யுத்தகாலத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பன தொடர்பாக கடந்த காலங்களில் விசாரித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என இலங்கை அரசாங்கம் முன்வைத்த யோசனையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முழுமையாக நிராகரித்திருக்கிறது.
நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கையானது புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளபோதிலும் அதில் நம்பிக்கைகொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக சுட்டியிருந்தார்.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மனித உரிமை விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளுக்கு பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றை அறிவித்துள்ளமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன். இலங்கை அரசாங்கமானது அனைத்து மக்களினதும் தேவைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களின் தேவைகள் குறித்து செயற்படவேண்டும். கடந்த சில வருடங்களாக உருவாக்கிய திட்டங்களை தொடருமாறும் பாதுகாக்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பச்லெட் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றுக்கு அரசியல் மற்றும் வளரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நீதியைப் பெறுவதற்கும் நிவாரணத்தைப் பெறுவதற்கும் உரிமை இருக்கிறது. தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகரித்து செல்வதை காண்கின்றோம். கடந்த கால மனித உரிமை மீறல்களுக்காக தண்டனை வழங்கப்படாத கலாசாரம் தொடர்கின்றமை மிக அடிப்படை பிரச்சினையாக இருக்கின்றது என்றும் மிச்செல் பச்ெலட் பேரவையில் எடுத்துரைத்தார். அத்துடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி கடந்த கால மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் அவதானத்துடனேய இருக்கவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்ெலட் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதன்படி இந்த விவாதத்தில் முதலில் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்ெலட் இலங்கை தொடர்பான விடயத்தை முன்வைத்து உரையாற்றியபோதே இந்த விடயங்களை கூறினார். தொடர்ந்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையானது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான சர்வதேச சமூகத்துடன் இணைந்து பயணிக்கும் என்றும், அனுசரணையிலிருந்து விலகியிருக்கின்றோமே தவிர பேரவையில் இருந்து விலகவில்லை என்ற கருத்துப்பட கூறினார்.
எப்படியிருப்பினும் இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து விடயங்களை ஆராய்வதற்கான மாற்று யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையின் உறுப்பு நாடுகளும் இலங்கையின் வெளியேற்றம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தன.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கமானது தற்போது அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றது என்பது ஒரு முக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது. அதாவது, இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கவேண்டுமென்ற நோக்கத்திற்கு அமைய 2015ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகியிருக்கின்ற இலங்கையின் புதிய அரசாங்கமானது பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மாற்று யோசனையாகவே இந்த உள்ளக விசாரணை ஆணைக்குழுவை முன்வைத்திருந்தது. எனினும் அதனை தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிராகரித்திருப்பதன் காரணமாக அடுத்து அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதே மிக முக்கியமான கேள்வியாக அமைந்திருக்கின்றது.
அதாவது, இலங்கையானது பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக ரீதியில் நடவடிக்கைகளை எடுக்கும். இந்த விடயத்தில் ஐ.நா.வுடன் இணைந்து பயணிக்கும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருந்தார். எனினும் கடந்த காலங்களில் உள்ளக விசாரணை செயற்பாடுகள் தோல்வியடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்ெலட் அதனடிப்படையிலேயே அரசாங்கத்தின் மாற்று யோசனையை நிராகரித்துள்ளதுடன் அதில் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
யுத்தத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்ட மக்களைப் பொறுத்தவரையிலும் அவர்களும் உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்றும் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் எனவும் கூறிவருகின்றனர். காரணம் யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 11 வருடங்களாகவே பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடியவகையிலான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உள்ளக ரீதியில் விடயங்கள் ஆராய்ப்பட்டபோதிலும் இறுதியில் அந்த ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. அதேபோன்று காணாமல்போனோர் குறித்து ஆராய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகவும் காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவில்லை. இவ்வாறு உள்ளக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் நீதி கிடைக்காததன் காரணமாகவே அந்த மக்களும் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்ற கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்தனர்.
கடந்தகாலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது சர்வதேச விசாரணையே அவசியம் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே தற்போது அரசாங்கம் முன்வைத்த மாற்று யோசனையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சவாலுக்குட்படுத்தியிருக்கிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை உணர்ந்து அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டில் உரிய முறையில் நீதி நிலைநாட்டப்படாததன் காரணமாகவே சர்வதேச ரீதியிலான கோரிக்கைகள் எழுந்தன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. யாரையும் தண்டிக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கமாக இல்லை. மாறாக, தமக்கு நடந்த அநீதிக்கு நீதியை கோருகின்றனர். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். எனவே அந்த மக்களின் நியாயமான கோரிக்கை கவனத்தில்கொள்ளப்படவேண்டும். அரசாங்கம் 30/1 என்ற பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகியுள்ள நிலையில் எவ்வாறு பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என்று சர்வதேசம் கேள்வி எழுப்புகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நீதியே தேவைப்படுகிறது. உண்மையை அறிவதற்கு அந்த மக்கள் உரித்துடையவர்கள்.
அதனால் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் சிந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடைகின்ற வகையிலான ஒரு பொறிமுறை அவசியமாகும். அந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாது என்ற பொறிமுறை ஊடாகவும் நீதியை நிலைநாட்ட முடியுமா- என்பது கேள்விக்குறியாகும். அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
(29.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM