உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் புதிய முறைமையில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. எல்லை நிர்ணய சபையின் வேலைத் திட்டத்திற்கு இறுதி நாள் காலக்கெடு இதுவரையில் கொடுக்க முடியாது உள்ளது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றும் பூகோள அமைவுகளின் அடிப்படையிலும், அரனாயகவில் புதிய குடியேற்றத்தின் பின்னரும், வில்பத்துவில் சட்டவிரோத குடியேற்றம் தவிர்ந்தும் எல்லைநிர்ணயம் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போட்டு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதாக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மஹிந்த அணியனர் மட்டும் அல்லாது எமது கட்சியிலும் சிலர் அவ்வாறன விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ஒருபோதும் என்னால் ஏற்றுகொள்ள முடியாது. இதுவரை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த முறைமையில் எம்மால் தேர்தலை நடத்த இயலாது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்மானிக்கப்பட்ட எல்லை நிர்ணய முறைமைகளை இப்போதும் எம்மால் நடைமுறை படுத்த இயலாது. புதிதாக அனைத்து மாவட்டங்களினதும் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாற்றம் செய்யவேண்டியுள்ளது. எல்லை நிர்ணயம் சரியான முறையில் மேற்கொள்வதென்பது இலகுவில் செய்யகூடிய விடயம் அல்ல.
மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் புதிய எல்லை நிர்ணய வேலைகளை ஆரம்பித்து இந்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நிறைவு செய்ய முடியும் என கருதப்பட்டது. எனினும் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மேற்கொண்ட போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
அதேபோல் மக்களின் சார்பில் பல்வேறு முறைபாடுகள் முன்வைக்கப்பட்டும் உள்ளன. ஆகவே அவற்றையும் கருத்தில் கொண்டு சரியான முறைமையை கையாண்டு இந்த எல்லை நிர்ணய வேலைகளை செய்வதென்பது இலகுவான காரியம் அல்ல. எல்லை நிர்ணய சபையின் வேலைத் திட்டத்திற்கு இறுதி நாள் காலக்கெடு இதுவரையில் கொடுக்க முடியாது உள்ளது.
எனினும் இப்பொது வரையில் பெரும்பாலான மாவட்டங்களில் எல்லை நிர்ணய வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன. இன்னும் எட்டு மாவட்டங்களின் எல்லை நிர்ணய பணிகள் மட்டுமே உள்ளன. அவற்றை விரைவில் முடிக்க நாம் முயற்சித்து வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் இன்னும் சில தினங்களில் முழுமைப்படுத்த முடியும் என நம்புகின்றோம். கால அவகாசம் தேவைப்படுகின்றது. அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பழைய முறைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என அனைத்து கட்சிகளும் தெரிவிக்கின்றன. ஆனால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர். புதிய முறைமையில் தேர்தலை நடத்தி மக்களின் பூரணமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் எனின் அதற்கான கால அவகாசத்தையும் எமக்கு கொடுக்க வேண்டும்.
நாம் கட்சி சார்ந்து இந்த வேலைகளை செய்ய முடியாது. அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ அணியினருக்கு அஞ்சியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அஞ்சியும் நாம் தேர்தலை பிற்போடவில்லை. மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகொள்வது கடினமான காரியம் அல்ல. எனினும் நாம் மக்களின் முழுமையான பங்களிப்பை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம்.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் புதிய குடியேற்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுமுள்ளன. குறிப்பாக வடக்கில் பலாலியிலும், கிழக்கில் சம்பூர் பகுதியிலும் புதிய குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அகவே அதற்கமைய புதிய எல்லை நிர்ணய முறைமை அவசியமாகின்றது. ஆகவே வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும் அதேபோல் பூகோள அமைவுகளின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அதேபோல் அரநாயக பகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் குடியேறக் கூடாது என புதிதாக சில பகுதிகளையும் அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டும். இறுதியாக மக்கள் குடியமர்த்தப்பட்டவுடன் எல்லை நிர்ணய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
எனினும் வில்பத்து வனப்பகுதியில் நிலைமைகள் அவ்வாறு இல்லை. இங்கு சட்டவிரோத குடியேற்றமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே வாழ்கின்றனர்.எனவே சட்டவிரோத குடியேற்றம் என கூறும் பகுதிகளில் எல்லை நிர்ணயம் செய்யப்படாது. அது தவிர்ந்து ஏனைய பகுதிகளை கருத்தில் கொண்டு செயற்படுவோம். எவ்வாறு இருப்பினும் தேர்தல் நடத்துவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM