சேகர் குப்தா
புதுடில்லி, ( த பிரிண்ட் ) உலகளாவ பரவும் கொரோனாவைரஸ் உலக மூலோபாய ஒழுங்கை ( Global Strategic Order ) அதன் அதியுயர்ந்த மட்டத்தில் குழப்புகின்றது. பனிப்போரின் (Cold War ) முடிவுக்குப் பின்னர் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் நெருக்கடிகளின்போது ஒத்துழைத்துச் செயற்பட்டன. ஆனால், இப்போது வைரஸ் அமெரிக்காவையும் சீனாவையும் வேறு எதனாலும் செய்திருக்கமுடியாத அளவுக்கு எதிரெதிராக நிறுத்தியிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் கடந்த புதன்கிழமை செய்தியாளர்கள் மகாநாட்டில் கொரரோனாவைரஸை ஒரு சீன வைரஸ் ( China Virus) என்று அடிக்கடி குறிப்பிட்டார். அவ்வாறு வர்ணிப்பது இனவெறித்தனமானது என்று நினைக்கவில்லையா என்று செய்தியாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேட்டபோது, அந்த வைரஸின் தோற்றுவாய் சீனாவாகவே இருப்பதால் ' சீனவைரஸ் ' என்று குறிப்பிடுவதில் தவறு எதுவும் இல்லை என்று அவர் பதிலளித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
வீயா ஜியாங் என்ற இன்னொரு செய்தியாளர் வெள்ளைமாளிகை அதிகாரிகளில் ஒருவர் கொரோனாவைரஸை ' குங் ஃபுளூ ' ( Kung -- Flu) என்று குறிப்பிட்டதை அமெரிக்க ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி அவ்வாறு அழைப்பது இனவெறித்தனமானது இல்லையா என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் சீனாவில் இருந்து வந்த வைரஸ் என்பதால் சீனவைரஸ் என்று தான் அதை அழைக்கவேண்டும் என்று மீண்டும் கூறினார்.
ட்ரம்ப் அவ்வாறு ஏன் திரும்பத்திரும்ப கூறினார் என்பதை விளங்கிக்கொள்வதற்கு நாம் அதன் பின்னணியை நோக்கவேண்டும்.
கடந்த வருடம் சீனாவின் வூஹான் நகரில் இடம்பெற்ற உலக இராணுவ ஒத்திகைகளின்போது அமெரிக்கப் படைகளே அந்த வைரஸை கொண்டுவந்திருக்கக்கூடும் என்று சீனா கூறியிருந்தது. மீண்டும் அதை சீனவைரஸ் என்று அழைத்ததன் மூலம் ட்ரம்ப் சீனாவின் அந்த குற்றச்சாட்டை ஒரேயடியாக மறுத்தார். வைரஸின் தோற்றுவாய் தொடர்பில் இரு தரப்பினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, வூஹானின் ஈரலிப்பான சந்தைகளில் இருந்தே -வௌவால்களில் இருந்து எறும்புகளை உண்ணும் ஒருவகை பிராணிக்கு ( பங்கோலின்) தாவியதாக அந்த வைரஸ் தோற்றம் பெற்றது என்பதே உண்மை என்று சொல்லப்படுகிறது. வைரஸ் பரவலுக்கு சீனா ஆரம்பத்தில் காட்டிய பிரதிபலிப்பை குற்றஞ்சாட்டியதிலேயே ட்ரம்பின் கருத்து தகுதியுடையதாக தெரிகிறது.
ஆரம்பக்கட்டங்களில் சீனா பிரச்சினையை மூடிமறைப்பதற்கு முயற்சித்தது.கடந்த வருடம் டிசம்பர் பிற்பகுதியில் நிபுணர்கள் இந்த வைரஸை கண்டுபிடித்ததாகவும் ஆனால், சீன அதிகாரிகள் கொரோனாவைரஸ் மாதிரிகளை அழித்துவிடுமாறு கேட்டதாகவும் கூறப்பட்டது.வைரஸ் பரவத்தொடங்கியபோது வூஹானில் உள்ள மக்களுக்கு அதைப் பற்றி எந்த புரிதலும் இருக்கவில்லை.உலகசாதனை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக 40 ஆயரம் குடும்பங்கள் பங்கேற்ற உணவுத்திருவிழாவொன்றையும ( Potluck banquet) கூட வூஹான் நகரம் நடத்தியது.
வைரஸ் பற்றி சீனா கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டிருந்தால், 95 சதவீதமான தொற்றுக்களை தவிர்த்திருக்கமுடியும்.
வெளியுறவு விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட ஒரு பிரபல கல்விமான் வால்டர் ரசல் மீட் " ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா " ( China is the real sick man of Asia ) என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்ணலில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோடு சேர்ந்து துரிதமாக வளர்ச்சியடைய முடியாததாக ஒட்டோமன் சாம்ராச்சியம் பின்தங்கியிருந்தபோது அதைக் குறிக்கவே ஆரம்பத்தில் இந்த " நோயாளி " என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.ஆனால், பின்னரான காலகட்டத்தில் சீனாவின் பகுதிகள் ஜப்பானினதும் பிரிட்டனினதும் காலனிகளாக வந்தபோது சீனாவைக் குறிப்பதற்கு " ஆசியாவின் நோயாளி " என்ற பதம் பயன்படுத்தப்படலானது .
வால்டர் ரசல் மீட்டின் அந்த கட்டுரைக்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பின.வோல் ஸட்ரீட் ஜேர்ணலின் செய்தியாளர்களில் சிலரை சீனா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக, சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு ஊடக நிறுவனங்களுக்காக அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த சீனச் செய்தியாளர்களில் 40 சதவீதமானவர்களை நாடுதிருப்பியனுப்புமாறு ட்ரம்ப் நிருவாகம் உத்தரவிட்டது.
நியூயோர்க் ரைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்ணல் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த அமெரிக்க செய்தியாளர்களை வெளியேற்றுவதாக சீனா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த செய்தியாளர்கள் ஹொங்கொங்கில் இருந்தும் கூட பணியாற்ற இயலாமல் போகும்.
முற்றிலும் மெய்யாகவே பூகோளமயமாக்கப்பட்ட ஒரு உலகில் முதலாவது உலகளாவிய தொற்றுநோய் இதுவேயாகும்.அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுசேர்ந்து செயற்படவேண்டிய ஒரு நேரத்தில், அவை மிகவும் கசப்பான தகராறில் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 1989 ஜூனில் பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் படுகொலைகள் இடம்பெற்றதற்கு பின்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இத்தகைய கடுமையான தகராறு இப்போதுதான் மூண்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM