பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக கொழும்பு, கம்பஹா போன்ற சில மாவட்டங்கள் நட்சத்திர வேட்பாளர்களால் கூடுதல் கவனிப்பைப் பெறுவது வழக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த முறை குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டதை அடுத்து, அனைவரினது கவனமும் அங்கு திரும்பியிருந்தது.இந்தமுறை கொழும்பு, குருநாகல் போன்ற முக்கியமான மாவட்டங்களை விட கூடுதல் கவனிப்பைப் பெறப் போகின்ற மாவட்டமாக இருக்கப் போவது பொலன்னறுவை மாவட்டம் தான்.ஏனென்றால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் அவர், பொலன்னறுவையில் தனக்கு உள்ள வாக்கு வங்கியைக் கொண்டு, பொதுஜன பெரமுனவுக்குள் அதிகாரம் செலுத்த முனைந்தார்.
நாற்காலி சின்னத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழேயே போட்டியிட வேண்டும் என்று நிபந்தனைகளைப் போட்டுப் பார்த்தார். பொதுஜன பெரமுன அதற்கு இணங்கவில்லை.கடைசியில், வேறு வழியின்றி பொதுஜன பெரமுனவின் கீழ், மொட்டு சின்னத்தில் போட்டியிட இணங்கியிருக்கிறார். அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் தருவதாக பொதுஜன பெரமுன கூறியது. அது அவமானம் என்று மறுத்து விட்டு மொட்டு சின்னத்திலாவது தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். 2015 இல் ஒட்டு மொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தெரிவு செய்த ஒரு தலைவர், பொலன்னறுவை மாவட்ட மக்களின் அங்கீகாரத்துக்காக போட்டியிடும் நிலைக்கு கீழ் இறங்கியிருக்கிறார்.
அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து கௌரவமாக ஒதுங்கியிருக்கலாம் அல்லது ஓய்வுபெற்றிருக்கலாம் ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.முன்னாள் ஜனாதிபதிகளில் ஜே.ஆர் ஜயவர்த்தன முதுமையினால் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். டி.பி விஜேதுங்க போட்டி அரசியலிலிருந்து ஒதுங்கினார். சந்திரிகா குமாரதுங்க வேறுவழியின்றி மஹிந்த ராஜபக் ஷ கட்சியைப் பிடுங்கிக் கொண்டதும், அரசியலிலிருந்து ஒதுங்கினார்.ஆனால், ஆட்சியையும் கட்சியையும் இழந்த போதும் மஹிந்த ராஜபக் ஷ அரசியலை விட்டு ஒதுங்காமல், ஓய்வுபெறாமல், புதிய கட்சியை தொடங்கி தனக்கான புதிய அரசியலை ஆரம்பித்தார்.மைத்திரிபால சிறிசேன ஆட்சியை இழந்தாலும் கட்சியை இழக்கவில்லை. அந்த 'கைத்தடி' தான், அவரை அரசியலிலிருந்து விலகிச் செல்லாமல் காப்பாற்றி வருகிறது. அதன் உதவியுடன், மஹிந்த ராஜபக் ஷ வைப் போல மீண்டெழ முடியும் என்று அவர் கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேன ஒரு கார்ட்போட் வீரர். பெரிய எதிர்பார்ப்புகளுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட போதும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவராக தவறாக முடிவுகளை எடுக்கின்ற ஒருவர் என்ற அடையாளப்படுத்தலுடன் தான் கடந்த நவம்பர் மாதம் பதவியை விட்டு விலகிச் சென்றார்.
19 ஆவது திருத்தச் சட்டத்தினால், தனக்கு நிறைவேற்று அதிகாரங்கள் இல்லை என்றும் அதனால் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கூறுகிறார். அதற்காகவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் மக்களாணையைக் கோருகிறார்.
மைத்திரிபால சிறிசேனவை 19 ஆவது திருத்தச்சட்டம் கட்டுப்படுத்தவில்லை. அவர், 18 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த பெரும்பாலான அதிகாரங்களைக் கொண்டிருந்தார். அவரால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் முட்டி மோதியிருக்க முடியும். ஆனால் குறுக்குவழியில் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்ததை தவிர, வேறெதையும் செய்யவில்லை. அவரது இந்த இயல்பு நாட்டு மக்களிடத்தில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது.அவர் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இப்போது அவர், தனது சுயமரியாதையைக் கூட இழந்து போய் மொட்டுச் சின்னத்தின் ஊடாகவேனும் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு தயாராகி விட்டார்.மைத்திரிபால சிறிசேனவை ராஜபக் ஷவினர் யாரும் தமக்கான போட்டியாக கருதவில்லை. அவரையும் அவரது தலைமையிலான சுதந்திரக் கட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.அவருக்கு போட்டியாகவும் தலைவலியாகவும் இருப்பவர் பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் ரொஷான் ரணசிங்க தான். அவர் தான், பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவார். அவருக்குக் கீழ் தான் மைத்திரிபால சிறிசேன போட்டியிட முடியும். அதுபற்றியெல்லாம் மைத்திரி கவலை கொள்ளவில்லை.அதனால் தான், மைத்திரிபால சிறிசேனவுக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிட வெட்கம் இல்லையா என்று கேட்டிருந்தார் ரொஷான் ரணசிங்க. பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நிதியில் நான்காயிரம் கோடி ரூபாவை அவர் மோசடி செய்துள்ளார் என்றும் ரொஷான் ரணசிங்க குற்றம்சாட்டியிருந்தார்.
அண்மையில் ரொஷான் ரணசிங்கவின் ஏற்பாட்டில் பொலன்னறுவையில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் பங்கேற்றிருந்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அன்று பொலன்னறுவையில் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'அண்மையில் நான் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, நீர்க்காகம், ஒரு மீனைப் பிடிப்பதைக் கவனித்தேன். அதனை அருகிலுள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது. அப்போது, திடீரென பறந்து வந்த ஒரு கழுகு, நீர்க்காகத்திடம் இருந்து மீனைப் பறித்துக் கொண்டு போனது நாங்களும் அந்தக் கழுகுபோல தாக்குவோம்' என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
'நீர்க்காகத்திடம் இருந்து இரையைப் பறித்தெடுத்த கழுகு போல செயற்படுவோம்' என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக பொதுஜன பெரமுனவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் இதனால் கோபமடைந்திருக்கிறார்கள்.இந்த விவகாரம் குறித்து பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பிய போது, மைத்திரிபால சிறிசேனவினால் பொதுஜன பெரமுனவுக்கு ஆபத்து இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர்கள் உசாராகியிருக்கிறார்கள். மைத்திரிபால சிறிசேனவின் ஆட்களுக்கு பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.மைத்திரிபால சிறிசேனவின் மீது ராஜபக் ஷவினரால் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாது என்பது உண்மை தான்.
ஏனென்றால், 2014இல் மஹிந்த ராஜபக் ஷவுடன் முதல் நாள் இரவு அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மைத்திரி மறுநாள் காலை பொது வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்டார்.அதற்குப் பின்னர் அப்பம் என்பது அரசியல் குழிபறிப்புக்கான ஒரு அடையாளமாக பார்க்கப்பட்டது.அதுபோலத் தான், கழுகு போல இரையை (ஆட்சியை) கொத்திக் கொண்டு போய் விடுவாரோ என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் உலாவுகின்றன.மைத்திரிபால சிறிசேனவின் கழுகு கதைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் கழுகுகளாக இருக்க முயன்ற போது நாட்டு மக்களே கஷ்டப்பட்டனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன கழுகுபோல இனிமேல் தான் தாக்குவார் என்றில்லை. அவர் ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தில் கூட அவ்வாறு தான் நடந்து கொண்டார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ.கழுகு போல தாக்கப் போவதாக, மைத்திரிபால சிறிசேன கூறிய பின்னரும் அவரையோ அவர் சார்ந்தவர்களையோ ராஜபக் ஷவின் தமது சிறகுக்குள் வைத்திருக்க முனைவார்களா என்பது சந்தேகம் தான்.ராஜபக் ஷவினருக்கு தற்போது தேவைப்படுவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை. அதனைப் பெறுவதற்கு சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி அவர்களுக்கு அவசியம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டால், மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற கழுகுகளை ராஜபக் ஷவினர் விட்டு வைக்கமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஒருமுறை கழுகிடம் இரையைப் பறிகொடுத்தவர்கள், இனிமேல் உசாராக நடந்து கொள்வார்கள்.
அதேவேளை மைத்திரிபால சிறிசேன தன்னைக் கழுகு என்று ஒப்பிட்டிருந்தார். ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்த அந்தச் செய்தி குறித்து, கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்த ஒருவர் அவர் கழுகு அல்ல நச்சுப் பாம்பு என்று குறிப்பிட்டிருந்தார்.உண்மையில் அவர் கழுகும் அல்ல பாம்பும் அல்ல தவளை என்பதே பொருத்தம்.'நுழலும் (தவளை) தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை அறிந்தவர்களுக்கு இது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது புரியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM