கடந்த மூன்று ஆண்டுகளாக உலகின் பெரிய எரிபொருள் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் எரிபொருள் உற்பத்தி மற்றும் அதன் விலை தொடர்பாக சுமுகமாக ஒத்துழைத்தன. இவர்களின் ஒத்துழைப்பு அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷெல் வாயு உற்பத்தியாளர்களுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. ஷெல் வாயு உற்பத்தி செலவு மசகு எண்ணெய் உற்பத்தி செலவிலும் பார்க்க அதிகமானதாகவே இருக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக ஷெல் வாயு உற்பத்தி செலவை குறைப்பதில் வெற்றி காணப்பட்டுள்ளது.
ஒபெக்கும் ஒபெக்+உம்
2016ஆம் ஆண்டு 14 உறுப்பு நாடுகளைக் கொண்ட Organization of Petroleum Exporting Countries எனப்படும் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு ஏனைய 3 எரிபொருள் உற்பத்தி நாடுகளையும் இணைத்து ஒபெக்+ என்ற ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. முதலில் ஒபெக்+ நாடுகள் ஆறுமாதங்கள் எரிபொருள் உற்பத்தியைக் குறைப்பதற்கு இணங்கின.
அந்த இணக்கம் மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. ஒபெக் நாடுகள் உலக எரிபொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை செய்கிறது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, நோர்வே, கனடா ஆகிய முக்கிய எரிபொருள் உற்பத்தி நாடுகள் இந்த இரு கூட்டமைப்பிலும் இல்லை. ஒபெக்+ நாடுகள் 2018 ஒக்டோபரில் இணங்கிய எரிபொருள் உற்பத்தி குறைப்பு உடன்பாடு எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த உடன்பாட்டில் ஒத்துக் கொள்ளப்பட்டதிலும் பார்க்க ரஷ்யா நாள் ஒன்றுக்கு 250,000 பீப்பாய் மசகு எண்ணெயை உற்பத்தி செய்தது. சவூதி அரேபியாவும் தனது உற்பத்தியை ஒத்துக் கொள்ளப்பட்டதிலும் பார்க்க அதிகரித்திருந்தது. ஆனால் சவூதி எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது 2019இல் செய்யப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் அதன் உற்பத்தி குறைந்திருந்தது.
தொற்று நோயால் பாதிப்படைந்த எரிபொருள் பாவனை
கொரோனா நச்சுக்கிருமி உலகெங்கும் பரவத் தொடங்கியதால் உலகெங்கும் மக்களது பயணங்கள் பெருமளவு குறைந்ததுடன் பல உற்பத்திகளும் பாதிப்படைந்தன. இதனால் உலகில் எரிபொருள் பாவனை குறைந்து எரிபொருள் விலையும் வீழ்ச்சியடைந்தது. இதனால் சவூதி அரேபியா எரிபொருள் உற்பத்தியை குறைக்கும் பொருட்டு எரிபொருள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கையும் ரஷ்யா உள்ளிட்ட மற்ற நாடுகளையும் கொண்ட ஒபெக்+ இன் மாநாட்டை கடந்த 06ஆம் திகதி வியன்னாவில் உள்ள ஒபெக்கின் தலைமையகத்தில் கூட்டியது. உலக எரிபொருள் உற்பத்தியை 1.5வீத குறைக்கும் முன்மொழிவை சவூதி அரேபியா முன்வைத்தது. மாநாட்டில் சவூதி அரேபியாவின் அணுகுமுறை மிரட்டலுடன் கூடியதாக இருந்தது என அறியப்பட்டுள்ளது. ஆனால் சவூதியின் அணுகுமுறை படுதோல்வியை சந்தித்தது. ரஷ்யா எரிபொருள் உற்பத்தியை குறைக்க மறுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறியது.
ரஷ்யா மூன்று காரணங்களுக்காக மறுத்தது. முதலாவது தனது எரிபொருள் விற்பனை குறைவதை ரஷ்யா விரும்பவில்லை. இரண்டாவது அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷெல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் தலை நிமிர்வதை ரஷ்யா விரும்பவில்லை. மூன்றாவது ரஷ்யா தன்னிடம் எரிபொருள் வாங்கும் நாடுகளை இழக்க விரும்பவில்லை. உலக எரிபொருள் பாவனை எந்தளவு குறையும் என்பது பற்றி சரியான தகவல் இல்லாமல் தன்னால் உற்பத்திக் குறைப்பை செய்ய முடியாது என்ற ரஷ்யா எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மட்டும் எரிபொருள் உற்பத்தியைக் குறைக்க தயார் என்றது. அது போதாது என்றது சவூதி அரேபியா. 2014ஆம் ஆண்டு இதே போன்ற முரண்பாடு சவூதிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டபோது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 30இலும் குறைந்தது. 2020 மார்ச்சிலும் அதே நடந்தது. ஆனால் இனி வரும் மாதங்களில் எரிபொருள் விலை $20வரை வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யாவின் எரிபொருள் பொருளாதாரம்
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை தரையில் உற்பத்தி செய்ய ரஷ்யாவில் 40 அமெரிக்க டொலர் செலவாகின்றது. அதே வேளையில் கடலுக்கடியில் 42 அமெரிக்க டொலர் செலவாகின்றது. இந்த செலவு உள்நாட்டு வரிகளையும் உள்ளடக்கியது. வரிகளின்றிய உற்பத்திச் செலவு 30 அமெரிக்க டொலராகும். 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவைத் தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைக்குப் பின்னர் ரஷ்யா தனது பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றது. ரஷ்யாவின் தேசிய வருமானத்தில் 60 வீதத்துக்கு மேல் எரிபொருள் ஏற்றுமதியால் கிடைக்கின்றது. அமெரிக்கா அதை ரஷ்யாவின் வலுவின்மைப் புள்ளியாக இலக்கு வைத்து பொருளாதாரத் தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணத்தில் ரஷ்யா தனது எரிபொருள் ஏற்றுமதி கொள்வனவு செய்யும் நாடுகளை அதிகரிப்பதிலும் அவற்றுடன் நீண்டகால அடிப்படையில் ஒப்பந்தங்களை செய்வதிலும் விநியோக வசதிகளை புதிதாக உருவாக்குவதிலும் 2014இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது. தன்னிடம் கொள்வனவு செய்பவர்களை இழக்க விரும்பாத ரஷ்யா தனது உற்பத்தியைக் குறைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. ஜேர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்க போல்ரிக் கடலினூடாக ஒரு குழாய் கட்டமைப்பை ரஷ்யா உருவாக்கி வருகின்றது. இத்திட்டத்தில் ஜேர்மனி ஈடுபடுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதுடன் அத்திட்டத்தில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளது. இதே போல சீனாவுக்கும் ரஷ்யா குழாய் மூலமாக எரிபொருள் விநியோகம் செய்யவிருக்கின்றது. வளை குடா நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியாவூடாக குழாய் மூலம் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டபோது ரஷ்யாவின் தூண்டுதலால் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் எதிர்த்தார். அதனால் அவரைப் பதவியில் இருந்து அகற்ற எடுத்த முயற்சிகளை ரஷ்யா முறியடித்துள்ளது. சிரியாவினூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் எரிபொருள் கொள்வனவுக்கு தங்கியிருப்பதைக் குறைக்கவே.
சினம் கொண்டெழுந்த சவூதி
உற்பத்திக் குறைப்புக்கு ரஷ்யா மறுத்ததால் சினம் கொண்ட சவூதி தனது நாளாந்த எரிபொருள் உற்பத்தியை 13 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்துவேன் என சூளுரைத்துள்ளது. அதனால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 20வீதம் குறைக்கப்படும். சவூதி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவை பழிவாங்குவதுடன் வட அமெரிக்க ஷேல் நிறுவனங்களையும் அடக்குகின்றது. இதனால் சவூதி எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அரம்கோவின் பங்குகள் 9வீத வீழ்ச்சியடைந்தன. ஈரானையும் இது கடுமையாக பாதிக்கும். ஈரான் சினம் கொண்டு சவூதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். சவூதி எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தனது ஆதரவுடன் இயங்கும் போராளிகள் மூலம் ஏவுகணைத் தாக்குதலை செய்யலாம் அல்லது ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் விநியோகத்தை தடுக்க முயலலாம்.
தற்போது ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்கும் வடமேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சவூதி அரேபியா குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. சவூதி அரேபியா குறைந்த செலவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகும். தம்மால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 17 அமெரிக்க டொலர் வரை தாக்குப் பிடிக்க முடியும் என அது மார் தட்டுகின்றது. சவூதி அரேபியாவின் உற்பத்தி அதிகரிப்பு எரிபொருள் விலைப் போர் எனக் கருதப்படுகின்றது.
இவ்வருட ஆரம்பத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக எரிபொருள் பாவனை 2.5மில்லியன் பீப்பாய்களால் குறைந்துள்ளது. உலக எரிபொருள் முகவரகம் இவ்வருடத்தில் நாளாந்த எரிபொருள் பாவனை 90,000 பீப்பாய்களால் குறையும் என எதிர்வு கூறியுள்ளது. இதை ரஷ்யா எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். ரஷ்யாவின் இப்போதைய பாதீடு எரிபொருள் விலை 42 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப் போவதாகவும் சவூதி அரேபியா சொல்லியுள்ளது. ரஷ்யாவிடம் இருக்கும் 150 பில்லியன் டொலர் நிதியம் எரிபொருள் வருமானக் குறைப்பை அடுத்த ஆறு முதல் பத்து ஆண்டுகள் வரை ரஷ்யாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்கின்றது ரஷ்யா.
சவூதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்து செயற்படுபவர் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. மற்ற அரச குடும்பத்தினரைக் கைது செய்தல், யேமன் மீது செய்யும் கொடூர தாக்குதல், துருக்கியில் ஊடகவியலாளர் கொலை போன்றவற்றில் அவரது நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இவர் எடுத்த ஒரு அவசர முடிவில் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும் தவறான முடிவு என பலரும் கருதுகின்றனர். உலகின் முக்கிய எரிபொருள் கொள்வனவாளர்களாகிய மேற்கு ஐரோப்பாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு அண்மையில் இருப்பது சவூதிக்கு சாதகமான ஒன்று. இளவரசரின் உற்பத்தி அதிகரிப்பு நகர்வு பிழையாகிப் போனால் அவர் குடும்பத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும்.
- வேல் தர்மா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM