பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களில் இன்னுமொரு சாரார் பொதுஜன பெரமுனவின் தலைமையிலான ஆட்சியை நிறுவ வேண்டும். அதுவே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்று அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே பெரும்பான்மைக் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் உடன்படிக்கைகளை செய்து இணைந்து கொண்டிருக்கின்றன. பாராளு மன்றத் தேர்தலுக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை சம்பவங்களின் பின்னாலும் சுயநல அரசியலே காணப்படுகின்றது. நாட்டு நலன், சமூக நலன் என்பது இரண்டாம் நிலையிலேயே இருக்கின்றன.
பேரினவாதக் கட்சிகள்
தேர்தல் காலங்களில் பேரினவாதக் கட்சிகள் நாட்டு நலன், பௌத்த மதம், பௌத்த நாடு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற சொற் பிரயோகங்களின் மூலமாகவே பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று வந்துள்ளன. தேர்தல் முடிந்ததும் இக் கருத்தாடல்கள் யாவும் கைவிடப்படும். ஆனால், இக்கருத்தாடல்களின் மூலமாக உருவாக்கப்பட்ட இனவாதம் மட்டும் தொடர்ந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பேரினவாதக் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்வார்கள். அவைகளில் இனவாதக் கருத்துகளே முன்னிலை வகிக்கும். சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக கருத்துகளை முன் வைக்கும் கட்சிக்கும் வேட்பாளருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள் வாக்களிக்கும் சூழலை பேரினவாதக் கட்சிகள் உருவாக்கியுள்ளன.
பேரினவாதக் கட்சிகள் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டாலும் அவற்றின் நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்தாலும் அக்கட்சிகளின் பின்னால் அணி திரள்வதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் சிறுபான்மையினக் கட்சிகளும் தலைவர்களும் வாக்காளர்களும் தயாராகவே னஉள்ளனர். பேரினவாதக் கட்சிகளின் முகவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் கட்சிகளை இனவாதக் கட்சிகள் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ஊனக் கண்களுக்கு பேரினவாதக் கட்சிகளின் இனவாத நடவடிக்கைகள் தெரிவதில்லை.
அதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகள் இத்தகைய பேரினவாதக் கட்சிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அக்கட்சிகளை புகழ்ந்து கொண்டிருப்பதனையும் பார்க்கின்றோம். சிறுபான்மைக் கட்சிகள் தமது இனத்தின் சுயத்தை தமது சுயநல அரசியலுக்காக பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். உடன்படிக்கைகள் என்ற மாயையை காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மைக் கட்சிகள் என்ன தான் பல உடன்படிக்கைகளை செய்து கொண்டாலும் அந்த உடன்படிக்கைகளின் மூலமாக சமூகத்துக்கு எதனையும் சாதித்துக் காட்டவில்லை. சமூகத்தின் உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் நிலையே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.
சிறுபான்மையினரின் முதுகில் சிறுபான்மைக் கட்சிகளின் உதவியுடன் சவாரி செய்து கொண்டிருந்த பேரினவாத அரசியல் கட்சிகள் பிளவுபட்டுக் கொண்டிருப்பதனையும் பார்க்கின்றோம். 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது. அதேவேளை, அக்கட்சியிலிருந்து பிரிந்து அமைக்கப்பட்ட பொதுஜன பெரமுன மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அக்கட்சி ஜனாதிபதி ஒருவரை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் அக்கட்சியும் பிளவுபடும் நிலையில் இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டமைப்புக்கு சஜித் பிரேமதாஸ தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட முடியாதென்று ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துக் கொள்ளும் அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் வளர்ந்துள்ளன. அக்கட்சியில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு, இரு அணிகளாக தேர்தலை சந்திக்கும் சூழலொன்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படுமாயின் அதனால், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிறுபான்மையின கட்சிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினக் கட்சிகள்
பொதுவாக பாராளுமன்றத் தேர்தல்களின் போது அநேகமான சிறுபான்மைக் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டுள்ளன. இரு தரப்பினரும் தங்களின் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் பேரின வாதக் கட்சிகளுடன் இணைந்துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதான கட்சியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை முன்னெடுத்து செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்று தெரிவிக்கின்றன. இதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய நிலையும் ஏற்படலாம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படுமாயின், அது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளை அதிகம் பாதிக்கச் செய்யும். சிறுபான்மை மக்களிடையே உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் வாக்குகளின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் நன்மைகளை அடைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும் போது, அதன் வாக்குகளும் பிளவுபடும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்றுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் போது அதனால் பொதுஜன பெரமுன கட்சியே அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொதுஜன பெரமுன தம்மோடு இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளுக்கு எவ்வாறு வேட்பாளர் ஒதுக்கீட்டை செய்யவுள்ளது என்பதில் பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக பொதுஜன பெரமுன முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதில் தயக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் போது சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாமென்று அக்கட்சியினர் கருதுகின்றனர். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஒரு சில முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை தனித்து தேசிய காங்கிரஸில் போட்டியிடுமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பொதுஜன பெரமுனவின் மறைமுக ஆதரவாளராக ஜனாதிபதித் தேர்தல் முதல் தற்போது வரை செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட நாட்டம் கொண்டிருந்தார். ஆயினும், அவருக்கும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையே உள்ளது. இதனால், காத்தான்குடியில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒற்றுமைப்படுத்தி ஹிஸ்புல்லாஹ்வை சுயேச்சையில் அல்லது வேறு ஒரு கட்சியில் போட்டியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை அங்குள்ள ஒரு சில சமூக அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
முஸ்லிம் வேட்பாளர்களை வடக்கு, கிழக்கில் நிறுத்தினால் பௌத்த இனவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும். அந்த அமைப்புகளின் ஆதரவு மாற்று அணிக்கு சென்று விட்டால் பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும் என்பதனாலேயே பொதுஜன பெரமுன இத்தகையதொரு முடிவுக்கு வந்துள்ளது. ஆகவே, பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் இருந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகள்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படும் பிளவு முஸ்லிம் காங்கிரஸையும் மக்கள் காங்கிரஸையும் அதிகம் பாதிக்கச் செய்யும். அம்பாறை மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்திலும் வேறு சில மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன.
முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டால் மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு ஆசனத்தையே பெற்றுக் கொள்ள முடியும். ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்ட நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டமைப்பில் போட்டியிட்டாலும் ஒரு ஆசனத்தையே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அம்பாறை தொகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் சுமார் 41 ஆயிரம் வாக்குகளையே பெற்றுக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும் போது இந்த வாக்குகளும் பிளவுபடும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு புதுமுகங்களை அனுப்ப வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனையும் கருத்திற் கொண்டுதான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது. இதேவேளை, மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டு மென்று தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. ஆயினும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி.ஹசன்அலிக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையேயும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதிலும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸில் ஹசன்அலியை மீண்டும் இணைந்து கொள்ளுமாறும் கட்சியின் யாப்பில் ஹசன்அலியினால் வேண்டப்படும் திருத்தத்தினை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டுமென்ற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்தான சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பேரால் சமூகத்தின் சுயத்தை தொலைத்துள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தற்போது தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சரி செய்து கொள்வதற்காக ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று சமூக உணர்வையூட்டி சமூகத்தின் முகவரியை அழித்தவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காகவே ஒற்றுமை எனும் பெயரில் அரசியல் சூழ்ச்சியை அரங்கேற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பேரினவாதக் கட்சிகளும் பௌத்த இனவாதிகளும் முஸ்லிம்கள் நாட்டு பற்றில்லாதவர்கள், மத்ரஸாக்களை மூட வேண்டும். அங்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்று முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து அரசியல் வெற்றிக்காக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமை எனும் கோஷத்தை கையில் எடுத்து தமது கட்சியினதும் வேட்பாளர்களினதும் சுயத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஆனால், அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் அனைவரும் ஓர் அணியில் ஒற்றுமைப்பட வேண்டுமென்று முயற்சிகளை எடுப்பது சமூகத்தின் இருப்புக்கு சிறந்த முடிவாக இருக்காது. முஸ்லிம்கள் எல்லா பேரினவாதக் கட்சிகளிலும் உள்ளார்கள். ஆயினும், பேரினவாதக் கட்சிகள் முஸ்லிம்களை பணயம் வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முஸ்லிம்கள் ஓர் அணியில் ஒற்றுமைப்படும் போது பௌத்த இனவாதிகளின் இனவாதப் பிரசாரத்துக்கு உரம் சேர்ப்பதாக அமையும். இதனை கருத்திற் கொள்ளாது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்கு முஸ்லிம்கள் துணையாக செயற்பட முடியாது.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும், கட்சியின் யாப்பு குறித்து முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் கட்சியின் தலைமை தமக்கு ஏற்றால் போன்று யாப்பை திருத்தி அமைத்துக் கொண்டது. இதற்கு உயர்பீடமும் அங்கீகாரம் கொடுத்தது. ஆனால், இன்று யாப்பில் மாற்றம் செய்யவும் தயார் நிலையில் இருக்கின்றோம். கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருங்கள் என்று அழைப்புவிடுப்பதில் எத்தனை தூய்மை இருக்குமென்று நம்ப முடியாது. ஆகவே, பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சிகள் யாவும் தமது வெற்றி வாய்ப்புகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கு என்ன சூழ்ச்சி செய்து கொள்ளலாமென்று மட்டுமே பேசிக் கொள்கின்றார்கள். இதில் நாட்டின் நலன், சமூக நலன் என்று எதுவுமில்லை.
சஹாப்தீன் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM