நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள போதிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது.
நேற்று இரவுவரை 43 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 204 பேர் வரையில் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 2500க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தற்காலிக முகாம்களில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலானது இலங்கையில் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் யோசனைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யோசனைகளை முன்வைத்திருக்கின்றது. நாட்டிலுள்ள அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தல், இவ்வாரம் முழுவதும் பொதுவிடுமுறையாக பிரகடனப்படுத்தல், அரச மற்றும் தனியார் துறை சுகாதார சேவை ஊழியர்களுக்கு முறையான தொற்று தடுப்பு காப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதை தடுத்தல், அனைத்துப் பிரதேசங்களுக்குமான கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலுவான கட்டமைப்பு முறைமையை உருவாக்குதல், அரச வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து அவசரமற்ற சுகாதார சேவை வழங்கல்களையும் பிற்போடுதல் போன்ற யோசனைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது.
இலங்கைக்குள் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே காரணமாக அமைந்துள்ளனர். முதலாவது கொரோனா தொற்று நோயாளி சீனாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்மணியாவார். அதனைத் தொடர்ந்து இத்தாலியிலிருந்து வந்தவர்களினாலேயே கொரோனா தொற்று முதன்முதலாக இலங்கைக்கு பரவியமை கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலிய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபரே முதன்முதலாக அடையாளம் காணப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடு குறித்தும் அரசாங்கமானது ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த தொற்று அதிகரித்ததையடுத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சீனா சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பில் உரிய வகையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை. விமான நிலையத்தில் கொரோனா தொற்று சோதனை சாதாரணமாக செய்யப்பட்டபோதிலும் அதில் தீவிர கவனம் செலுத்தப்படவில்லை. கடந்த இருவார காலங்களாகவே கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளிலிருந்து வருபவர்கள் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கு முன்னர் வருகை தந்தவர்கள் தொடர்பில் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது இத்தாலியிலிருந்து வந்தவர்களே பெரும்பாலும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேபோன்று ஜேர்மனியிலிருந்து வந்த இருவருக்கும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு வந்தவர்களினால் உள்ளூரிலும் இந்த தொற்று பரவியிருக்கிறது. எனவே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
இது குறித்து பொலிஸார் நேற்று முன்தினம் இரவு அறிவிப்பொன்றினை வெளியிட்டிருந்தனர். மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதிக்குள் சீனா, இத்தாலி, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட இத்தாலியிலிருந்து வந்தவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.
இந்த வகையில் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பத்தினர் சுகாதார அதிகாரிகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவகையில் நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டிருக்கின்றது.
இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் இவ்வாறு தம்மை தனிமைப்படுத்தாது செயற்பட்டமையினாலேயே இத்தகைய தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்தே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனைவிட ஒருவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைத்து செயற்படுவாரேயானால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமென்று பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட 11ஆவது நோயாளருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக குறித்த நோய் நிலைமையை மறைத்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்கிசை நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வெளிநாடு சென்று வந்தவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்கள் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்களை தனிமைப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
உண்மையிலேயே எமது நாட்டில் கொரோனா தொற்றினை தடுக்கவேண்டுமானால் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகின்றது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஆரம்பத்தில் கவனயீனமாக அந்நாடு செயற்பட்டிருந்தாலும் பின்னர் கடும் நடவடிக்கைகள் எடுத்தமையினால் அந்த தொற்று தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட்டபோதிலும் அங்கு மக்கள் அந்த நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினால்தான் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் தொற்றுக்கு இலக்காகி பலியாகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த செயற்பாடுகளை நாம் உதாரணமாக கொண்டு எமது நாட்டில் வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டியது அவசியமாகவுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று எதிரணி குற்றஞ்சாட்டியிருக்கின்றது. தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு நகரங்களை மூடவோ, ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் பொதுத் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கலந்துரையாடவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்கவேண்டியது அவசியம் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விடயம் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்திருக்கின்றது. இன்னமும் ஒருவாரகாலம் அவதானித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில் தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும். கொரோனா தொற்றினை முற்றாக தடுத்து மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. அந்த நடவடிக்கைகளில் குறைகளை காணாது அதற்கு அரசியல் கட்சிகளின் தலைமைகள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். தற்போது மூன்று தினங்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்களை ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டு மக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(18.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM