அதனை ப்ளெக் டெத் (Black Death) என்பார்கள். பெரும் கொள்ளை நோய் என்றும் அழைப்பதுண்டு. மனித குல வரலாற்றில் ஆகவும் தீவிரமான கொள்ளை நோய். இது 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இது ஆகக்கூடுதலான உயிர்களைப் பலிகொண்டது.
இங்கிலாந்தின் சனத்தொகையில் 30 முதல் 50 சதவீதத்தை ப்ளெக் டெத் பலிகொண்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
உலக அளவில் பரவும் கொள்ளை நோய்கள் புதியவை அல்ல. இவை வரலாற்றை மாற்றும் அளவு சக்தி வாய்ந்தவை.
கொள்ளை நோய்கள் எல்லை தாண்டி பரவலாம். அதனைக் கூட்டாக சமாளிக்க வேண்டும். அதற்குரிய பொறிமுறைகள் இருக்கலாம்.
இந்த நோய்களை வைத்து அரசியல் செய்வது மனித குலத்தின் துரதிர்ஷ்டம். அது அன்றும் உண்டு. இன்றும் உண்டு.
ப்ளெக் டெத் கொள்ளை நோய் எங்கிருந்து பரவியது என்பது முதல் அரசியல். சீனாவில் இருந்தென ஒரு தரப்பு கூறும்.
இல்லை, இது ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்ட க்ரைமியாவில் இருந்து தான் தொற்றியது என மற்றைய தரப்பு வாதிடும். அது அரசியல்!
ஆனால், அத்திலாந்திக் கடலைக் கடந்து சென்ற ஐரோப்பியர்கள், அதனை அமெரிக்காவில் பரப்பியதைப் பற்றி பேசுவதில்லை.
கடல் கடந்து வந்த கொள்ளை, அமெரிக்க மண்ணின் பூர்வீகப் பழங்குடிகளை கூட்டம் கூட்டமாக பலிகொண்டதை மறைத்து விடுவார்கள். அதுவும் அரசியல். தற்போது கொரோனா- வைரஸ். மருத்துவ பாஷையில் சொன்னால் கொவிட்-நைன்ரீன். முழு உலகமும் அஞ்சி நடுங்கும் நுண்ணுயிர்.
இதனை உலக அளவில் பரவக்கூடிய தொற்றுநோய் (Global Pandemic) என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருப்பது உண்மையே.
இது ப்ளெக் டெத் கொள்ளை நோய் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தும் சாத்தியம் பற்றி பேசப்படாமலும் இல்லை.
இன்று கொரோனா வைரஸை சுற்றி தீவிர அரசியல். இந்தத் தொற்றை வைத்து நடத்தப்படும் அரசியல் ஒருபுறம். இது அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் மறுபுறம்.
உலகளாவிய சுகாதார நெருக்கடி, உலகெங்கிலும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும் காரணி. இவை பற்றியெல்லாம் கவலையில்லாத அரசியல்வாதிகள்.
அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், கொரோனா மரணங்களை விடவும் நவம்பர் மாதத் தேர்தல் முக்கியமானது.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், கொரோனா மரணங்களைப் பற்றி டொனால்ட் ட்ரம்பிற்குக் கவலையில்லை.
அமெரிக்க மண்ணில் கொரோனாவைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்பார். இதுவே பங்குகளை வாங்க சிறந்த தருணம் என்றெல்லாம் கூறுவார்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தினால், நவம்பர் தேர்தலில் வென்று மீண்டும் ஜனாதிபதியாகலாம் தானே.
டொனால்ட் ட்ரம்பிற்கு மக்களைப் பலிகொள்ளும் தொற்றுநோய்கள் முக்கியமில்லை. தமது வறட்டுப் பிடிவாதமே முக்கியம்.
2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் எபோலா நோய் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக பராக் ஒபாமா தேசிய பாதுகாப்பு பேரவையை ஸ்தாபித்தார்.
இரு வருடங்களுக்கு முன்னர், இந்தப் பிரிவை டொனால்ட் ட்ரம்ப் கலைத்தார். நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கான நிதியொதுக்கீட்டையும் குறைத்தார்.
இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்தார். அந்தத் தடை பிரிட்டன் பிரஜைகளுக்கு பொருந்தாது.
ஒருவருக்கு கொரோனா தொற்றியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் இத்தாலி நாட்டவரா, பிரிட்டன் பிரஜையா என்பதைப் பார்த்து, அது மற்றவருக்குப் பரவுவதில்லை.
டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்தவரையில், அதுவெல்லாம் முக்கியமில்லை. பிரிட்டன் பிரஜைகளுடன் நட்பு பேணலாம். மற்றைய நாடுகளை சேர்ந்தோர் நோயாளிகள்.
சீன ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் என்பது மற்றையவை அனைத்தையும் தாண்டிய கௌரவப் பிரச்சினை. கொவிட்- நைன்ரீன் தொற்றுநோயை இயற்கை அனர்த்தமாக வர்ணித்து, இது கம்யூனிஸ ஆட்சியாளர்களின் தவறு அல்ல என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்துவது முக்கியமானது.
தாம் வைரஸைக் கட்டுப்படுத்தி விட்டதாக உலகெங்கிலும் தண்டோரா போட்டுச் சொல்வதற்காக சீனத் தலைவர்கள் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தை சீன மக்கள் கூட்டாக சமாளிப்பார்கள் என்ற செய்தியை உலகறியச் செய்ய பாடுபடுவார்கள்.
கம்யூனிஸ ஆட்சியாளர்கள் வழங்கும் தகவல்களுக்கு அப்பால், உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கேள்விகளுக்கு சீனத் தலைவர்கள் பதில் அளிப்பதில்லை.
15 கோடி மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்து, நடமாடும் சுதந்திரத்தை இழந்து நிற்பது பற்றி சொல்வதெல்லாம் சீனத் தலைவர்களுக்கு மானக்கேடு.
கொரோனா- வைரஸ் பெரும் நெருக்கடியாக மாறப் போகிறது என டிசம்பர் மாதத்தில் எச்சரித்த வுஹான் நகர மருத்துவரை பொலிஸை விட்டு விசாரித்தவர்கள், சீனத் தலைவர்கள்.
லி வென்லியாங் என்ற மருத்துவர். கொரோனாவிற்கு பலியானவர். இவர் தீவிரத்தை கொடுமையை உலகறியச் செய்தபோது, பொய் சொல்ல வேண்டாமென பொலிஸார் எச்சரித்தனர்.
இந்த நோய் தொடர்பிலும், நோயின் விளைவுகள் தொடர்பிலும் மற்றவர் மீது விரல் நீட்டும் போக்கு. இது உலக அரசியலாக நீடிக்கிறது. நாடுகளுக்கு மத்தியிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நோயின் உருவாக்கம் பற்றி குற்றச்சாட்டுக்களை ஆராயலாம். சீனர்களைப் பொறுத்தவரையில், இது அமெரிக்கா உருவாக்கி, தமது நாட்டை அழிப்பதற்காக அனுப்பிய ஆயுதம்.
அமெரிக்க அரசியல்வாதிகள் மாற்றிச் சொல்வார்கள். வுஹான் நகர ஆய்வுகூடமொன்றில் பயங்கர உயிரியல் ஆயுதமொன்றை உருவாக்க முனைந்தபோது, அதன் விளைவாக உருவானதே கொரோனா- வைரஸென அமெரிக்க அரசியல்வாதிகள் சாடுவார்கள்.
ஈரானில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா- வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்நாட்டுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் விஷமப் பிரசாரங்கள். நோயைக் கட்டுப்படுத்தாமல், ஈரானியத் தலைவர்கள் தேர்தலை வைத்ததாக குற்றச்சாட்டுக்கள்.
கொரோனா வைரஸ் பற்றி வீணான அச்சம் பரப்பப்படுவதாக ஒரு சந்தர்ப்பத்தில் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி குற்றஞ்சாட்டினார். இது ஈரானின் பகையாளிகள் கட்டவிழ்த்து விடும் சதியென்று கூட அவர் குறிப்பிட்டார்.
சீனர்களின் உணவுக் கலாசாரத்தை விமர்சித்தவர்கள், மதத்தை முன்னிறுத்தினார்கள். கண்டதையும் உண்பதால் இது சீனர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை என்றார்கள். கேலி செய்தார்கள். இதில் சில முஸ்லிம்கள் முன்னின்றார்கள்.
எனினும், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த மெர்ஸ் வைரஸ் ஒட்டக இறைச்சி மற்றும் ஒட்டகப் பாலின் மூலம் பரவியதை மறந்திருந்தார்கள். அத்துடன், வைரஸ் அச்சத்தால் புனித ஸ்தலங்கள் வெறிச்சோடிய சந்தர்ப்பத்தில் இறைவன் ஞாபகத்திற்கு வரவில்லை.
கொரோனா- வைரஸ் உன்னில் தான் உருவானது, உன்னால் தான் பரவியது என்று நேரடியாக குற்றஞ்சாட்டுவதை விடவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைக் காரணம் காட்டி உலக நாடுகள் சண்டை பிடித்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்.
எவரேனும் 14 நாட்களுக்குள் சீனாவிற்கு சென்றிருக்கிறீர்களா, அப்படியானால் எமது நாட்டிற்குள் வரக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடையை சுட்டிக்காட்டலாம்.
தமது நாட்டின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் டொனால்ட் ட்ரம்ப் வீணான பீதியைக் கிளப்புகிறார் என்று சீன வெளிவிவகார அமைச்சு சாடியது. அமெரிக்க இராஜாங்க செயலாளரோ தகவல்களை மறைக்கிறதென சீனாவின் மீது விரல் நீட்டினார்.
இலங்கையையும் உதாரணம் காட்டலாம். இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து, எவரும் இலங்கைக்கு வர முடியாமல் இலங்கை அரசாங்கம் இருவார கால தடையை விதித்தது.
மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளை விடவும், சீனாவில் தானே கொரோனா-வைரஸ் தொற்று அதிகம்? சீனர்களுக்கு தடைவிதிக்காதது ஏன்? ராஜபக் ஷ குடும்பம் சீனாவிற்கு விசுவாசத்தைக் காட்ட மக்களை பணயம் வைக்கிறதா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதே பிரச்சினை தென்கொரியாவிலும் தலைதூக்கியது. இங்கு கொரோனா மரணங்கள் அதிகம். இதற்கு சீனா தான் காரணம் என்ற உணர்வும் தான். ஆனால், தென்கொரிய அரசு சீன விருந்தாளிகளைத் தடை செய்ய தயங்கியதால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்
ஜப்பானை நோக்கலாம். அந்நாட்டு அரசு நிதானமாக நடந்து கொண்டு சீனாவின் மீது விரல் நீட்டாமல் பார்த்துக் கொண்டது. ஆனால், ஜப்பானிய மக்கள் கொந்தளித்தார்கள். கடைகளில், ‘சீனர்களுக்கு இடமில்லை’ என்று எழுதி, ஜென்மப்பகையை காட்டினார்கள்.
ஐரோப்பாவை ஆராயலாம். இங்கு ஷெங்கன் என்று வரையறுக்கப்படும் பிரதேசம் உள்ளது. இதில் 26 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி பரஸ்பரம் அடுத்த நாட்டுக்கு செல்ல முடியும்.
இன்று சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா- வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஷெங்கன் ஏற்பாடு காரணமாக ஏனைய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி விடுமோ என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன.
அடுத்து அகதிகள் நெருக்கடி. இன்று மத்திய கிழக்கு நெருக்கடிகளால் இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள், பல நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். சிரியாவின் இத்லிப் நகரில் இடம்பெயர்ந்த மக்கள், துருக்கியுடனான எல்லையில் முகாமிட்டுள்ளனர்.
இந்த அகதிகள் மத்தியில் வைரஸ் பரவும் பட்சத்தில், இவர்கள் ஐரோப்பா நோக்கி நகர்வதைக் கட்டுப்படுத்த முடியாதென துருக்கி அரசாங்கம் அறிவித்தது. இது ஐரோப்பிய தலைவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இத்தகைய நெருக்கடிகள் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில், அவற்றைக் கையாளக்கூடிய அமைப்புக்கள் இருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இன்றைய உலக ஒழுங்கில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விடவும், யார் வல்லாதிக்கம் செலுத்துவது என்பதில் வல்லரசு நாடுகள் அக்கறை காட்டுகின்றன. இன்று உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவக் கூடிய தொற்றுநோயாக பிரகடனம் செய்திருப்பதன் காரணமாக, மிகத் தீவிரமான சுகாதார நெருக்கடியைத் தவிர்க்கக்கூடிய நிலைமை சாத்தியப்பட்டிருக்கலாம்.
இந்த நோயின் அரசியல் விளைவுகளைக் கட்டுப்படுத்துதல் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது.
- சதீஷ் கிருஷ்ணபிள்ளை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM