பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற 6 கப்பல்கள்

Published By: Digital Desk 4

18 Mar, 2020 | 09:09 PM
image

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு, அடுத்தடுத்து 6 கப்பல்கள் கடந்து சென்றன. இந்தக் காட்சியை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், தொலைபேசி மற்றும் கேமராக்களில் பதிவு செய்தனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திற்கு, கடந்த 16 ஆம் திகதி 6 கப்பல்கள் வந்தன. இவை அனைத்தும், பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறந்து, கடந்து செல்ல துறைமுக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதையேற்று, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைத் திறக்க ரயில்வே நிர்வாகத்திடம் துறைமுக அதிகாரி அனுமதி கோரினார்

இந்நிலையில், தூக்குப் பாலத்தை திறக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் மத்திய அரசு சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட 36 மீட்டா் நீளமுள்ள 4 கப்பல்கள் கொல்கத்தா துறைமுகத்திற்கு சென்றன.

இதே போன்று, சென்னையில் இருந்து கூடங்குளம் சென்ற இழுவைக் கப்பல் கடந்து சென்றது. மேலும், லட்சத்தீவு துறைமுகத்தில் இருந்து வந்த 32 மீட்டா் நீளமுள்ள பாய்மர சரக்கு கப்பல் கடலூா் துறைமுகத்திற்கு சென்றது. இந்த 6 கப்பல்களையும், பாம்பன் துறைமுக அதிகாரிகள் தகுந்த பாதுகாப்புடன் பாலத்தை கடந்து அனுப்பி வைத்தனா்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 6 கப்பல்கள் கடந்து சென்றதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்ததுடன், தொலைபேசி மற்றும் கேமராக்களில் பதிவு செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right