பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்ட போதும், அந்தச் செய்திகளை விட மக்களிடம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருப்பது கொரோனா வைரஸ் தான்.
கடந்த வியாழக்கிழமை 22 மாவட்டச் செயலகங்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டன.
வழக்கத்தில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கினால், ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளே முதன்மை பெற்றிருக்கும், எந்தக் கட்சி எந்த இடத்தில், எந்தக் கட்சியில் எந்தெந்த வேட்பாளர்கள் என்ற விலாவாரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்.
வாசகர்களும், அத்தகைய செய்திகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால், கடந்தவாரம் நடுப்பகுதி வரையில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்படும் வரைக்கும் தான், தேர்தல் செய்திகளின் மீது மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
எந்தக் கட்சி எந்தக் கூட்டில், எந்த அணி எந்தச் சின்னத்தில் என்ற விபரங்களை தேடிக் கொண்டிருந்த மக்களுக்கு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பின்னர், அதுபற்றித் தேடும் ஆர்வம் அடியோடு குறைந்து விட்டது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய அதே நாளில் தான், பாடசாலைகளை 5 வாரங்களுக்கு மூடுவதற்கு அரசாங்கம் திடீர் முடிவை எடுத்தது.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் தொடங்கிய பீதியினால் அரசாங்கமும் அவசர அவசரமாக பாடசாலைகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசாங்கத்தின் இந்த முடிவு நாடு முழுவதும் கொரோனா பீதியை தலைவிரித்தாடச் செய்திருக்கிறது.
ஒரு பக்கத்தில் வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் சமூக ஊடகங்களும் பரப்புவதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறிக் கொண்டே அரசாங்கம், பாடசாலைகள், கல்வி நிலைங்களை மூடுவதற்கு உத்தரவிட்டது, மக்கள் மத்தியில் பீதியை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதற்குப் பின்னர் தான், வர்த்தக நிலையங்களை மக்கள் முற்றுகையிட்டு முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்தனர்.
வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளில் கூட, இவ்வாறான நிலை இருக்கும் போது, மூன்று தசாப்த காலப் போரின் போது, எத்தனையோ ஊடரங்குச் சட்டங்கள், பொருட்களை பதுக்குதல், தட்டுப்பாடு, விலையேற்றங்கள், கள்ளச் சந்தை எல்லாவற்றையும் பார்த்து விட்ட இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மட்டும் எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்?
பாடசாலைகள் மூடப்பட்டு, தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு விட்ட நிலையில், இலங்கையும் இப்போது கொரோனா பாதித்த நாடுகளில் ஒன்று போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
இது போதாதென்று, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கூட, இராணுவம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை, இராணுவத்தின் இரண்டாவது மனிதாபிமான போர் நடவடிக்கை என்று வர்ணித்திருக்கிறார். இது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
பாடசாலைகளை மூடியது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்று அரசாங்கம் கூறினாலும், தேர்தல் வேளையில் தேர்தல் நலனை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவே இது தென்படுகிறது.
ஏனென்றால், பாடசாலைகளில் பரவக் கூடிய வதந்திகளும் பதற்றங்களும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரும்பக் கூடிய நிலைமையை ஏற்படுத்தும். அவ்வாறான நிலை ஏற்பட்டால், அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக் கூடிய ஆபத்து இருக்கும்.
தேர்தல் வெற்றியைக் கருத்திற் கொண்டே, அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருந்ததே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறுவது ஏமாற்று வேலை தான்.
கொரோனா வைரஸ் இலங்கையர்கள் மத்தியிலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முக்கியமான சவால் ஒன்று எழுந்திருக்கிறது.
அடுத்த மாதம், 25ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் நடக்குமா, தேர்தலை நடத்த முடியுமா என்பதே இப்போது சிக்கலான கேள்வியாக தெரிகிறது.
ஏனென்றால், அடுத்தடுத்த நாட்களில், அடுத்தடுத்த வாரங்களில் நிலைமைகள் எப்படியிருக்கும் என்பதை அனுமானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா உலகெங்கும் பரவி வரும் வேகமும், இலங்கையிலும் பரவக் கூடிய சாத்தியங்களும், கணிக்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாடசாலைகளை மூடும் முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை, அத்தகைய கணிப்பு யாரிடத்திலும் இருக்கவில்லை. அந்தளவுக்கு பாரதூரமான நிலை தோன்றியிருக்கவில்லை.
கொரோனாவினால் பலர் உயிரிழந்த பிரித்தானியா இந்தப் பத்தியை எழுதும் வரை பாடசாலைகளை மூடவில்லை. பிரான்ஸ் கூட கடந்த வெள்ளிக்கிழமை தான் பாடசாலைகளை மூட உத்தரவிட்டது. ஐரோப்பிய நாடுகளின் அளவுக்கு இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து இல்லாத போதும், பாடசாலைகள் மூடப்பட்டது தேர்தல் கால முன்னெச்சரிக்கை தான்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு சரியான பதிலை அளிக்க முடியாத சூழலே உள்ளது.
ஏனென்றால், தேர்தலில் பொதுக்கூட்டங்களும், வீடு வீடாகச் சென்று நடத்தும் பிரசாரங்களும் முக்கியமானவை. (3ஆம் பக்கம் பார்க்க)
கொரோனா...... (தொடர்ச்சி)
தற்போதைய சூழ்நிலையில், பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் செல்லப் போவதில்லை. இதனால் தேர்தல் பிரசாரங்களை கட்சிகளால் முன்னெடுக்க முடியாமல் போகும்.
அதேவேளை, தேர்தல் நடத்தப்பட்டால், வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா, வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.
இவற்றைத் தாண்டி தேர்தலை நடத்தினாலும், வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்களா என்ற கேள்வி உள்ளது.
இந்தநிலையில் தான், தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்து, தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தேர்தல் சட்டங்களின் படி, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 55 நாட்களுக்குப் பின்னரும், 66 நாட்களுக்கு முன்னரும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி, ஏப்ரல் 25ஆம் திகதி நடக்கவுள்ள தேர்தலை ஒத்திவைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாத நிலையில் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டால் அது அரசியலமைப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
2018 ஒக்டோபர் அரசியல் குழப்பத்தைப் போன்றதொரு நிலைமைக்கும் அது காரணமாக அமையலாம்.
தேர்தல் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்படுவது தேர்தல் சட்டங்களில் இருந்து விலகும் நடவடிக்கையாக பார்க்கப்படும் என்றும், தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும், சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கொரோனா விவகாரத்தில் அங்கும் விலக முடியாமல் இங்கும் விலக முடியாமல் 'ஆப்பிழுத்த குரங்கு போல' சிக்கிப் போயிருக்கிறது. எந்த முடிவை எடுத்தாலும், அது அரசாங்கத்துக்கு ஆபத்தைக் கொடுக்கும்.
தேர்தலை நடத்தினாலும் சிக்கல் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தாலும் சிக்கல். இந்த நிலையில் அரசாங்கம் எந்த முடிவை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு உடனடியாக எந்த அனுமானத்தையும் முன்வைப்பது கடினம்.
அதேவேளை, தேர்தலை நடத்துவது அரசாங்கத்துக்குப் பாதகமானதாக அமையும் என்று கருதினாலோ, கொரோனா ஆபத்து அதிகரித்தாலோ, சட்டதிட்டங்களைப் புறக்கணித்துச் செயற்படுவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தயங்கமாட்டார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவாரா? அதன் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என்ற கேள்விகள் இருக்கின்றன.
அவ்வாறான வாய்ப்புகள் இல்லாவிட்டால், அரசியலமைப்பை இடைநிறுத்தி, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்குக் கூட, ஜனாதிபதி தயக்கம் காண்பிக்கமாட்டார்.
இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகருவதாக குற்றச்சாட்டுகள், கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி அவ்வாறானதொரு முடிவை எடுக்கும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
ஆக மொத்தத்தில் கொரோனா இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தானதாகவே அமையும்.
- ஹரிகரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM