உலகில் சீனாவை விடவும் கொவிட் - 19 கொரோனா வைரஸினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இன்று (27) மாலை உலகலாவிய கொரோனா வைரஸ் பரவல் நிலவரங்களைக் கண்காணிக்கும் அமெரிக்காவின் ஜோன் கொகின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞான பொறியியல் நிலையம் வெளியிட்ட விபரங்களின்படி அமெரிக்காவில் 84,404 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 5 மணித்தியால இடைவெளியில் அமெரிக்கா முழுவதும் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 10,000 இனால் அதிகரித்தது.
நியூயோர்க் மாநிலம் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மையமாக மாறியிருக்கிறது. அங்கு 37,802 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. நியூஜேர்ஸியில் 6,866 பேருக்கும், கலிபோர்னியாவில் 3,802 பேருக்கும் தொற்று ஏற்பட்டதாக அப்பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. கொவிட் - 19 இற்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை இன்று மாலைவரை 1,178 ஐ எட்டிய அதேவேளை, அவற்றில் 281 மரணங்கள் நியூயோர்க்கில் இடம்பெற்றிருக்கின்றன. வாஷிங்கடன் மாநிலத்தின் கிங்ஸ்டன் பிராந்தியத்தில் 100 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
ஜோன்ஸ் கொகின்ஸ் பல்கலைக்கழத் தரவுகளின்படி வியாழக்கிழமை மாலைவரை சீனாவில் (பிரதான நிலப்பரப்பு, ஹொங்கொங், மக்காவூ மற்றம் தாய்வான் பிராந்தியங்கள் உட்பட) 82,034 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. பெய்ஜிங் நேரப்படி புதன்கிழமை மாலைவரை சீனப் பிரதான நிலப்பரப்பில் 81,285 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு அறிவித்தது. அதேவேளை ஹொங்கொங் விசேட நிர்வாகப் பிராந்தியத்தில் 410 பேரும், மக்காவூ விசேட பிராந்தியத்தில் 30 பேரும், தாய்வானில் 235 பேரும் தொற்றுக்கு இலக்காகியதாக அந்தத் தரவுகள் உறுதிசெய்துள்ளன.
உலகலாவிய ரீதியில் தொற்றுக்கு இலக்கானோரின் பிந்திய எண்ணிக்கை 526,044 என்றும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 23,709 என்றும் ஜோன்ஸ் கொகின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றது.
இது இவ்வாறிருக்க சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இன்று (27) வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசினார். கொவிட் - 19 தொடர்பான தகவல்களை ஒழிவுமறைவின்றி வெளிப்படையாகவும், பொறுப்பான முறையிலும் உலக சுகாதார ஸ்தாபனத்துடனும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடனும் சீனா பகிர்ந்து வந்திருக்கிறது என்று ட்ரம்பிற்குக் கூறிய சீ ஜின்பிங், கொரோனா வைரஸின் மரபணுக் கட்டமைப்பு, பரவல் தடுப்பில் பெற்ற அனுபவம், கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை அனுபவங்கள் குறித்து நாடுகளுக்குத் தகவல்களை வெளியிடுவதற்கு சீனா எவ்வித தாமதமும் இன்றிச் செயற்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறான செயற்பாடுகளை சீனா தொடரும் என்று உறுதியளித்த சீ ஜின்பிங், இந்தத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகநாடுகள் வெற்றியடையும் வகையில் தனது நாடு செயற்படும் என்றும் இந்த கொவிட் - 19 தேசிய எல்லைகளையோ, இனங்களையோ பற்றி அக்கறைப்படாது: இது முழு மனிதகுலத்திற்கும் பாதிப்பைக் கொண்டுவரும் பொது எதிரி என்று ட்ரம்பிற்குச் சுட்டிக்காட்டினார்.
ஜி-20 பிரத்யேக வீடியோ உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி நிகழ்த்திய உரையைத் தான் அவதானமாக செவிமடுத்ததாகவும், அதில் உலகநாடுகளின் தலைவர்களினால் முன்வைக்கபட்ட யோசனைகளை மெச்சுவதாகவும் ட்ரம்ப் பதிலளித்தார். வைரஸ் பரவலுக்கு எதிராக சீனா முன்னெடுத்த நடவடிக்கைகளை சீன ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப், இந்த வைரஸினால் இரு நாடுகளுமே சவாலை எதிர்நோக்குவதாகவும், தொற்றுப்பரவலைத் தோற்கடிப்பதில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவல் தடுப்பில் சீனாவின் அனுபவங்கள் மிகவும் பிரகாசமானவையாக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி, வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பதில் சீனாவும், அமெரிக்காவும் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்குத் தனிப்பட்ட முயற்சியை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இன்றைய இடர்மிக்க சூழ்நிலையில் பொதுவான நலன்களுக்காகத் தொடர்புகளைப் பேணுவதற்கு இரு தலைவர்களும் இணங்கிக்கொண்டனர்.
ஸ்பெயின்
இது இவ்வாறிருக்க ஏனைய நாடுகளின் வைரஸ் பாதிப்பு நிலவரங்களைப் பொறுத்தவரை ஸ்பெயினில் ஒரு நாளில் மிகவும் கூடுதலான அதிகரிப்பு இன்றைய தினம் ஏற்பட்டது. இன்று மாலை வரையான 24 மணிநேரத்தில் 769 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இதனுடன் சேர்த்து ஸ்பெயினில் மரணமானவர்களின் எண்ணிக்கை 4,858 ஐ எட்டியது. இப்போது அந்த நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 64,689 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான்
ஈரானில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரையில் 32,332 ஆக உயர்ந்த அதேவேளை, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,378 என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்தது. இதேவேளை பிரான்ஸில் 1,696 பேர் மரணமiடைந்ததாக நேற்று மாலை வரையிலான விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்கா கண்டம்
ஆபிரிக்கா கண்டத்தில் இதுவரையில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3,243 என்றும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 83 என்றும் பதிவாகியிருக்கிறது. தென்னாபிரிக்காவில் கொவிட் - 19 இன் விளைவான முதல் மரணம் பதிவாகியிருக்கிறது. இப்பொழுது அந்த நாட்டில் 1000 இற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
(த கார்டியன், சின்ஹுவா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM