தமிழ் மக்களுக்கான ஒரு இடைக்கால தீர்வுத் திட்டத்தை நாம் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு வந்தோம். அதை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கையிலேயே அத்திட்டமானது தனி நாடு கோரிக்கையை வலுப்படுத்துகிறது என்ற தவறான எண்ணக்கரு அப்போதைய ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதன் காரணமாகவே ஜனாதிபதி திடீரென அரசியல் நெருக்கடி ஏற்படும் வகையில் புதிய பிரதமரை நியமித்து பாராளுமன்றத்தையும் கலைப்பதற்கு தீர்மானித்தார்.
அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகள், நாட்டின் பெரும்பான்மை மக்களின் மனமாற்றம் என்பனவே எமது தீர்வுத் திட்டத்தை எவ்வகையிலும் கொண்டு வராமலாக்கியதே ஒழிய, நாம் பாராளுமன்றில் வீணே அமர்ந்திருந்து காலம் கடத்தவில்லை. அதேவேளை, சுதந்திரத்துக்கு பின்னர் பிரதான தேசியக் கட்சிகளை முதன் முறையாக ஒன்றிணைத்து நல்லாட்சி ஒன்றை உருவாக்கிய செயற்பாடுகளில் எமக்கு பெரும்பங்கிருந்தது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல், ஜெனீவா விவகாரம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் பற்றி வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு:
கேள்வி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் எப்படியானது?
பதில்: எமது கட்சியினது தேர்தல் அறிக்கையில் வெற்றி பெறுவதற்கான வியூகம் உள்ளது. அந்த அறிக்கையில் பிரதானமாக தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு கடந்த 70 வருடங்களாக தீர்வு காணப்படவில்லை என்ற விடயம் முக்கியமானது. யுத்த காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் தீர்வுகள் முன்மொழியப்படவில்லை. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட இது குறித்து எவரும் கதைக்கவில்லை.
முக்கியமாக புதிய ஜனாதிபதியாக தெரிவானவர் இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெற்றதாகவோ அல்லது இலட்சக்கணக்கானோர் மரணித்ததாகவோ காட்டிக்கொள்ளவில்லை. அப்படி சம்பவம் இடம்பெற்றதைப் பற்றி ஒன்றும் பேசாது அவர் ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது கொள்கைப் பிரகடன உரையில் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவையையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று தான் ஆதரவை கேட்டிருந்தனர்.
ஆனால் இவரோ பெரும்பான்மைத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கின்றார். பெளத்த சிங்கள மக்களின் ஆணைப்படி ஒற்றையாட்சியே தனது இலக்கு என்கிறார். தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஏன் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தோன்றியது, அதற்கு காரணகர்த்தாக்கள் யார் என்பது பற்றியெல்லாம் அவர் பேசியிருக்கவில்லை. இப்படியான கொள்கைகள் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக இருப்பதானது தமிழ் மக்களுக்கு ஒரு சவாலான விடயமாகும். ஆகவே இவ்வாறான சவால்களை வெற்றி கொள்வதற்கு நாம் அதற்கேற்ற தேர்தல் வியூகங்களை வகுத்து பாராளுமன்றில் அழுத்தங்கள் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதிலும் தக்க வைத்துக்கொள்வதிலும் நாம் முனைப்பாக செயற்பட வேண்டியுள்ளது.
கேள்வி: பெரும்பான்மை மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் உங்கள் முயற்சி வெற்றியளிக்குமா?
பதில்: தற்போதைய ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லை. ஆகவே நாம் ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளைப்பெற்று அவர் கொண்டு வரப்போவதாகக் கூறும் சிங்கள பெளத்த மக்களை திருப்திப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். எவ்வாறாயினும் தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு வழிகளில்லை. நாம் பிரதானமாக மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எமது தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளோம். முதலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிர்ப்பு, இறுதியாக சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தரும் அரசியலமைப்பு.
கேள்வி: எதன் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன் வந்தது?
பதில்: சுதந்திரத்துக்குப்பிறகு நீங்கள் பார்த்தீர்களானால், தேசியக் கட்சிகளில் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு மட்டுமே மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. இவை மாறி மாறி தமக்குள் முரண்களை கொண்டே ஆட்சியை கொண்டு நடத்தின. ஆளுங்கட்சி கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சி எதிர்த்தல் அல்லது ஆதரவு தராமலிருத்தல் போன்ற அம்சங்களே நடந்தேறின. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டும் இணைந்து நல்லாட்சியை உருவாக்க நாமும் பங்குதாரர்களானோம்.
அந்த ஆட்சிக்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் இருந்த காரணத்தினாலேயே நாம் ஆதரவை வழங்கினோம். அக்காலகட்டத்தில் அது முக்கியமானதாக எமக்கு இருந்தது. அதே வேளை பாராளுமன்றில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கக் கூடிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் இருந்தது. அப்படியானதொரு சூழ்நிலையிலேயே நாம் அரசாங்கத்துடன் இணைந்து பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவால் இனப் பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுத் திட்டத்தை தயாரித்தோம். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. அதேவேளை 7 ஆம் திகதி இந்த தீர்வுத் திட்டம் பற்றிய அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது. எனினும் தனக்கு அதிகாரமில்லாத நிலையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் மாதம் 26 ஆம் மஹிந்தவை பிரதமராக்கி பின்னர் பாராளுமன்றத்தையும் கலைத்தார்.
இதன் காரணமாக அந்த தீர்வுத் திட்டமும் அது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாமலேயே போனது. மைத்திரியின் இந்த செயற்பாட்டுக்குக் காரணம் அந்த அறிக்கையில் ஒருமித்த நாடு என்ற பதம் ஒரு சமஷ்டி ஆட்சியை ஒத்ததாக இருப்பதாகவும் இது நாட்டை பிளவுபடுத்தும் என்றும் ராஜபக் ஷாக்களினால் கூறப்பட்டதாகும். அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய , ஜனநாயக விரோதப்போக்கோடு ஒரு அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு எத்தனிக்கிறார். இது ஒரு பாசிஸ ஆட்சிக்கு சமமானதாகும். எமக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாத அளவுக்கு அழுத்தங்களை கொடுக்க பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகின்றது.
கேள்வி: நீங்கள் கூறும் பாசிஸ ஆட்சியை இல்லாதொழிக்க தமிழ்த் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் மட்டும் போதுமானதா?
பதில்: நாம் பிரதானமாக கொண்டுள்ள கொள்கையை இந்த நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து கட்சிகளும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் இந்த நோக்கத்துடனேயே பயணிக்க விரும்புகின்றன. நாம் தனியாக போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைவோம் என்பதே உண்மை. எமது பிரதான நோக்கமே ஜனநாயக விரோத போக்கை கொண்டிருக்கும் ஆட்சி பாராளுமன்றில் உருவாகி விடக்கூடாது என்பதாகும். அதற்கு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து எமது எதிர்ப்பை காட்டுவோம். அது போராட்டமாகவும் கிளர்ச்சியாகவும் இருக்கலாம். சர்வாதிகார ஆட்சியை வெறுக்கும் எதிர்க்கும் அரசியல் கட்சிகள் உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாட்டிலுள்ள மக்களையும் நாம் இதில் ஒன்றிணைப்போம். மட்டுமன்றி சர்வதேசத்தின் உதவியையும் இவ்விடயத்தில் நாம் நாடுவோம்.
கேள்வி: சர்வதேசத்தின் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளிலிருந்தே ஜனாதிபதி இலங்கையை விலக்கிக் கொண்டிருக்கின்றாரே?
பதில்: அது தமிழர்களுக்கு சாதகமான நிலைமையை தானே தோற்றுவித்திருக்கின்றது. மனித உரிமை பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளும் பொறுப்புக் கூறலை வலியுறுத்துகின்றன. பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களிலிருந்து அது விலகிக்கொண்டிருப்பதானது சர்வதேச ரீதியாக இந்த அரசாங்கத்தை அடையாளம் காட்டியுள்ளது. எந்த அரசாங்கம் வந்தாலும் ஆட்சியில் ஜனநாயகப் பண்புகள் மற்றும் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தன. அந்த அடிப்படையிலேயே 34 தீர்மானங்களை 2015 ஆம் ஆண்டில் கொண்டு வந்து நிறைவேற்றின. தற்போது அவை நிராகரிக்கப்பட்டிருப்பதனால் சர்வதேச ரீதியாக இந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: இந்தியாவின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. ஏனென்றால் இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டிருக்கின்றது, உடன்படிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு உள்ள பொறுப்பு என்று கூட கூறலாம். ஆதலால் தான் ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இந்தியா வெளிவிவகார அமைச்சரை அனுப்பி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இந்தியப் பிரதமர் சந்தித்து அது பற்றி பேசியிருந்தார். ஆனாலும் கூட அந்த விடயத்திலும் அரசாங்கம் பொறுப்புக் கூறலிலிருந்து தவறி அதற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும் நாம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவையும் இணைத்தே பயணிக்கவுள்ளோம்.
கேள்வி: எனினும், கடந்த நல்லாட்சி காலத்தில் கூட்டமைப்பு காத்திரமான எந்த விடயங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: அப்படியிருக்க, வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் நாம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டமைக்க பொருளாதார ரீதியான உதவிகளை நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப கட்ட தீர்வை தயாரித்திருந்தோம். முக்கியமாக 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக முன்னெப் பொழுதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எம்மை அமைச்சரவையில் அங்கம் வகிக்க அவர்கள் அழைத்தாலும் நாம் அதில் அங்கம் வகிக்காமலேயே போரினால் அழிந்து போன ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்குரிய அமைச்சு ஒன்றை பிரதமர் தலைமையில் உருவாக்கியிருந்தோம். அதன் மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. எவரும் இல்லை என்று கூற முடியாது. தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் நாம் என்ன செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோமோ அல்லது பேசுகின்றோமோ அதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
உதாரணமாக இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எவ்வாறு, ஏன் கோத்தாபயவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நாம் அவர்களிடம் விளக்கியிருந்தோம். அந்த அடிப்படையில் அவர்கள் வாக்களித்திருந்தனர். சஜித் பிரேமதாஸ இனப்பிரச்சினை தீர்வு குறித்து கொண்டிருந்த யோசனைகள் மற்றும் நல்லாட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் எமது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தனர்.
கேள்வி: சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் ஒரு நன்றியை தானும் தெரிவிக்கவில்லையே? அவரது அண்மைக்கால கருத்துகள் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றனவே?
பதில்: அதை மனதில் கொண்டிருக்கிறோம். இனப்பிரச்சினையை தீர்க்கும் விடயங்களில் சஜித் அவரது தந்தையைப்போன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீண்ட கால அரசியலில் ஈடுபட்டிருப்பவன் என்ற வகையில் நான் கூற வேண்டியது என்னவென்றால், அவருக்கு இன்னும் அரசியல் பற்றிய ஆழமான விடயங்கள் குறித்த தெளிவில்லை. ஆனால் நாம் அவருக்கு விளங்கப்படுத்த முயற்சித்தோம்.
அண்மைக்காலமாக அவரது கருத்துகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. அதாவது இராணுவத்தளபதிக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையை அவரும் எதிர்த்து கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அதுகுறித்து பாராளுமன்றில் பேசியிருந்தேன். தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை தற்போதைய அரசு கொண்டிருக்கின்றது. அதேவேளை எதிர்க்கட்சித் தலைவரும் அதற்கு சாதகமான போக்கை கொண்டு பேசுகிறார் என நான் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆனால் இப்போது நிலைமை வேறு. அறுதிப் பெரும்பான்மையுடன் பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற ஒரு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதில் சஜித் பிரேமதாஸவும் சிங்கள பெளத்த வாக்குகளையும் அவர்களின் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னரும் கூட ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர வேண்டும் என அவர் பேசியிருந்தார். இது அவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேர்தல் காலங்களில் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களாக கருதலாம்.
எனினும் சிங்கள மக்களும் தமது ஜனநாயக ரீதியான கடமைகளை தேர்தல் காலத்தில் செய்கின்றனர். யாருக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளனர். எனவே சஜித் பிரேமதாஸ, தேர்தல் காலத்தில் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்கு எடுக்கும் தந்திரோபாய முயற்சிகளையோ அல்லது பேசும் வார்த்தைகளையோ கருத்திற் கொண்டு நாம் எமது வியூகங்களை மாற்றியமைக்க முடியாது. தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு பாராளுமன்றில் நாமும் அதிகாரத்தை கொண்டிருப்போம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அவ்வாறானவர்களுடன் என்ன பேச வேண்டும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிந்தே உள்ளது.
ஆர்.பி., சி.சி.என்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM