இலங்கையை பொறுத்தமட்டில் ஒப்பந்தங்களை கிழித்தெறிவதும் உடன்பாடுகளை கைவிடுவதும் இணக்கப்பாடுகளை மீறுவதும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. இனப்பிரச்சினை தொடர்பில் யுத்தத்துக்கு முன்னரும் சரி யுத்தத்துக்குப் பின்னரும் சரி மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்பந்தமும் இணக்கப்பாடும் சரியான வகையில் கடைப்பிடிக்கப்படாதது மாத்திரமன்றி அவை கைவிடப்பட்டமையே வரலாறாக இருந்து வருகின்றது.
அந்த வகையில் இலங்கை -– இந்திய ஒப்பந்தம் தொடக்கம் இதுவரை எவையுமே முறையாக நிறைவேற்றப்படவில்லை. அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கினாலும் நாளடைவில் அவை செல்லாக்காசாகவே போய்விடுகின்றன. இது சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பில் தப்பபிப்பிராயம் மேலோங்கவே வழிவகுப்பதாக இருக்குமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களை அடுத்து இலங்கை சர்வதேச ரீதியில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதுடன் மிகுந்த அபகீர்த்தியை எதிர்நோக்கவும் நேர்ந்தது. அவை மெதுவாக மறைந்து மீண்டும் நாட்டின் மீது சர்வதேச கவனங்கள் செறிந்து போயுள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறலிலிருந்தும் விலகி தமிழர்களின் உணர்வுகளைத் தட்டிக்கழிக்குமானால், அது நாட்டை மீண்டும் சவாலுக்குட்படுத்தவே வழிவகுப்பதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயம்.
ஜெனீவா விவகாரம்
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையானது நீதிக்குப் புறம்பானது எனவும் இலங்கை பாதுகாப்புப் படையினரை நிந்திக்கும் வகையில் அது அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், அமைச்சரவையையோ பாராளுமன்றத்தையோ கலந்தாலோசிக்காத வகையிலேயே அப் பிரேரணைக்கு முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அரசியலமைப்புக்கு முரணான இந்த பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
ஆணைக்குழு
அதேவேளை இலங்கை அரசாங்கமானது நிலையான அமைதியை பேணும் முகமாக ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்யும் வகையில் நீதியரசர் ஒருவர் தலைமையில் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைக்கு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே அனுசரணை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
43ஆவது ஜெனீவா கூட்டத்தொடரின் 3ஆவது நாள் அமர்வில் இலங்கை சார்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்து கொண்டு உரையாற்றியதுடன் இந்த அறிவிப்பையும் அவர் விடுத்தார்.
அங்கு உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. முன்னைய நல்லாட்சி அரசு 2015ஆம் ஆண்டு இலங்கை குறித்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது.
இந்தப் பிரேரணையின் ஊடாக எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசியலமைப்பின் ஊடாக முன்னெடுக்க முடியாது. இது இலங்கையின் அரசியலமைப்பையும் மக்களின் இறைமையையும் மீறுகின்றது.
இறைமைக்கு அவமதிப்பு
அத்துடன், அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை. அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை. பாராளுமன்றத்துக்கும் அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தின் அனுமதியும் பெறப்படவில்லை. இதன் காரணமாக இலங்கை அரசின் இறைமையையும் மதிப்பையும் அவமதிப்பதாக அமைந்துள்ளது.
மேலும், இலங்கையின் தேசிய இறைமையை குறைத்து மதிப்பிடுவதாகவும் உளவுத்துறையின் செயற்பாடுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் இடம்பெற்றன என்றார்.
மேலும், கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தீர்க்கமான வெற்றியுடன் இலங்கை மக்கள் வேறுபட்ட பாதையொன்றில் முன்னோக்கிச் செல்வதற்கான சமிக்ஞையொன்றை வழங்கியிருந்தனர். அதேவேளை, இலங்கை நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இலங்கை அரசாங்கத்திலும் பார்க்க இந்த முயற்சியில் அதிகளவுக்கு எவரும் அர்ப்பணிப்புடன் இருக்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்ட தவறிய ஐ.நா
அத்துடன், இலங்கையானது பொறுப்புக்கூறல், மனித உரிமை, நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் போன்றவற்றை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, மிகக் கவனமான சமநிலையான நல்லிணக்க நடவடிக்கை ஒன்றின் ஊடாக ஸ்திரத்தன்மையையும் மனிதாபிமான ரீதியான ஆறுதலையும் உறுதியான சமாதானத்தை அடைவதற்கும் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தவறவிட்டது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகளுடன் இலங்கை தொடர்ந்தும் செயற்படும் எனவும் மனித உரிமைகள் தொடர்பான ஆணைகள், அமைப்புகள், பொறிமுறைகள், கொள்கைகளைப் பேணும் அதேவேளை தேவையான தமது உதவிகளையும் நாடும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் மேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பையடுத்து, பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ''ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்வது என்பது எம்மைப் பொறுத்தமட்டில் ஆச்சரியமான விடயமல்ல. இது நாம் எதிர்பார்த்த ஒன்றாகும். இதுவரையில் தமிழர்களை ஏமாற்றி வந்த இலங்கை அரசாங்கம் இன்று சர்வதேசத்திடமும் அதே உபாயத்தை கையாள முற்படுகின்றது'' என தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் பேரவையின் இணைப்பாளருமான நிஷா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், காலம் காலமாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வரும் நிலைதான் காணப்படுகின்றது. இப்போது அவர்கள் ஒருபடி மேலாகச் சென்று சர்வதேச அரங்கில் கூட தமது இந்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையின் இச் செயலை வெகுவாக விமர்சித்துள்ளது.
கன்னத்தில் விழுந்த அறை
இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமையானது, பாதிக்கப்பட்ட மக்களின் கன்னத்தில் விழுந்த அறைக்கு சமமானதாகும் எனவும் ஐ.நா.வின் உயர் மனித உரிமைகள் அமைப்புக்கான அவமதிப்பு எனவும் கூறியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிடுகையில், தங்களை தாங்களே முட்டாளாக்கிக் கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இடமளிக்கக் கூடாது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக அர்த்தபுஷ்டியான நடவடிக்கையை ராஜபக் ஷாக்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேவேளை, அரசாங்கத்தின் இந்த நகர்வானது மனித உரிமைகள் பேரவை இறுதியில் போர்க்கால குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஏற்படுத்தும் தேவையை முன்னிலைப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதி வேண்டும்
இதேவேளை, பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துவிட்ட நிலையில், இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனீவாவில் தெரிவித்துள்ளனர். ஜெனீவா பேரவையில் 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமான நிலையில் ஜெனீவா சென்றிருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் அங்கு நடைபெற்ற உபகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளனர்.
அங்கு அவர்கள் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியைப் பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றத்தர வேண்டும். காணாமல் போனோர் அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் தாங்கள் விலகுவதாக நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும். காணாமல் போனோர் இறந்து விட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடா – பிரிட்டன் அதிருப்தி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டது தொடர்பில் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துப் பேசிய பிரிட்டன் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ், மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் மற்றும் அவரின் அலுவலகம் முன்னெடுத்து வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அவரின் அனுபவமும் சமுதாயத்துக்கான அவரின் புரிந்துணர்வும் தனித்துவமானவை என குறிப்பிட்டுள்ளார்.
சமூகம் சுதந்திரமாக வளர்ச்சியடைவதற்கு மனித உரிமைகள் உதவுகின்றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளது சமத்துவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதுடன் நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கவும் அவர்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்களை குறைக்கவும் அனைவருக்குமான நீதியை உறுதி செய்யவும் அனைவரும் முன்வர வேண்டும். மனித உரிமைகளே மனிதனின் உயர்ந்த அபிலாஷையாக விளங்குவதாக உலகளாவிய மனித உரிமை பிரகடனம் கூறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலனித்துவ ஆட்சியும் நிறவெறியும் நிறைவுக்கு வந்துள்ளன. அடக்கு முறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. ஜனநாயகம் எங்கும் பரவியுள்ளது. ஒரு தலைமுறையாக 100கோடி மக்கள் வறுமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிசு மரணம் வீழ்ச்சி கண்டுள்ளது. சகல சமூகமும் மனித உரிமை அமைப்பினால் பயனடைந்துள்ளது. இருந்தபோதிலும் மனித உரிமை தொடர்ந்தும் சவால்மிக்கதாக உள்ளது. இதிலிருந்தும் எந்த நாடும் விதிவிலக்கல்ல.
இறைமை போர்வையாகக் கூடாது
ஒவ்வொரு நபருடைய பிறப்புரிமையாகவும் ஒவ்வொரு நாட்டின் நலனாகவும் மனித உரிமைகள் விளங்குகின்றன. அவை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன் ஒற்றுமையையும் கட்டியெழுப்புகின்றன. சகல தரப்பையும் உள்ளீர்த்து வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. அவை ஒருபோதும் மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பனவாக இருக்கக் கூடாது.
இதேவேளை, ஒரு போதும் மனித உரிமை மீறலுக்கு தேசிய இறைமை ஒரு போர்வையாக இருக்கக்கூடாது. மனித உரிமைகளுக்கும் தேசிய இறைமைக்குமிடையில் தவறான விதத்தில் அமையும் இருவேறு பிரிவுறுகையை நாம் வெற்றி கொள்வது அவசியம்.
மனித உரிமை மற்றும் தேசிய இறைமை ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல வேண்டும். மனித உரிமை மேம்படுத்தல் நாடுகளையும் சமூகங்களையும் வலுப்படுத்துகின்றது. அதன் மூலம் இறைமையை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் விலகலின் தாக்கத்தை அவரது உரை பிரதிபலிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
மனித உரிமையை உறுதிசெய்க
இதேவேளை, சகலரினதும் மனித உரிமைகளை மீள உறுதிப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சிறப்பான முன்னோர்களாக இருக்க நாம் எம்மை தயார்படுத்த வேண்டும். இளம் வயதினருக்கும் எதிர்வரும் தலைமுறைக்கும் நாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே கெளரவம், சுதந்திரம், சமாதானத்துடன் உலகம் சிறப்படைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவா தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டமையானது மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தாங்கள் பதவிக்கு வந்தால் இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கடந்த நல்லாட்சி அரசே நாட்டையும் இராணுவத்தினரையும் காட்டிக் கொடுத்து விட்டதாகவும் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மஹிந்த தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தது. இதன் பின்னணியிலேயே ஜெனீவா கூட்டத் தொடரிலிருந்தும் இணை அனுசரணையிலிருந்தும் விலகுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM