உலகின் எங்கோ ஒரு பகுதியில் வசிப்பவர் உலகெங்கும் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. புதிய உறவுகளையும், நட்புகளையும் உருவாக்கிக் கொள்ளவும் பழையனவைகளை புதுப்பித்துக் கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரும் பயனளிக்கின்றன.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இதன் நன்மைகளை நாம் எப்படி நமது வாழ்வுக்கும், தொழிலுக்கும் பயன்படுத்திக் கொள்வது என்கின்ற பார்வை மட்டுமே நம்மை முன்னோக்கி நகர்த்தும்.
உலகம் கொரோனாவால் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று இந்த கட்டுரையில் ஆராயவுள்ளோம்.
சீனாவின் வுஹான் நகரில் கடந்தாண்டின் இறுதியில் மெல்லமெல்ல ஆரம்பித்து இன்று சீனாவைத் தாண்டி பல நாடுகளிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா பற்றிய செய்திகள் உலக செய்தி நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் விதிவிலக்கல்ல.
1918 ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை உலக மக்களில் சுமார் 50 மில்லியன் (5 கோடி) பேரை பலிகொண்ட ஸ்பானிஸ் புளு (ஸ்பானிய காய்ச்சல்) போன்ற பல உலகளாவிய ரீதியில் பாரிய அளவில் பரவிய Pandemic தொற்றுநோய்களை வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏராளம்.
2002 இல் SARSசார்ஸ், 2012 இல் MERSமேர்ஸ் போன்ற கொரோனா வைரஸ் வர்க்கத்தை சேர்ந்த தொற்றுநோய்கள் உலகை கவலையில் ஆழ்த்தி ஒரு சில நாடுகளைப் பிராந்தியங்களை முடக்கிய போதும் தற்போதைய கொரோனா வைரஸ் Covid 1 போன்று உலகில் 100க்கும் அதிகமான நாடுகளில் பரவி வியாபித்து முழுமையாக நாடுகளையே முடக்கும் அவலம் அண்மைக்காலத்தில் ஏற்பட்டதில்லை. இதனால் தான் கடந்த புதன்கிழமையன்று தற்போதைய கொரோனா வைரஸை உலகளாவிய ரீதியாக எல்லைகள் தாண்டிப் பரவும் இதற்கு முன் கண்டிராக தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
2002 இல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. 2012 இல் பேஸ்புக் இருந்தபோதும் இந்தளவிற்கு பெரும் வீச்சுடை யதாக இருக்கவில்லை.
நாள்தோறும் பல மில்லியன்களால் வியாபித்துவரும் பேஸ்புக் அதனை அடிக்கடி பயன்படுத்தும் 250 கோடிப்பாவனையாளர்களை தற்போது கொண்டிருக்கின்ற நிலையில் கொரோனா போன்ற உலகளாவிய தொற்று நோய் தொடர்பான தகவல்கள் அதிகமாக பகிரப்படும் தளமாக மாறிவிட்டுள்ளது.
பயனுள்ள தகவல்கள் மக்களுக்கு சென்றடைவது நன்மையான போதும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உறுதிசெய்யப்படாத நிலையில் பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றமை சீரற்ற தகவல் தொற்று Infodemic என்ற பேரபாயத்திற்கு வழியமைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இலக்கானாலும் அதனால் இறக்கும் சாத்தியம் சுமார் 2 சதவீதமாகவே காணப்படுகின்றது. பெரும்பாலும் நலிவுடைய உடல்நிலையைக் கொண்டுள்ள முதியவர்களே இறக்கின்றனர் என ஆரம்ப ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் அதனையிட்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கங்கள் கூறினாலும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளும் போலிச் செய்திகளும் மக்களை தேவையற்ற அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி விட்டுள்ளன.
சீனாவில் கொரோனா நோயாளிகளை நாயை இழுத்துச் செல்வது போன்றும் கட்டுக்கட்டாக சுட்டுக்கொல்வதும் போன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலித்தகவல்களை உண்மை என நம்பி மக்கள் தமது சக நண்பர்கள் அயலவர்கள் சாதாரணமாக தும்மினாலே வெறுத்தொதுக்கி விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றமை கவலைக்கிடமானது.
இந்த நெருக்கடி வேளையில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய கைகளை சரிவரக் கழுவுவது எப்படி? போன்ற சாதாரணமான தகவல் முதற்கொண்டு அடுத்து இரண்டு வாரங்களில் இத்தாலியின் நிலைமையை இங்கிலாந்து சந்திக்கும் போன்ற நிபுணர்களின் எச்சரிக்கை தகவல்கள் வரை பல தகவல்கள் கிடைக்கின்றன. இவை எமக்கு மிகவும் பயனுள்ளதாகும். வானொலி, தொலைக்காட்சி செய்திகளில் இவை ஒலி ஒளிபரப்பப்பட்டாலும் அதிகமாக நாம் சமூக ஊடகங்களிலேயே நேரத்தைக் கழிப்பதால் அவற்றிலேயே இவற்றை பார்க்கின்றோம். அதேநேரத்தில் கொரோனா வந்த நோயாளிகள் அங்குள்ளனர் இங்குள்ளனர் போன்ற உறுதிசெய்யப்படாத தகவல்கள் சமூக ஊடகங்கள் ஊடாக சாதாரண மக்களை சென்றடையும் போது பதற்றநிலை உருவாவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இந்த நிலையில் பேஸ்புக்கை தினமும் பார்க்கும் நீங்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச ரீதியில் நம்பத்தகுந்த பி.பி.சி, அல்ஜஸீரா, சி.என்.என் போன்ற செய்திஸ்தாபனங்களின் பேஸ்புக் பக்கங்களை லைக் பண்ணி See First என்ற தெரிவை மேற்கொள்ளுங்கள். அது போன்றே வீரகேசரி, நியூஸ் பெஸ்ற் போன்ற உள்ளூர் செய்திஸ்தாபனங்களின் பேஸ்புக் பக்கங்களை லைக் பண்ணி சீ பெஸ்ற் தெரிவை அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதனைத் தவிர அடிக்கடி நம்பகரமான செய்திகளைப் பகிரும் வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் பேஸ்புக் பக்கங்களையும் லைக் பண்ணி சீ பெஸ்ற் தெரிவை அழுத்தி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதன்மூலம் ஆயிரக்கணக்கான நண்பர்களைக் கொண்டிருந்தாலும் இதன் மூலமாக பேஸ்புக் கணக்கை லொகின் செய்தவுடன் நீங்கள் முதலில் பார்க்கும் பக்கங்கள் நம்பத்தக்க தகவல்களால் நிறைந்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தை தணிக்க முடியும்.
இதனைத்தவிர உங்களுக்கு கொரோனாவைப் பற்றிய சந்தேகம் இருந்தால் நீங்கள் உங்கள் கேள்வியை பகிரங்கமாக பதிவிட்டு உங்கள் நண்பர் வட்டாரத்திலுள்ள வைத்தியர்கள் ஊடகவியலாளர்களின் பதில்களை பெற்றுக் கொள்ளமுடியும். உதாரணமாக வெப்பவலய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குப்பிடிக்க மாட்டாது என கருத்துக்கள் உலவுகின்றதே இதுபற்றி உங்கள் நிலைப்பாடு யாதென பேஸ்புக்கில் பதிவிட்டபோது சில வைத்தியர்கள் கொரோனா வெப்பவலயத்திலும் பரவும் சாத்தியம் உள்ளது என கூறியிருந்தனர்.
இவ்வாறு தெளிவுகளைப் பெற பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியும். அநேகர் பயன்படுத்துவதனால் பேஸ்புக் பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தேன். ஆனால் (Twitter) டுவிட்டரில் இதைவிடவும் சிறப்பான முறையில் தகவல்களைப் பெற்றுக்கொண்டு நெருக்கடி வேளையில் அவதானமாக செயற்படமுடியும். அடுத்த வாரத்தில் டுவிட்டரை பற்றிப் பார்ப்போம்.
- அருண் ஆரோக்கியநாதன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM