அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் செயற்படும் தலிபான் அமைப்பும் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் கட்டார் தலைநகர் டோகாவில் 2020 Feb- 29 இல் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. ஆனால் நான்கு நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் அரச படைகளின் காவலரணை தலிபான்கள் தாக்கிய போது அமெரிக்க வான் படையினர் அவர்கள் மீது குண்டுகளை வீசினர். அமெரிக்காவும் தலிபானும் செய்த உடன்பாட்டின் படி ஆப்கான் அரசு சிறைகளில் உள்ள 5,000 தலிபான் போராளிகளையும் தலிபான் தன்னிடமுள்ள ஆயிரம் அரச படையினரையும் விடுதலை செய்ய வேண்டும். ஆப்கான் அரசு கைதிகளை விடுதலை செய்ய மறுத்ததனால் தாம் தாக்கினோம் என்கின்றனர் தலிபான் அமைப்பினர். 2020 மார்ச் 3 ஆம் திகதி மட்டும் தலிபான்கள் 45 இடங்களில் அரச படையினர் மீது தாக்குதல் செய்தனர்.
உடன்பட்ட உடன்படிக்கை
அமெரிக்க -தலிபான் உடன்பாட்டின்படி 145 நாட்களுக்குள் ஐயாயிரம் அமெரிக்கப் படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறவேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஆப்கான் அரசும் தலிபான்களும் அமைதிப் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். ஆப்கானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலிபான்கள் அங்கீகரிக்கவில்லை. அதை வெளியாரின் கைப்பொம்மையாகவே பார்க்கின்றார்கள். ஆனால், அமெரிக்கா அந்த அரசையும் அதன் படைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு உடன்பாடு கையொப்பம் இட்ட பின்பும் உள்ளது என்கின்றது. ஆப்கானில் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால் அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் தாமதிக்கப்படும் என்கின்றது அமெரிக்கா. அமெரிக்க தலிபான் உடன்பாட்டின்படி
1. அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படை ஆப்கானிலிருந்து வெளியேற்றப்படும்,
2. தலிபான்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
3. அல் –- கொய்தா அமைப்புக்கு தலிபான் எந்த உதவியும் செய்யக் கூடாது.
4. ஆப்கானில் உள்ள அரசும் தலிபானும் அதிகாரங்களைப் பகிர்வதற்கு பேச்சுவார்த்தை செய்ய வேண்டும்.
5. ஆப்கான் அரசும் தலிபான்களும் தம்மிடமுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
6. அமைதி நடவடிக்கைகள் சரியாக நடந்தால் அமெரிக்கப் படைகள் 2021இன் முற்பகுதியில் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேற வேண்டும்.
ஈராக், லிபியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்து கொண்டிருந்த போர்கள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு வேண்டாதவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர்; அமெரிக்கா வெறுக்கும் அமைப்புக்கள் அடக்கப்பட்டன. இவற்றில் எந்த ஒரு நாட்டிலும் அமைதி கொண்டு வரப்படவில்லை. ஆப்கானில் அமெரிக்காவிற்கு பிடிக்காத போராளி அமைப்புக்களை அடக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் தலிபானுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் ஒன்றைச் செய்து அதை தனது சாதனையாகக் காட்டி 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற முயற்சிக்கின்றார். 2016இல் இருந்து ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்ற விருப்பம் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடையேயும் மக்களாட்சிக் கட்சியினரிடையேயும் அதிகரித்துள்ளது. 2016 நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையின் போது அமெரிக்கப் படைகளின் வெளியேற வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. தலிபானுடன் ஒரு உடன்படிக்கை இல்லாமல் வெளியேற முடியாது என்பதையும் பலர் உணர்ந்திருந்தனர். சிலர் உடன்பாடு இல்லாமல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.
தலிபானின் வரலாறு
1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் முல்லா மொஹம்மட் உமர், குரானின் மாணவர்கள் என்னும் பொருள் கொண்ட தலிபான் அமைப்பை ஆரம்பித்தார், அதன் கொள்கை இஸ்லாமிய அடிப்படைவாதமாக இருந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் 1979 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஏற்படுத்தி அமெரிக்க சார்பு ஆட்சியை ஈரானிலிருந்து அகற்றி இஸ்லாமிய மத அடிப்படையில் மக்களாட்சியையும் கலந்த ஒரு அரசை ஈரானில் உருவாக்கியது. ஆனால் தலிபான் சுனி இஸ்லாமிய அமைப்பாகும். அதன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். அதன் நோக்கம் குரான் வழிப்படி இயங்கும் ஓர் அரசை ஆப்கானிஸ்தானில் உருவாக்கி அங்கு அந்நியத் தலையீட்டை ஒழித்துக் கட்டுவதாகும். சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் தூண்டுதல்களாலும் உதவியுடனும் போராடிய முஜாஹிதீன் அமைப்பின் பல போராளிகள் தலிபானில் இணைந்து கொண்டனர்.
தலிபானின் கொள்கைகள்
நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும், தொலைக்காட்சி, இசை போன்றவை தடை செய்யப்பட வேண்டும், வேற்று மதங்களுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், பெண்கள் தலையில் இருந்து கால் வரை மூடும் ஆடைகளை அணிய வேண்டும், பெண்கள் பாடசாலைக்குப் போகக் கூடாது. அவர்கள் வீட்டில் மட்டும் பணி புரிய வேண்டும், அவர்கள் வெளியில் ஆண் துணையின்றிச் செல்லக் கூடாது என்பன தலிபானின் கொள்கையாகும். 1997 ஆம் ஆண்டு தலிபான் ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிய அமீரகம் ஆப்கானிஸ்தான் என மாற்றியது. அவர்களது ஆட்சியை பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அங்கீகரித்திருந்தன. 1997 ஆம் ஆண்டு முல்லா உமர் சவூதி அரேபியரான ஒசாமா பின் லேடனுடன் உறவை ஏற்படுத்த அவரது அல் கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானுக்கு நகர்த்தப்பட்டது. 1996 முதல் 2001 வரை தலிபானின் ஆட்சி மக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியது. 2007 ஆம் ஆண்டளவில் தமது தவறை உணர்ந்த தலிபான்கள் மக்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கினர். பாடசாலைகளையும் தொண்டு நிறுவனங்களையும் தமது இடையூறு இல்லாமல் செயற்பட அனுமதித்தனர். தம்மால் நாட்டை ஆள முடியும் என மக்களை அவர்கள் நம்ப வைக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
எல்லா இனக்குழுமங்களுக்கும்
ஒரே பிரதிநிதியா ?
பல இனக்குழுமங்களைக் கொண்ட ஆப்கானில் தலிபானுக்கான ஆதரவுத் தளம் பஷ்ருன் இன மக்களிடையைதான் காணப்படுகின்றது. தலிபான் அமைப்பின் உயர் மட்டத்தினரில் ஐம்பது வீதத்தினர் கந்தஹார் மாகாணத்தில் வாழும் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஹஜாரா, தஜிக், உஷ்பெக் ஆகிய இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் தலிபானை வெறுக்கின்றார்கள். தலிபான்கள் தாமே முழு ஆப்கானையும் பிரதிநிதித்துவம் செய்வதாக அடம் பிடிக்கின்றனர். அவர்கள் தமது இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி ஆட்சி நடத்தும் கொள்கையில் எவ்வளவு தளர்வு காட்டுவார்கள் என்பதில் தான் ஆப்கானில் அமைதி திரும்புமா என்ற கேள்விக்கான பதில் இருக்கின்றது.
பாகிஸ்தான் எப்படிப் பார்க்கும் ?
தலிபான்கள் மீதான 60,000 வான் தாக்குதல்களை அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானில் இருந்தே மேற்கொண்டனர். தலிபான்களுடனான போருக்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் உதவி மிக அவசியமானதாக இருக்கின்றது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய பின்னர் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை என்ற நிலையை பாகிஸ்தான் இழக்க நேரிடலாம். பாகிஸ்தான் உருவாக்கிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் பல ஆப்கானில் செயற்படுகின்றன. அதில் ஹக்கானி அமைப்பு முக்கியமானது. அது இந்தியாவுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டுடன் இருக்கும் அமைப்பாகும். பாகிஸ்தான் ஆதரவு அமைப்புக்கள் பாகிஸ்தானிற்குள் நுழைந்தால் அது பாகிஸ்தானின் உறுதிப்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் ஆப்கான் அமைதி முயற்சியை பாகிஸ்தான் குழப்ப முயன்றால் பாகிஸ்தானுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதாரத் தடையைக் கொண்டு வரலாம். ஏற்கனவே மோசமடைந்துள்ள பாகிஸ்தானின் பொருளாதாரம் அதனால் பெரிதும் பாதிக்கப்படும்.
அமெரிக்கப் படையினர் திட்டமிட்டபடி ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு ஒரு உறுதியான ஆட்சி அமையாவிட்டால் ரஷ்யா, ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிக்கலாம். அதற்குதூண்டுகோலாக ஆப்கானிஸ்தானில் பெருமளவு கனிம வளங்கள் இருக்கின்றன. அவற்றின் பெறுமதி ஒன்று முதல் மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கனிம வளங்களை மேற்கு நாட்டு கூட்டாண்மை நிறுவனங்கள் போராளிக் குழுக்களிடமிருந்து மிகக் குறைந்த விலை கொடுத்து வாங்கி பெரும் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்தன. 2020 நவம்பர் தேர்தலின் பின் அமெரிக்கா மீண்டும் ஆப்கானில் வேறு விதமாக வரலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM