வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தும் கருத்துக்கள், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவனவாக உள்ளதைக் கவனிக்க முடிகிறது.
தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் எதையும் பேசுவார்கள், அவ்வாறான பிரசார பேச்சுக்களுக்கு அவர்கள் பொறுப்புக்கூறுபவர்களாக இருப்பதில்லை.
தமிழரசுக் கட்சியின் உள்ளக கூட்டம் ஒன்றில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இப்போது, விக்னேஸ்வரனும் கூட, ஏனைய அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் பேசுகின்ற பேச்சுகளைப் போலவே, கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.
15 எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் அவசியம் இல்லை, ஓரிரண்டு பேர் இருந்தாலே சாதிக்க முடியும் என்பது போன்ற வெற்று நம்பிக்கையை தமிழ் மக்களிடம் ஊட்ட முற்படுகிறார் அவர்.
தமது கூட்டணி 15 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அவர், ஓரிரண்டு பேர் இருந்தாலே சாதித்து விடலாம் என்பது போல, நம்பிக்கையூட்ட முயற்சிப்பது, அபத்தம்.
தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியலமைப்பை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஓரிரண்டு பேரை வைத்துச் சாதிக்க முடியும் என்பது வீணான கற்பனை.
அதுமாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை நிராகரித்து, சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எடுத்த முடிவு மாபெரும் தவறு என்றும், சூழலை கணிக்காமல் எடுக்கப்பட்ட அந்த முடிவினால் தமிழ் மக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கூட்டமைப்பு எடுத்த சஜித் ஆதரவு நிலைப்பாட்டினால் தான், சிங்கள மக்கள் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்தனர் என்பதே, அவரது வாதமாக தெரிகிறது.
கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிக்க சிங்கள மக்கள் முடிவெடுத்ததும், சஜித்தை ஆதரிக்க தமிழ் மக்கள் முடிவெடுத்ததும், கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு பின்னரான விடயங்கள் இல்லை, என்பதே உண்மை.
கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த தபால் மூல வாக்களிப்பின் பெறுபேறுகளை எடுத்துப் பார்த்தாலே, இரண்டு சமூகங்களும் எவ்வாறு முடிவெடுத்தன என்பதை புரிந்து கொள்ளலாம்.
மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷவை நிறுத்தியதற்குக் காரணமே, சிங்கள பௌத்த வாக்குகளை முழுமையாக அள்ளுவதற்குத் தான்.
தன்னால் தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றிபெற முடியும் என்று, தேர்தல் அறிவிப்பு வெளியாக முன்னரே, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம், கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருந்தார்.
சிங்கள மக்களின் வாக்குகளால் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று தான்.
அதுபோலவே, தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தனர். அவர்கள் அதனை சஜித்துக்கான வாக்கின் மூலம் வெளிப்படுத்தினர். அவர்கள் சஜித்துக்கு வாக்களிக்க முடிவு செய்த பின்னர் தான், கூட்டமைப்பும் அதே முடிவை எடுத்தது.
இந்த இரண்டு கள யதார்த்தங்களையும் விக்னேஸ்வரன் இன்னமும் கூட விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
கூட்டமைப்பு ஆதரிக்காமல் போயிருந்தால், கோத்தாபய ராஜபக் ஷ வென்றிருக்க முடியாது என்ற பிரமையை அவர் உருவாக்க முனைகிறார்.
மானமுள்ள தமிழன் எவனும் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் என்று முன்னர் கூறியிருந்த சி.வி.விக்னேஸ்வரன், இப்போது, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சார்பாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருப்பதையும் கவனிக்க முடிகிறது.
முன்னதாக, சர்வதேச தலையீடுகளை வலியுறுத்திக் கொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் இப்போது, அரசாங்கத்திடம் இருந்தே தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்.
சர்வதேச அழுத்தங்களின் மூலம், அந்த தீர்வை அடையலாம் என்ற நம்பிக்கையை அவர் அண்மையில் நடத்தி வரும் கூட்டங்களில் கூறி வருகின்றனர்.
கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிராக தமிழர் தரப்பு எடுத்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கும் விக்னேஸ்வரன், கோத்தாபய ராஜபக் ஷவின் மூலம், சில தீர்வுகளை பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியம்.
கோத்தாபய ராஜபக் ஷ, சொல்வதைச் செய்யக் கூடியவர், செய்ய முடியாததையும் சொல்லிவிடக் கூடியவர். அவரது அந்த வெளிப்படையான குணாம்சத்தைக் கொண்டு, சில தீர்வுகளைப் பெற முடியும் என்று விக்னேஸ்வரன் உறுதியாக நம்புகிறார்.
ஏனையவர்கள் தீர்வைத் தருவதாக தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார். அவ்வாறு ஏமாற்றியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவாகவோ, மஹிந்த ராஜபக் ஷவாகவோ இருக்கலாம்.
அவர்களுடன் ஒப்பிடும்போது, கோத்தாபய ராஜபக் ஷவின் வெளிப்படைத்தன்மை விக்னேஸ்வரனுக்கு பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் அவருடன் பேசி விடயங்களுக்கு சில தீர்வுகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனை அவர் தனது செவ்வி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெளிப்படைத்தன்மையான குணாம்சத்தை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ள விக்னேஸ்வரன், சிறுபான்மையினர் தொடர்பான அவரது உறுதியான அரசியல் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி கணக்கில் கொள்ளவில்லை.
தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினைகளே இல்லை என்பது தான் அவரது நிலைப்பாடு. பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அவரிடம் போய், விக்னேஸ்வரன் எவ்வாறு தமிழரின் உரிமைகளைப் பற்றிப் பேசப் போகிறார் ?
தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசப் போவதாக கூறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இதுவரை வடக்கு -கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து, டக்ளஸ் தேவானந்தா போன்ற ஆளும்தரப்பு தவிர்ந்த ஏனைய பிரதான தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேசவே இல்லை.
ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களாகியும் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுமில்லை. தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்கிற்கு சென்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய முனையவும் இல்லை.
இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ள ஒரு ஜனாதிபதியுடன், எதிர்காலத்தில் பேசமுடியும் ,சில தீர்வுகளைப் பெற முடியும் என்றும் விக்னேஸ்வரன் கொண்டுள்ள நம்பிக்கை, காளை மாட்டில் பால் கறக்கலாம் என்ற நம்பிக்கைக்கு ஒப்பானது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ விடயத்தில் விக்னேஸ்வரன் தப்புக்கணக்கைப் போடுகிறார் என்றே தெரிகிறது.
2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் எடுத்த நிலைப்பாட்டைப் போல, அவரும் சிந்திக்க முனைகிறார்.
ரணில் விக்கிரமசிங்க சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கி புலிகளுக்கு நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த நிலையில், சண்டையை தொடங்கக் கூடிய, மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெறுவது தமக்குச் சாதகமாக அமையும் என்று புலிகள் கருதினர்.
அதனால் தான், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் வகையில், தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
விடுதலைப் புலிகளிடம் அப்போது ஆயுத பலம் இருந்தது. அதனைக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை வென்று விடலாம் என்று நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுடன் புலிகளின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தால் புலிகளுக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது பலரது கணிப்பு. ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு அவர்கள் சிக்கியிருக்க நேரிட்டிருக்கும் என்பது தவிர்க்க முடியாததே.
அப்போது புலிகள் எடுத்த முடிவைப் போலவே, இப்போது விக்னேஸ்வரனும் எடுக்க முனைகிறார்.
தீர்வைத் தருவோம் என்றோ, தரமாட்டோம் என்றோ கூறாமல் ஏமாற்றி வருபவர்களை விட, வெளிப்படையாகப் பேசும், கோத்தாபய ராஜபக் ஷவிடம் தீர்வைப் பெறலாம் என்று அவர் நம்பிக்கையூட்ட முனைகிறார்.
இந்த நம்பிக்கையை அவர் ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர் வெளிப்படையாகச் செய்யவில்லை.
அப்போது மதில் மேல் பூனையாக இருந்தவர் விக்னேஸ்வரன்.
தமிழ் மக்களையே முடிவெடுக்குமாறு கூறிய அவர், இப்போது தமிழ் மக்கள் எடுத்த அந்த முடிவு தவறு என்கிறார்.
தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது, சரியான திசையில் வழிகாட்டக் கூடிய, மக்களை முன்நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய தலைமைத்துவம் தான்.
வார்த்தைகளுக்குள் ஒளிந்து விளையாடுகின்ற- சிக்கலான பிரச்சினைகளின் போது முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகின்ற, முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று நழுவுகின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை.
விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமையாக உருவெடுக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், தெளிந்த நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அவர்களை முன்நோக்கி அழைத்துச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.
முன்னுக்குப் பின் முரணாக செயற்படுவதும், காலம் கடந்த பின் பிறர் மீது பழிகூறி தப்பிக்க முனைவதும், அவரது மூப்புக்கும், துறைசார் அனுபவத்துக்கும் பொருத்தமன்று.
- கபில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM