முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும் அதன் அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்ற சூழலில் மக்கள் மிகவும் விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. மிக முக்கியமாக பொதுமக்கள் தாமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
மிக முக்கியமாக உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கையின் சுகாதார அமைச்சும் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண் டும் என்பது தொடர்பாக பல்வேறு அறிவு றுத்தல்களையும் விளக்கங்களையும் வழங்கியுள்ளனர். அந்தச் சுகாதார துறைசார்ந்த அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றினால் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாம் மீண்டுவிட முடியும்.
குறிப்பாக கை கழுவுதல் மிக முக்கியத்துவமிக்க ஒரு விடயமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. சரியான முறையில் கை கழுவினால் கொரோனா வைரஸை கைகழுவி விடலாம் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதன் தாக்கம் தற்போது இலங்கையை ஆக்கிரமித்திருக்கின்றது என்றே கூற வேண்டும். இதனால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.
இந்த இரண்டு வாரங்களே கொரோனா வைரஸ் தொடர்பாக இலங்கையின் திருப்புமுனை காலமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு வாரங்களில் நாம் சரியான முறையில் இந்தத் தொற்றை பரவவிடாமல் பாதுகாப்பதன் மூலமே நாம் வெற்றியை நோக்கி நகர முடியும். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுகின்றதா? அல்லது மேலும் பரவிவிடுமா என்பதை இந்த இரண்டு வாரங்களே தீர்மானிக்கப் போகின்றன. எனவே மிகவும் பொறுப்புடனும் விழிப்புடனும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் மக்கள் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.
தற்போதைய நிலைமையில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புற்றவர்களாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஐ.டி.எச். மருத்துவமனையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் 204 பேர் 17 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவதான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வரை இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்திலேயே இருந்தது. எனினும் தற்போது திடீரென அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் சிலரின் ஊடாகவே இந்தத் தொற்று தற்போது இலங்கையில் பரவி வருவதாகத் தெரியவருகிறது. எனவே தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. எனவே இந்தச் சூழலில் பதற்றமடையாமல் சரியான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமாகின்றது. சரியான முறையில் சுகாதார அறிவு றுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுகிறது, அதிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தத் தொற்று மனித உடலை எவ்வாறு அச்சுறுத்துகின்றது என்பது தொடர்பாக பலவழிகளில் கூறப்பட்டு வருகின்றது.
எனவே அந்த வழிகளை அடையாளம் கண்டு எம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகின்றது. கைகளை அடிக்கடி கழுவுவது தொடர்பாக உலக அளவில் வலியுறுத்தப்படுகிறது. அதனைப் பின்பற் றுவது அவசியமாகின்றது. அடிக்கடி 20 விநாடிகள் கைகளுக்கு சவர்க்காரமிட்டு கழுவுவது அவசியமாகின்றது.
அத்துடன் கைகளால் கண்கள், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி இருவர் உரையாடும்போது தேவையான இடைவெளியைப் பேணுவதுடன் ஒருவர் இருமும்போது முழங்கையால் மறைத்து அல்லது துணியால் மறைத்து இரும வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எனவே இது தொடர்பாக விழிப்புடனும் பொறுப்புடனும் கவனம் எடுத்தும் செயற்படுவது அவசியமாகும்.
இந்த நிலையில் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பில் நாம் வடக்கு மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவனுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் டாக்டர் கேசவன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு:
இந்நிலையில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் இந்த விடயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த அபாயத்திலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மிக விசேடமாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
அதனூடாகவே இந்த வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்க முடியும். முக்கியமாக எம்மையும் பாதுகாத்து எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும். இந்த வைரஸ் தாக்கத்தால் சுவாசத் தொகுதி பாதிக்கப்பட்டு நியுமோனியா காய்ச்சல் ஏற்படுகின்றது. அதனூடாகவே மரணம் சம்பவிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. இதனால்தான் வயது முதிர்ந்தவர்கள் அல்லது ஏதாவது ஒரு நோய் ஏற்கனவே உள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்வது சிறந்த ஒரு தீர்மானமாக அமையும். ஒன்றுகூடல்களின் ஊடாக இந்தத் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கின்றது. எனவே ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது இன்றியமையாதது. அரசாங்கம் தற்போது இரண்டு வாரங்களுக்கு விமானப் பயணங்களை ரத்து செய்திருக்கின்றது. இதுவும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான ஒரு தீர்மானமாக அமைகின்றது.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில் சரியான சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து இந்த வைரஸை இல்லாதொழிக்க் மக்கள் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். வீணாக பதற்றமடையாமல் சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மிக அவசியமாகும்.
கேள்வி: இந்த நோய் யாரை அதிகளவில் தாக்குகின்றது?
பதில்: கொரோனா வைரஸ் எல்லோரையும் தாக்கும். ஆனால் 70 வயதைத் தாண்டியவர்கள், ஏதாவது ஒரு சுகவீனத்தைக் கொண்டவர்கள் சற்றுக் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக இருதய நோய், ஆஸ்துமா பிரச்சினை, நீரிழிவு நோய், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறான நோய்கள் உள்ளவர்களை இந்த வைரஸ் கடுமையாகத் தாக்கும். அதனால் கவனமாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியிருக்க வேண்டும்.
கேள்வி: நோய் எதிர்ப்பு சக்தியின் வகிபாகம் எவ்வாறு உள்ளது?
பதில்: நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் இந்த நோய் தாக்குவதை குறைக்கலாம் என்பது பொதுவானது. அது உண்மையாகும். சரியான போஷாக்குடன் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமாயின் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம். அவரவர் வயதுக்கு ஏற்றவகையில் போஷாக்கு உணவுகளை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது சிறந்ததாகும். சரியான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கேள்வி: எவ்வாறு மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது?
பதில்: முக்கியமாக கைகழுவுதலே பிரதானமாக காணப்படுகின்றது. கைகளை சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவ வேண்டும். அத்துடன் நேரடியாக உரையாடும்போது மூன்று அல்லது நான்கு அடி இடைவெளியைப் பேண வேண்டும். பொது நிகழ்வுகளை, விழாக்களை, ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது மிக அவசியமாகும். இருமும்போது முழங்கை மற்றும் துணியால் மூக்கை மறைப்பது அவசியமாகும். அதன்பின்னர் அந்தத் துணியை தகுதியான இடத்தில் போட்டு அகற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் கைகுலுக்க வேண்டாம். கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். அவசியமில்லாவிடின் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். தற்போதைய நிலைமையில் வீட்டுக்குள் இருப்பதே தகுதியான ஒரு விடயமாகக் காணப்படுகின்றது.
கேள்வி: அடுத்துவரும் இரண்டு வாரங்கள் முக்கியத்துவமிக்கதாக ஏன் கூறப்படுகின்றது?
பதில்: தற்போது இந்த வைரஸ் எமது நாட்டுக்குள் வந்து விட்டது. எனவே நாம் அதிலிருந்து உடனடியாக மீள வேண்டும். தற்போது இந்த வைரஸ் நாட்டுக்குள் பரவியுள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு வாரங்களில் நாம் செயற்படுகின்ற விதமே இலங்கையின் பாதிப்பு நிலைமையைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மிகவும் பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும். அநாவசியமாக பயப்பட வேண்டாம். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கேள்வி:தனிமைப்படுத்தல் அவதானிப்பு குறித்து...
பதில்:தற்போது குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் வெளிநாடுகளிலிருந்து கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தம்மை வீடுகளில் சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்துங்கள், இதன்போது வீட்டிலிருக்கின்ற ஏனையவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்தலில் இருந்து யாரும் விலகியிருக்க வேண்டாம். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டைப் பாது காப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து வந்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசிய மாகும். இவ்வாறு டாக்டர் கேசவன் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
டாக்டர் கேசவன்
எபோலா வைரஸ் உலகைத் தாக்கியபோது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய நிபுணராகப் பணியாற்றியிருந்தவர்.
- ரொபட் அன்டனி =
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM