மதச் சுதந்திரம் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் குறித்த அறிக்கையானது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே இலங்கையில் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான இடத்தை தீர்மானிக்க முற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதி தெரிவித்தார்.
மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பிலேயே இலங்கை பிரதிநிதி இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சிறப்பு அறிக்கையாளர் அஹ்மத் ஷாஹீத் 2019 ஆகஸ்ட் 15 முதல் 26 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையைக் கவனத்தில் கொண்ட இலங்கை, இச்சபையில் இவ்வறிக்கையை வழங்குகிறது. சிறப்பு அறிக்கையாளரின் மேம்பட்ட திருத்தப்படாத அறிக்கையானது, இலங்கையின் கருத்துகளுக்காக, பெப்ரவரி 28, 2020 காலக்கெடுவுடன் பெப்ரவரி 3, 2020 அன்று, இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும், மட்டுப்படுத்தப்பட்ட இந்த காலப்பகுதியில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கைக்கு இலங்கை சில பொதுவான அவதானிப்புகளை வழங்க விரும்புகிறது. வரவிருக்கும் எமது முழுமையான அவதானிப்புகளும் இந்த அறிக்கையின் ஒரு அங்கமாக பிரசுரிக்கப்படவேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கின்றோம். சிறப்பு அறிக்கையாளரின் விஜயமானது ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஈர்க்கப்பட்ட சில உள்நாட்டுப் பயங்கரவாத குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதும் வழிபாட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் அப்பாவி மக்களைக் குறிவைத்து, 45 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 258 பேரைப் பலிகொண்டதுமான கொடுமையான தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடந்தேறிய நான்கே மாதங்களில் இடம்பெற்றது. தேசம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டமையானது, ஐ.நா. மனித உரிமை பொறிமுறைகளுடன் திறந்ததும் ஆக்கபூர்வமானதுமான உரையாடல்களைப் பேணுவதென்ற அரசாங்கத்தின் கொள்கையின் வெளிப்பாடாகும்.
இன, மத வேறுபாடுகள் இருந்தபோதிலும் இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்தும் வாழ்கின்றனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் வேதனையை அனுபவித்த அவர்கள், கடும் போராட்டத்தின் மூலம் வென்ற அமைதியையும் சுதந்திரத்தையும் அனுபவித்து வந்ததுடன், கடந்த தசாப்தத்தில் நல்லிணக்கப் பாதையிலும் தேசிய ஆற்றுப்படுத்தல் முயற்சிகளிலும் இறங்கினர். ஆனபோதிலும், உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் உலகளாவிய அச்சுறுத்தலான பயங்கரவாதம் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தின் ஒரு பொது எதிரியை நாம் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை நினைவூட்டியது.
இச்சூழ்நிலையில், சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையானது, உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே இலங்கையில் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான இடத்தை தீர்மானிக்க முற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த தாக்குதல்களின் அளவு இலங்கையில் ஒரு தேசிய அவசரகால நிலையை ஏற்படுத்தி, அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பயங்கரவாத கூறுகளை அடையாளம் கண்டு மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM