(நமது நிருபர்)
காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை மறந்து செயற்படவேண்டும். காணாமல் போய்விட்டனர்., காணாமல் போய்விட்டனர் எனக் கூறுவதில் பயனில்லை. இராணுவத்திலும் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி அது உறுதியானால் மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொருளாதாரப் பிரச்சினை தான் அரசியல் பிரச்சினைக்கு முக்கிய காரணியாக உள்ளது. வடக்கு கிழக்கில் மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் சகல பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
கேள்வி: பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுறுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்படவேண்டுமென்று நீங்கள் கோரிவருகின்றீர்கள். இதற்கான பிரதான நோக்கம் என்ன?
பதில்: அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதகமான நிலைமையும் மாற்றியமைக்கப்படவேண்டும். 19 ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாற்றம் நாட்டை நிர்வகிப்பதற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற அதிகாரத்திற்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி முறைமையின் மீது எதிர்பார்ப்பு வைத்தே என்னை மக்கள் தெரிவுசெய்துள்ளனர். எனவே நிறைவேற்று அதிகாரத்திற்கு தடைகள் இருக்குமானால் அவற்றை நீக்கவேண்டியது அவசியமாகும்.
நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, பாராளுமன்றம் ஆகிய துறைகள் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படவேண்டும். ஆனால் 19ஆவது திருத்த சட்டத்தின் கீழ் இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எனவே இதனை மாற்றியமைக்கவேண்டும். இத்தகைய மாற்றங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
கேள்வி: 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நீக்குவது சரியானதா?
பதில்: சுயாதீன ஆணைக்குழுக்கள் என்றால் உண்மையிலேயே சுயாதீனமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை. ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார். முக்கிய பதவிக்கு வந்த பின்னர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்திருக்கவேண்டும். இவ்வாறு சுயாதீனமில்லாத நடவடிக்கைகளால் பயனில்லை. பொலிஸ் ஆணைக்குழு இருக்கின்றது. இதன் தேவை என்ன? பொலிஸ்மா அதிபர் சுயாதீனமாக இல்லை என்பதனாலா இந்த ஆணைக்குழு அமைக்கப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபராக தெரிவுசெய்யப்படுவர் 24 , 25 வருடங்கள் கடமையாற்றியே அந்தப் பதவிக்கு வருகின்றார். அவரை நம்பமுடியாவிட்டால் பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை எப்படி நம்பமுடியும். சரியான விளக்கமின்றி இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேள்வி: பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டு அவர்களது பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் உத்தரவை அடுத்து இந்தப் பயிற்சி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. பெருமளவானவர்கள் தாம் செய்த தொழில்களை விட்டு இந்த நியமனங்களை பெற்றுள்ளனர். அவர்கள் தமக்கு மீண்டும் நியமனங்கள் கிடைக்குமா என்று ஏங்குகின்றனர். இந்த நியமனத்தில் அரசியல் செயற்பாடு உள்ளதா? மீண்டும் நியமனங்கள் வழங்கப்படுமா?
பதில்: பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகைமை அடிப்படையில் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கட்சிபேதமின்றியே நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அவர்களுக்கான பயிற்சிகளை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவிட்டது சரியா என்பது தொடர்பில் ஆராயவேண்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். பயிற்சியை இடைநிறுத்துவதில் பயனில்லை. தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்னமும் இடம்பெறவில்லை.
கேள்வி: இந்த நியமனங்கள் மீண்டும் வழங்கப்படுமா?
பதில்: பச்சை , மஞ்சள், சிவப்பு, வரும் அதன் பின்னர் பச்சை வரும்.
கேள்வி: ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் வெளியேறியுள்ளது. உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதன் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும். அரசியல்வாதிகள் அரசியலுக்காக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பர். மக்களின் வாழ்க்கை முறையின் அபிவிருத்தியின் ஊடாகவே தீர்வைக் காணலாம். அன்று உமா மகேஸ்வரன் பொருளாதார பிரச்சினைகளின் அடிப்படையிலேயே போராட்டத்தை ஆரம்பித்தார். பொருளாதார ரீதியாக மக்களுக்கு பலன்கிடைக்கவேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்றவகையில் கல்வி, பல்கலைக்கழக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள், உட்பட பல்வேறு வசதிகள் மக்களுக்கு கிடைக்குமானால் பிரச்சினைகள் இருக்காது. இத்தகைய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேள்வி: பொருளாதார அபிவிருத்தியின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று கூறுகின்றீர்கள் அன்று அமிர்தலிங்கம், செல்வநாயகம் ஆகியோர் அரசியல் ரீதியாக தீர்வுகாணப்படவேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்தியிருந்தனர்.
பதில்: அரசியல்வாதிகள் அவ்வாறுதான் கூறுவார்கள். அதில் உண்மை இருக்கும் என்று நான் நம்பவில்லை. 1971 ஆம் ஆண்டு தெற்கில் போராட்டம் ஆரம்பித்தது. இங்கு பொருளாதார வேறுபாட்டின் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தெற்கிலும் ஏனைய பகுதிகளிலும் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன.
தமிழ் வர்த்தகர்கள் பெரியளவில் வியாபாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சிங்களவர்கள் முருங்கை இலை உண்ணும் நிலைமை இன்னும் காணப்படுகின்றது. இவ்வாறு சமத்துவம் இன்மை இங்கும் நிலவுகின்றது. பொருளாதார ரீதியில் சமமாக வாழ முடியுமான நிலை உருவாகவேண்டும்.பிரித்துவைத்து செயற்படுவதனால் எந்தப் பயனும் ஏற்படாது. பொருளாதாரப் பிரச்சினை தான் அரசியல் பிரச்சினைக்கு முக்கிய காரணியாக உள்ளது.
கேள்வி: காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இராணுவத்திலும் 4000 பேர் வரையில் காணாமல்போயுள்ளனர். சகல பிரிவுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. யுத்தத்தில் சடலங்கள் மீட்கப்படாதபோது அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர்.
இரண்டாவது ஈழப்போரின்போது யாழ்ப்பாணம் கோட்டையில் நானும் சரத் பொன்சேகாவும் கடமையாற்றியிருந்தோம். அப்போது கோட்டையிலிருந்து முன்னேறிய 400 படையினர் வரையில் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை எம்மால் மீட்க முடியவில்லை. அவ்வாறானவர்களை உறவினர்கள் காணாமல்போனவர்களாகவே கருதுவர்.
யுத்தபூமியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும். இத்தகைய நிலையினை வேறுவிதமாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சில தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அவற்றை பொதுப்படையாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். கொலைச்சம்பவமொன்று இடம்பெற்றால் இலங்கையை சேர்ந்த அனைவரும் கொலைகாரர்கள் என்ற பானியில் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இராணுவத்தில் 4000 பேர் காணாமல்போயுள்ளனர். யுத்தத்தின்போது சடலங்கள் மீட்கப்படாவிட்டால் இத்தகைய நிலை ஏற்படும். 2006ஆம் ஆண்டு முகமாலையில் 129 இராணுவத்தினர் பலியாகினர் சடலங்களை மீட்கமுடியவில்லை. ஒரு மாதத்திற்கு பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சடலங்கை ஒப்படைக்க முன்வந்தது. ஆனால் அவற்றை அடையாளம் காண முடியாமையினால் நாம் அதனை பொறுப்பேற்கவில்லை.
புலிகளின் விடயத்திலும் இவ்வாறுதான் இருக்கின்றது. யுத்தத்தில் ஈடுபட்டபோது சடலங்கள் கிடைக்காதவர்கள் தமது உறவுகளை காணவில்லை என்கிறார்கள் அதற்கு யார் பொறுப்புகூறுவது.
கேள்வி: யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களை விட இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவே உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
பதில்: அப்படியல்ல. யுத்தத்தின்போது காணாமல்போனவர்கள் தொடர்பில் யுனிசெப் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் தொடர்பில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது. காணாமல்போனவர் தொடர்பில் 2600 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகவும் இதில் 8 பேரை மட்டுமே இராணுவம் அழைத்து சென்றதாகவும் 70 வீதமானோருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்றும் ஏனையவர்களை விடுதலைப்புலிகளே அழைத்து சென்றதாகவும் முறையிடப்பட்டிருந்தது.
கேள்வி: காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் மக்கள் அரசாங்கத்திடம் நியாயத்தை கோரி நிற்கின்றனர். ஆனால் ஆட்சி அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியும் இந்த நியாயம் பெறப்படவில்லை. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள் கொரோனா உட்பட பல்வேறு பிரச்சினைகள் வந்துவிட்டன.
கேள்வி: அப்படியானால் காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?
பதில்: அதையெல்லாம் மறந்து செயற்படவேண்டும். காணாமல் போய்விட்டனர்., காணாமல் போய்விட்டனர் எனக் கூறுவதில் பயனில்லை. இராணுவத்திலும் காணாமல்போயுள்ளனர். அவர்களது உறவினர்கள் பலர் தமது பிள்ளை தொடர்பில் சாத்திரம் பார்த்தாகவும் அவர் உயிருடன் இருப்பதாகவும் என்னிடம் தெரிவிப்பார்கள். ஆனால் உண்மை நிலை அவ்வாறானதல்ல. இந்த விடயம் தொடர்பில் ஜெனிவாக்கு செல்வதனால் பயனில்லை.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி அது உறுதியானால் மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். முன்னைய எமது ஆட்சியில் காணாமல்போனோர் தொடர்பில் தரவுகளை பெற்று நடவடிக்கை எடுக்க இருந்தோம். காணாமல்போனவர் என்று தெரிவிக்கப்பட்டவர் கனடாவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இவ்விடயம் குறித்து ஆராய்ந்து மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். ஒருவர் காணாமல்போனோர் நான்கு வருடங்களின் பின்னர் இத்தகைய சான்றிதழ்களை வழங்க முடியும்.
கேள்வி: சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் நீங்கள் பங்கேற்பீர்களா?
பதில்: ஆம். அந்த கட்சியின் சார்பிலேயே நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டேன்.
கேள்வி: உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
பதில் : கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினரே அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இருக்கின்றது. அந்த ஆணைக்குழு மீது கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
நாட்டில் பாதுகாப்பு விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: அமெரிக்கவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்: எதிர்காலம் தொடர்பான ஞானம் என்னிடம் இல்லை.
கேள்வி: நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கொரோனாவினால் பாதகம் ஏற்படுமா?
பதில்: பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது முக்கியம். கொரோனாவினால் சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்படும்.
கேள்வி: வரிச்சலுகைகள் வழங்கப்பட்டதன் மூலம் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்: பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பிரச்சினையில்லை. வரி குறைப்பினால் வியாபாரங்கள் முன்னேற்றமடைந்துள்ளன. அவ்வாறு வரிகுறைப்பு செய்யாவிட்டால் பல வர்த்தக நடவடிக்கைகள் மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு மார்ச் 1ஆம் திகதி முதல் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் ரமேஷ் பத்திரன கருத்து தெரிவிக்கையில் இந்த விடயம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்கிறார். ஆனால் அமைச்சர் தொண்டமானோ ஏப்ரல் 10ஆம் திகதி முதல் சம்பளம் வழங்கப்படும் என்கிறார். இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்: இந்த விடயம் தொடர்பில் நாம் பேசுகின்றோம். 1000 ரூபா வழங்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சித்திரை முதல் அதனை வழங்க முடியும்.
கேள்வி: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
பதில்: அரசியல் கைதிகள் என்று யாரும் இருப்பதாக நான் கருதவில்லை.
கேள்வி: ஜெனிவாவில் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் அமைப்புக்களும் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளன. இத்தகைய அச்சுறுத்தலை அரசாங்கம் எவ்வாறு சந்திக்கப்போகின்றது.
பதில்: நாம் வெளிநாடுகளுக்கு எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். இதற்கிணங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எமது நாட்டின் இறைமையை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இதனை வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். எமது சுயாதீனத்தை பாதுகாக்கவேண்டியது அவசியமாகின்றது.
கேள்வி: பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோத்தபாய ஜனாதிபதி என்றும் தானே பிரதமர் என்றும் சஜித் பிரேமதாச கூறிவருகின்றார். சஜித்துடன் இணைந்து பணியாற்றவீர்களா?
பதில்: நாம் தனிமனிதர்களை விட கொள்கையின் அடிப்படையிலே செயற்படவேண்டும். எமது கட்சிக்குள் கொள்கை இருக்கின்றது. கடந்த அரசாங்க காலத்தின்போது அவர்களது கொள்கைக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை. வடக்கு கிழக்கில் கொள்கையின் அடிப்படையின் கீழ் வாக்களிப்பு இடம்பெறவில்லை. இனவாதத்தை விதைத்த வாக்குகள் அங்கு பெறப்பட்டன. ஆனால் ஏனைய இடங்களில் நாம் மிகப்பெரிய வெற்றிபெற்றோம். நாட்டின் சுயாதிபத்தியம் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நாம் செயற்படவேண்டும்.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியான பின்னர் இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளுக்கு நியமிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
பதில்: முன்னைய அரசாங்கம் முன்னாள் இராணுவ அதிகாரிகளை பெருமளவில் பதவிகளுக்கு நியமித்திருந்தது. ஆனால் அன்று இவ்வாறான கேள்வி எழுப்பப்படவில்லை. அலரிமாளிகைக்குள்ளே பல ஜெனரல்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டனர். இராணுவத்திலிருந்து அதிகாரிகள் விலகினால் அவர்கள் சிவில் பிரஜைகளாவர். இத்தகைய இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறைகள் பல்வேறு நாடுகளில் இடம்பெறுகின்றது.
ஜெனரல் ஒருவரை நாம் ஒருபதவிக்கு நியமித்தால் அவர் பல்வேறு பயிற்சிகளை பெற்றவராக இருப்பார். சர்வதேச ரீதியில் 20க்கும் மேற்பட்ட பயிற்சி நெறிகளில் அவர் பங்கேற்றிருப்பார் அமெரிக்காவிலும் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM