(எம்.மனோசித்ரா)
இலங்கையை கொரோனா வைரஸ் பரவும் நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ள போதிலும் அவ்வாறானதொரு பாதகமான நிலைமை இதுவரையில் ஏற்படவில்லை. தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நாட்டில் மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கொவிட் 19 ஊடக மத்திய நிலையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் சரத் ரோகசிறி ஆகியோர் தெரிவித்த விடயங்கள் வருமாறு.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க
இலங்கையில் இதுவரையில் 10 பேர் மாத்திரமே தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 10 பேரில் இருவர் பெண்களாவர். இதில் 8 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்பதோடு, ஏனைய இருவரும் பிறிதொருவரிலிருந்து தொற்றுக்குள்ளானவர்களாவர். எனினும் எவரும் பாரதூரமான நிலைமைக்கு உள்ளாகவில்லை.
சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்
சுகாதார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாடு பூராகவுமுள்ள வைத்தியசாலைகளில் சந்தேகத்தின் பேரில் 133 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்களாவர். மேலும் பொது சுகாதார பரிசோதகர்களால் இதுவரையில் 4405 பேர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் இலங்கையர்கள் 2769 பேரும் சீனர்கள் 1120 பேரும் உள்ளடங்குகின்றனர்.
10 ஆம் திகதிக்கு முன்னர் வந்தவர்களின் தகவல் சேகரிப்பு
இம்மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே மருத்துவ பரிசோதனைகளும் தனிமைப்படுத்தல் கண்காணிப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அதற்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்து பலர் வருகை தந்துள்ளனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்த இலங்கையர்கள், வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்டோரின் தகவல்கள் விமான நிலையங்களில் சேகரிக்கப்படவுள்ளன. பின்னர் இவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை வைரஸ் பரவும் நாடாக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை தொற்று பரவும் நாடாக பெயரிட்டுள்ள போதிலும் அவ்வாறான பாரதூரமான நிலைமை இன்னும் ஏற்படவில்லை. ஏற்படாது எனக் கூற முடியாது. முடிந்தளவு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களும் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் சிகிச்சை பெறுவதற்காக போதுமான வசதிகள் காணப்படுகின்றன. சிறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அவை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
உலக நாடுகள்
உலக நாடுகளின் நிலைவரத்தை அவதானிக்கும் போது இத்தாலியில் வைரஸ் பரவல் அதிகரித்த போக்கினையே காட்டுகின்றது. வைரஸ் பரவலுக்கு முன்னர் இத்தாலி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமையே இதற்கான காரணமாகும். தென் கொரியாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவிலேயே இவ் வைரஸ் உருவாகியது. பரவியுள்ள வைரஸ் என்ன என்று கண்டறிவதற்கே அவர்களுக்கு சிறிது காலம் எடுத்தது. எனவே தான் அந்நாட்டில் பாதிப்புகள் அதிகமாகின. எனினும் தற்போது அங்கும் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பலர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல கருத்து
இங்கு அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருத்தலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமையவே திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளை தூய்மைப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இன்று மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படமாட்டாது.
வெளிவிவகார அமைச்சர்
தினேஷ் குணவர்தனவுக்கு தொற்றில்லை
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவா சென்று வந்ததனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவை உண்மைக்கு புறம்பானவையாகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கொரோனா தொற்றினை தடுப்பது தொடர்பில் சகல அரச தலைவர்களுடனும் இது குறித்து கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவித்தார்.
குடியகல்வு திணைக்களத்தின்
கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் ரூபசிறி
இங்கு கருத்துத் தெரிவித்த குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் ரூபசிறி,
குடிவரவு - குடியகல்வு திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் நிறுவனங்களைப் போன்றல்லாமல் அதிகளவான மக்கள் வருகைதரும் இடமாகும். எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி சாதாரண தேவைகள் இருப்பவர்கள் இரு வார காலத்துக்கு திணைக்களத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக சுகயீனமடைந்துள்ளவர்கள் வருகைத் தராமலிருப்பது சிறந்ததாகும்.
காரணம் பரிசோதனை கருவி மூலம் பரிசோதிக்கும் போது அவர்கள் திணைக்களத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன்போது அவர்கள் வீணான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். இதனைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே வருகைதர வேண்டாம் என்று கோருகின்றோம். தற்போது 15 நாடுகளுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள் ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் சில நாடுகளுக்கும் விசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
பிடியாணையின்றி கைது செய்ய முடியும்
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை யில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து வதற்காக 1897 ஆம் இலக்க 3 உறுப்புரை நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் சட் டத்தின் அடிப்படையில், நோய் பரவும் வகையில் செயற்படுபவர்களை பிடியாணை யின்றி பொலிஸாரால் கைதுசெய்ய முடி யும் என்று பொலிஸ் தலைமையகம் தெரி வித்துள்ளது.
யாத்திரை, சுற்றுலா செல்லத்தடை
எதிர்வரும் இரு வார காலத்துக்கு மத யாத்திரைகள், பயணங்கள், சுற்றுலா செல் வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக புத்த சாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறி வித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM