நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வருமானத்திற்கு மிஞ்சிய செலவுகளால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதில் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதிலும் எமது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்னமும் குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்திருந்தபோது தீர்மானிக்கப்பட்ட விலையிலேயே எரிபொருட்கள் தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்றே எரிவாயுவின் விலையும் சர்வதேச சந்தையில் குறைவடைந்துள்ளபோதிலும் எமது நாட்டில் அதன் விலையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது உள்நாட்டிலும் அதன் விலைகள் அதிகரிப்பதுவும் சர்வதேச சந்தையில் விலைகள் குறைவடையும்போது அதன் பலாபலன்களை மக்கள் அனுபவிக்க முடியாத நிலைமையை உருவாக்குவதும் எமது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களாகவே மாறியிருக்கின்றன.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் உள்நாட்டிலும் எரிபொருட்களின் விலைகளை குறைக்கவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தற்போது கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்தக் கோரிக்கையினை விடுத்திருக்கின்றார்.
கொழும்பில் நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய அவர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கையில் எரிபொருட்களின் விலையை 41 வீதத்தால் குறைக்க முடியும். ஆகவே உடனடியாக எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.85 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் தற்போது அதன் விலை 36.79 அமெரிக்க டொலராக குறைவடைந்திருக்கிறது. எனவே எமது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறைக்கப்படவேண்டும். எரிவாயுவின் விலையும் 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதற்கேற்றவகையில் அதன் விலையையும் குறைக்க வேண்டும். சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் மக்கள் பக்கம் சிந்திக்காதுள்ளமை ஏன் என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையின்படி இலங்கையில் பெற்றோல் 70 ரூபாவுக்கும் டீசல் 60 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் 40 ரூபாவுக்கும் வழங்க முடியும். எரிவாயுவின் விலையை 1000 ரூபாவாக குறைக்க முடியும். ஆனால் அரசாங்கம் தனது செலவுகளை இலகுபடுத்த விலைக்குறைப்புக்களை செய்யாதுள்ளது. ஒருமாதமாக எரிபொருள் விலைகளை குறைக்குமாறு கூறியும் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவில்லை. உடனடியாக எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைக்காவிடின் மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை ஆட்டம்காண வைக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டி வரும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றார்.
எரிபொருள் விலைகளை குறைக்கவேண்டுமென்று ஒருமாதத்திற்கு முன்னரும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச பதவி வகித்தபோது பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். ஒருமாதத்திற்கு முன்னர் 10 வீதமாக மசகு எண்ணெயின் விலை குறைவடைந்திருந்தது. தற்போது பாரியளவில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரான மங்கள சமரவீரவும் கருத்து தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சி அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போது செயற்படுத்தியிருந்தால் எரிபொருட்களின் விலை 20 ரூபாவால் குறைந்திருக்குமென மங்கள சமரவீர கூறியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவி வகித்தபோது மாதம்தோறும் எரிபொருள் விலைகளை தீர்மானிப்பதற்காக எரிபொருள் விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கிணங்க மாதம்தோறும் 10ஆம் திகதி இந்த எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வந்தது.
அன்றைய காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தமையினால் உள்நாட்டிலும் மாதந்தோறும் அதன் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்தது. அந்தவேளையில் விலை சூத்திரத்திற்கு எதிராக அன்றைய எதிரணியாக இருந்த பொதுஜன பெரமுன பெரும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது நாட்டில் அதன் விலைகளில் அதிகரிப்பதும் சர்வதேச சந்தையில் குறைவடையும்போது உள்நாட்டிலும் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் அரசாங்கமொன்று தேவையா என்றும் எதிரணியினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அன்று விலை சூத்திரத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியபோதிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. ஏனெனில், சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வந்ததே தவிர குறைவடையவில்லை. ஆனால் தற்போது மசகு எண்ணெயின் விலை பெருமளவு குறைவடைந்துள்ளமையினால் அதன் பலாபலன்கள் உள்நாட்டு மக்களுக்கும் கிடைக்கவேண்டியது அவசியமானதாகும்.
சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப உள்நாட்டிலும் எரிபொருட்களின் விலைகளையும் எரிவாயுவின் விலையையும் குறைப்பதற்கு அரசாங்கமானது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். எரிபொருட்களின் விலைகள் பெருமளவில் குறைவடையுமானால் அதன் மூலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உணவுப்பண்டங்களின் விலைகளும் குறைவடையும் நிலைமையை உருவாக்க முடியும்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்திருக்கின்றார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையினால் அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இரு வாரத்திற்குள் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனைவிட ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை (நேற்று) நடத்தப்படும் அமைச்சரவை கூட்டத்தின்போது இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் நேற்று முன்தினம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில் அதன் பலாபலன்களை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கையை அமைச்சரவை உடனடியாக எடுக்கவேண்டியது அவசியமாக உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியானதையடுத்து நாட்டு மக்களுக்கு வரிச்சலுகைகள் பல வழங்கப்பட்டன. ஆனால் இந்த வரிச்சலுகை மூலமாக பொருட்களின் விலைகள் இன்னமும் குறைவடையவில்லை. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தரப்பினர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர். விலை குறைப்புக்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கமானது கடந்த ஒரு மாதகாலமாக சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளபோதிலும் உள்நாட்டில் அதன் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் தற்போது சுட்டிக்காட்டியிருக்கின்றன.
எரிபொருட்களின் விலைகள் மற்றும் எரிவாயுவின் விலை என்பவற்றினை உடனடியாக குறைப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் ஓரளவுக்கு குறைக்க முடியும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதியும் அமைச்சரவையும் செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
( 12.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM