயந்திரத்தின் உதவியுடன், சிகிச்சை பிரிவினுள் மனிதர்களை அனுப்ப வேண்டிய தேவையை எம்மால் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த ரோபோ இயந்திரத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய நிறுவனங்களை எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நாம் வரவேற்கின்றௌம். அதனூடாக, கொவிட்-19 கட்டுப்படுத்துவதற்காக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவியாக மேலும் பல இயந்திரங்களை தயாரித்து ஈடுபடுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
இந்த கண்டுபிடிப்பை மேம்படுத்துவதற்காக, இப்புத்தாக்கத்தின் வடிவமைப்பு மற்றும் காப்புரிமை ஆகியவற்றை அட்லஸ் தம்வசம் கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM