ஊழல் மோசடிக்காரர்களை எமது கூட்டணியில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்காக எமது வாயில்கள் திறந்தே இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின்போது குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- தாய்க் கட்சியான ஐ.தே.கவை உங்களுடைய கூட்டில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
பதில்:- வெவ்வேறு நபர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த வண்ணமுள்ளனர். ஐ.தே.கவை எமது அணிக்குள் உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சில முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
எது எவ்வாறாயினும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது ஐக்கிய மக்கள் சக்தியானது பொதுத்தேர்லுக்கு முகங்கொடுப்பதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது.
பங்காளிக் கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், மக்கள் சந்திப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாகிவிட்டது. அவ்வாறான நிலையில் பரந்துபட்ட கூட்டணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளோம்.
கேள்வி:- நீங்கள் பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தாலும் நிபந்தனைகள் இடுவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- அவ்வாறில்லை. நாம் புதிய அரசியல் கலாசாரத்துடன் கொள்கைரீதியாக ஒருங்கிணைவுடனேயே பயணத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆகவே ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை உள்ளீர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இறுக்கமாக இருக்கின்றோம்.
கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையில் பொதுத்தேர்தலை முன்னெடுப்பதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டபோது சின்னம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லையா? இறுதித் தருணம் வரையில் அவ்விடயம் நீடித்து தற்போது முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதல்லவா?
பதில்:- நாங்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகால உறுப்பினர்களாக இருக்கின்றோம். யாப்பு சம்பந்தமான விடயங்களை நாங்களும் அறிந்துள்ளோம். அந்த யாப்பில் சின்னம் சம்பந்தமான சட்ட ஏற்பாடுகள் எவையும் முன்னர் காணப்படவில்லை. அவ்வாறான நிலையில் திடீரென்றே அது குறித்த சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கூட்டணி குறித்து பேச்சுக்கள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் தான் சின்னம் சம்பந்தமான விடயத்தினை வெளிப்படுத்தினார்கள். ஆகவே பொதுச்சின்னம் தொடர்பில் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம். எனினும் அது வெற்றியளிக்கவில்லை.
கேள்வி:- பழமைவாய்ந்த அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் ஐ.தே.கவிலிருந்து தாங்கள் உள்ளிட்ட அணியொன்று வெளியேறியிருப்பதானது அக்கட்சிக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும் என்பதை உணரவில்லையா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ச்சியாக பின்னடைவுகளே ஏற்பட்டிருக்கின்றன. 2005ஆம் ஆண்டிலிருந்து 2015வரையிலான காலப்பகுதியில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கூட கட்சியிலிருந்து தெரிவு செய்ய முடியாத நிலைமையே நீடித்து வந்திருந்தது. இந்த நிலைமை 2019 இல் தான் மாற்றமடைந்திருக்கின்றது.
இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியினை விட்டுக்கொடுப்பதற்கு அவர் (ரணில் விக்கிரமசிங்க) தயாராக இல்லை.
2025 இல் நடைபெறும் தேர்தலில் கூட அவரால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாத நிலைமை தான் காணப்படுகின்றது. அதனை அவர் புரிந்துகொண்டிருக்கின்றபோதும் தலைமைப் பதவியை பற்றிப் பிடித்திருக்கின்றமை ஏன் என்ற கேள்வி தான் எமக்கு உள்ளது.
ஒழுக்கமிக்க அரசியல் தலைவராக இருந்தால் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக்கொடுத்து கட்சியை பாதுகாக்க வேண்டும். ஆனால் கட்சியை குத்தகைக்கு கொடுத்து தலைமைப் பொறுப்பில் நீடிக்கும் நிலைமையே இங்குள்ளது. எமது அணியில் 95சதவீதமான ஐ.தே.கவின் உறுப்பினர்கள் உள்ளனர்.
கேள்வி:- யானை சின்னத்துக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி புதிய சின்னத்தில் பயணிப்பதானது வாக்குவங்கியில் சரிவினை ஏற்படுத்தாது என்கின்றீர்களா?
பதில்:- கடந்த தேர்தல்களை ஆழமாக உற்று நோக்குகின்றபோது பொதுமக்கள் சின்னத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க, நபர்களுக்கும் கொள்கைகளுக்குமே அதிகளவு முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க அணியில் உள்ள சிலர் சுயநலத்துக்காகவும் ராஜபக் ஷவினருக்கு உதவியளிப்பதாகவும் உங்களது அணியினர் குற்றம் சாட்டினாலும் அத்தரப்பினர் அதே குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் உங்கள் தரப்பின் மீது சுமத்துகின்றார்களே?
பதில்:- நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். நாம் ராஜபக் ஷவினருடன் இணையவில்லை. கட்சிக்குள் இருந்து போராடினோம். தற்போதும் கட்சியின் எதிர்காலத்துக்காகவும் அதனை பாதுகாப்பாக மீட்பதற்காகவுமே போராடிக்கொண்டிக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தற்போது வரையில் 65 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளார்கள். தற்போதைய நிலைமை நீடித்தால் மேலும் பலர் அதிருப்தி அடையும் நிலைமையே வெகுவாக அதிகரிக்கும். அதன் காரணத்தினாலேயே நாம் புதிய அணியை உருவாக்கவேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டோம். மேலும் தற்போதுள்ள அணியில் உள்ளவர்களை ஆராய்ந்தால் யார் யார் ராஜபக் ஷவினருடன் ஒப்பந்தங்களை செய்தார்கள். பேச்சுக்களை நடத்தினார்கள் ஆதரவாக செயற்பட்டார்கள் என்பதை நாம் கூறுவதை விடவும் பொதுமக்கள் நன்கறிந்துள்ளனர்.
கேள்வி:- சஜித் பிரேமதாஸவை சூழ்ந்திருப்பவர்கள் தாம் அரசியல் இலாபமடைவதற்காக அவரை பயன்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- எமது தரப்பில் யாரும் சஜித் பிரேமதாஸவை பயன்படுத்தவில்லை. பொதுமக்களே அவருடைய தலைமைத்துவத்தினை விரும்புகின்றார்கள். கிராம மட்டங்களுக்கு சென்றபோது தொடர்ச்சியான தோல்விகளைத் தழுவும் தலைமைத்துவம் ஐ.தே.கவுக்கு வேண்டாம் என்றே கோரினார்கள். தான் சார்ந்து சிந்திக்காது கொள்கை அடிப்படையில் நாட்டினதும் எதிர்கால சந்ததியினர் சார்ந்தும் அனைத்து இனங்களையும் உள்வாங்கி சிந்திக்கின்ற தலைமைத்துவத்தின் கீழேயே நாம் ஒருங்கிணைந்துள்ளோம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பெருவாரிய மக்கள் சஜித் பிரேமதாஸவினை ஆதரித்திருக்கின்றார்கள். எனினும் அவர் அம்மக்கள் குறித்து பகிரங்க நிலைப்பாடுகளை வெளிப்படுத்த தயங்கி வருகின்றமைக்கான காரணம் என்ன? தென்னிலங்கை வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் என்பதால் அவ்வாறு தயக்கம் காட்டுகின்றாரா?
பதில்:- ஐக்கிய மக்கள் சக்தியை எடுத்துக் கொண்டால் சஜித் பிரேமதாஸவுடன் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் கைகோர்த்துள்ளன. அத்துடன் பல பொது அமைப்புகளும் தமது ஆதரவுகளை வெளியிட்டுள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதிதித்துவம் செய்யும் தரப்புக்கள் அவ்வாறு ஒன்றிணைந்துள்ளதன் மூலம் சஜித் பிரேமதாஸவின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது. ஆகவே அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கான நிலைமைகளை கட்டியெழுப்புவதையே இலக்காக கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- ஐ.தே.கவும் அதன் தலைமையும் நம்பிக்கையளித்து ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளதே?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குற்றச்சாட்டினை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைப்பதை விடவும் பொதுஜன பெரமுனவினர் மீதே சுமத்த வேண்டும். காரணம் அத்தரப்பினரே இந்த நாட்டில் இன, மதவாதங்களை மேலோங்கச் செய்து அனைத்து செயற்பாடுகளையும் குழப்பினார்கள். மக்களுக்கிடையிலான புரிதல்கள் ஏற்படுவதற்கு தடைகளை ஏற்படுத்தினார்கள். மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியானது படிப்படியாக தீர்வளித்தே வந்திருக்கின்றது. தற்போதும் கரிசனையுடனேயே நாமும் இருக்கின்றோம்.
- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM