பாராளுமன்றத் தேர்தல் வரப்போவது உறுதியாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாணத்தில் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பெரியளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி என பிரதேச ரீதியாகவும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கெல்லாம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தான், பிரதான பேச்சாளராகப் பங்கேற்று வருகிறார். கருத்தாளர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார்.
பிறர் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் தவறவில்லை. அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
பாராளுமன்றம் கலைக்கப்படப் போகிறது என்பதை, யாழ்ப்பாண மக்கள் அறிந்தேயிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கருத்தரங்குகள் தேர்தல் வரப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தன.
கூட்டமைப்புக்கு மாற்றான அணி தாமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் கூறிவருகின்ற போதிலும், கூட்டமைப்புக்குப் போட்டியான இத்தகைய பெரியளவிலான கருத்தரங்குகள் எதையும் நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மாத்திரம் கூட்டமைப்புக்குப் போட்டியாக அரசியல் விளக்க கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் கட்சியாக அறிவிக்கப்பட்ட நிகழ்வில் ஆச்சரியப்படும் வகையில் பெருமளவிலானவர்கள் எவ்வாறு ஒன்று கூடினரோ, அதுபோலவே இந்தக் கருத்தரங்கிலும் மண்டபம் நிறைந்த மக்கள் குழுமியிருந்தார்கள்.
இந் நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமது கட்சி பொதுத் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மிகவும் நெருக்கமானவராக அவரது அமைச்சரவையின் விவசாய அமைச்சராக இருந்தவர் பொ.ஐங்கரநேசன்.
அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பதவி விலகிய பின்னரும் கூட இருவருக்கும் இடையில் நல்ல நெருக்கம் இருந்தது. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர், அவருடனேயே ஐங்கரநேசன் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசியில் விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருடன் கூட்டணி வைத்துக் கொள்ள, அந்த அணியில் கட்சிகளுக்கு சமத்துவமான பங்கு கேட்டு அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இணையும் முடிவில் இருந்து விலகிக் கொண்டார் ஐங்கரநேசன்.
இப்போது அவர், தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அவர் தனது முடிவை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
சந்தர்ப்பவாத கூட்டணிகளில் இணைந்து பிழையானவர்களை பலப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே தனித்துப் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
அரசியலில் சந்தர்ப்பவாதம் புதியதல்ல. பலவேளைகளில் கொள்கைகளுக்கு முன்பாக, சந்தர்ப்பவாதம் வெற்றி பெற்று விடுகிறது.
அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைக்கும் போது, சந்தர்ப்பத்துக்கேற்ப நடந்து கொள்கின்றன. அது கட்சிகளின் இருப்புகளுக்கு முக்கியமானவையாக இருக்கலாம்.
ஆனால், கட்சிகளின் கொள்கைகளுக்கு அது ஏற்புடையதாக இருக்கும் என்று கூற முடியாது.
எவ்வாறாயினும், அரசியலில் சந்தர்ப்பவாதம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனை நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கும் வளர்ந்து விட்டது.
அதேவேளை, பிழையானவர்கள் பலமடைந்து விடக் கூடாது என்பதற்காக தனித்துப் போட்டியிடுவதாக ஐங்கரநேசன் கூறியுள்ள கருத்து விவாதத்துக்குரியது.
இந்தமுறை பாராளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சவாலானது. தமது பிரதிநிதிகளாக யாரைத் தெரிவு செய்வது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருந்தாலும் அவர்களைக் குழப்புகின்ற வகையில் அதிகளவு தரப்புகள் இருக்கின்றன.
எப்போதுமே வாய்ப்புகள் குறைவாக உள்ள போது தெரிவுகளை செய்வது சுலபமானது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது தெரிவுகளைச் செய்வது கடினமானது.
அவ்வாறான கடினமானதொரு நிலையைத் தான், தமிழ் மக்கள் இந்த பொதுத் தேர்தலில் எதிர்கொள்ளப் போகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வருகிறார்கள்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கூட்டமைப்புக்குள் இருந்து கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறிய போதும் அந்தப் பாரம்பரியத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.
இப்போது, கூட்டமைப்புக்குள் இருந்து மேலும் பல நபர்களும் தரப்புகளும் வெளியேறி விட்ட நிலையில், கூட்டமைப்புக்கே தொடர்ந்து ஆதரவு கொடுப்பதா அல்லது தாங்களே மாற்று அணி என்று போட்டிக்கு களம் இறங்கியுள்ள கூட்டணிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்று தமிழ் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் தான், தானும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் ஐங்கரநேசன்.
ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் தமிழ்த் தேசிய கொள்கை நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகளில் ஒன்று தான். ஏற்கனவே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் போட்டியிடும் மூன்று தரப்புகளுக்கிடையிலான போட்டியில் சிக்கிக் கொள்ள நேருமோ என்ற கவலையில் இருந்த தமிழ் மக்களுக்கு, இந்த அறிவிப்பு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கிடைத்த தமிழ் மக்களின் வாக்குகள், இப்போது நான்காக பிரிந்து போகின்ற நிலை உருவாகியிருக்கிறது.
இந்த விரிசலால் பாதிக்கப்படப் போகின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இடத்தில் தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு (கூட்டமைப்பு) சகுனப் பிழையாக அமைந்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பல தமிழ்த் தேசிய கட்சிகள் இருக்கின்றன.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை வெல்ல முடியாது என தெரிந்திருந்தாலும் பல தரப்புகள் வாக்குகளைப் பிரிக்கப் போட்டி போடுகின்றன.
இந்தப் போட்டி ஆரோக்கியமான அரசியலுக்கானதாகவோ தமிழ் மக்களின் நலனுக்கானதாகவோ இருந்தால் வரவேற்கக் கூடியது.
ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள்ளே முட்டி மோதிக் கொண்டு சாதிக்கப் போவது எதனை என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
கூட்டமைப்புக்குப் போட்டியாக யாரும் இருக்கக் கூடாது என்று நினைப்பது ஜனநாயகம் அல்ல. அரசியலில் போட்டி இருக்க வேண்டும். கட்சிகளுக்கிடையில் போட்டி இருக்கும் போது தான், ஜனநாயகம் செழிக்கும்.
ஆனால், அந்தப் போட்டி தமிழ் மக்களின் உரிமையையும் குரலையும் பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது, கூட்டமைப்புக்குப் போட்டியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு மாற்று அணியை உருவாக்க பதினொரு வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவரால் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைக் கூட இதுவரை பெற முடியாமல் இருக்கிறது.
இந்தநிலையில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தரப்புகளை ஒன்றிணைத்து, அவர் பலமான அணி ஒன்றை கட்டியெழுப்பியிருக்க வேண்டும். அதனை அவரும் செய்யவில்லை. கூட்டமைப்பில் வெறுப்படைந்து வெளியேறியவர்களும் ஒத்துழைக்கவில்லை.
இதனால் மூன்றாவது அணி உருவானது. இந்த மூன்றாவது அணியாவது விட்டுக் கொடுப்புகள், சமரசங்களுக்கு தயாராக இருந்ததா என்றால் இல்லை.
ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தைக் கூட தமது கூட்டணிக்குள் உள்வாங்கக் கூடிய நிலையில் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி கோலோச்சுகிறது என்று போர்க்கொடி எழுப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தவர்களும் மாற்று அணிகளுக்குள் தமிழரசுக் கட்சியைப் போன்றே செயற்பட முனைகிறார்கள்.
இந்த முனைப்புத் தான், ஒன்றாக இருந்த அணியை இன்று நான்காகவோ ஐந்தாகவோ பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.
எல்லா தரப்புகளும் தாங்களே சரியானவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். வேறொரு தரப்பை பிழையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
பிழையான தரப்பு பலமடைவதற்கு இடமளிக்கக் கூடாது என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எங்குமே எந்தக் கட்சியுமே முற்றிலும் சரியானது என்றில்லை. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளில் எதுவுமே முற்றிலும் சரியானது என்று எவரும் கூற முடியாது.
பிழையான தரப்புகள் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் பிரிவினையை வலுப்படுத்திக் கொள்ளும் போது, அதற்கு வெளியே உள்ள பிழையான தரப்புகள் தான் வலுவடையும். அவை கட்சி ரீதியாக மாத்திரமன்றி, பாராளுமன்ற பலத்தையும் பெறக் கூடும்.
பாராளுமன்ற ஆசனங்களுக்கான அரசியலை கைவிட்டு மக்களின் நலன் கருதி, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமது முடிவுகளையும் பிடிவாதங்களையும் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
அது தான், பிழையான தரப்புகளுக்கு வழிவிடுவதை தடுப்பதற்கான வழிமுறையாக இருக்குமே தவிர, தனித்தனியாகப் போட்டியிடுவது அல்ல.
கபில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM