பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத்துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது.
எதிர்காலத்தில் பிம்ஸ்டெக்கின் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியை இலங்கையில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிம்ஸ்டெக் செயலகத்திற்கான ஒரு பணிப்பாளரையும் இலங்கை நியமிக்கவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவின் தலைமையில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தின் 20ஆவது அமர்வில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பகுதிகள் இறுதி செய்யப்பட்டபோது இந்த விடயம் ஒப்புக்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்துக்கு முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான லேதிக செயலாளர் பி.எம். அம்ஸாவின் தலைமையில் 2020 மார்ச் 01 முதல் 02 வரை 3ஆவது நிரந்தர செயற்குழுக் கூட்டம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் நடைபெற்றது.
தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றிலான ஒத்துழைப்பு உள்ளடங்கலாக, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான துறையை வழிநடத்துவதற்கு இலங்கைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பங்களாதேஷூக்கும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் பூட்டானுக்கும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் மியான்மாருக்கும், பாதுகாப்பு (பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி) தொடர்பில் இந்தியாவுக்கும், மக்களுக்கிடையிலான தொடர்புகள் (கலாசாரம், சுற்றுலா, சிந்தனை மன்றங்கள், ஊடகம் போன்றவை) தொடர்பில் நேபாளத்துக்கும், தொடர்புகளை ஏற்படுத்தல் தொடர்பில் தாய்லாந்துக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.
பிம்ஸ்டெக்கின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பின் செயன்முறையை திறம்பட நடத்துவதற்கான நிறுவனப் பொறிமுறையான பிம்ஸ்டெக் சாசனமும் இறுதி செய்யப்பட்டு, 5ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தின் 20ஆவது அமர்வுக்கு தலைமைதாங்கிய வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க, இலங்கை தலைமையைப் பொறுப்பேற்றதிலிருந்து, 20 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அமைப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கு முயன்றதாகத் தெரிவித்தார்.
இந்த சூழலில், பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளில் மேலதிக கவனம் செலுத்தப்படுமாதலால், பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதி செய்வதன் மூலமாகவும், உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பின் வரையறுக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கீடு செய்வதன் மூலமாகவும் நிறுவனக் கட்டமைப்பின் தேவை குறித்து இலங்கை கவனம் செலுத்தியது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தாய்லாந்திற்கு தலைமைப் பதவியை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை, உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான உறுதியான வழிமுறைகளை இறுதி செய்வதற்கு முயற்சிப்பதில் ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான பிம்ஸ்டெக் சாசனம் மற்றும் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற வசதிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை இறுதி செய்வதற்கும் மேலதிகமாக, 2019 ஏப்ரல் மாதத்தில் பிம்ஸ்டெக் உள்ளிணைப்புக் கட்டத்தினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதனை பிம்ஸ்டெக்கின் பொதுச்செயலாளரான தூதுவர் ஷாஹிதுல் இஸ்லாம் பாராட்டினார்.
விரிவான ஒத்துழைப்புக்கான துறைசார் கூட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த முன்னோக்கில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு வழங்குவதற்கும், பிம்ஸ்டெக் சுதந்திர வர்த்தகப் பகுதியின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அழைப்பு விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM