(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )
இலங்கை தொடர்பான 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகப்போகிறோம் என்று கூறிக்கொண்டிருந்த அரசாங்கம் தற்போது அதிலிருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. 43ஆவது ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கடந்த புதன்கிழமை பேரவையில் ஆற்றிய விசேட உரையில் இந்த விடயத்தை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பத்துடன் 30/1 பிரேரணைக்கு இலங்கையினால் வழங்கப்பட்ட இணை அனுசரணை இதன்மூலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற 43ஆவது கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றினார். மனித உரிமைப் பேரவையில் கூட்டத் தொடர் ஒன்று ஆரம்பமாகியவுடன் முதல் மூன்று நாட்கள் உறுப்பு நாடுகள் அல்லது உறுப்பு அல்லாத நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பேரவையில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அதனடிப்படையிலேயே மூன்றாவது நாளான புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் உரையாற்றியதுடன் அனுசரணையை மீளப்பெறுவது தொடர்பான அறிவிப்பையும் உத்தியோகபூர்வமாக ஜெனிவா பேரவையில் வெளியிட்டார்.
இதன்போது 12 நிமிடங்கள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். அவருடைய உரையிலிருந்து சில முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம்.
‘‘ஜெனிவா பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியமை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். எனவே எமது அரசாங்கம் 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய பிரேரணைகளுக்கான அனுசரணையிலிருந்து விலகுகின்றது. எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஆராய்ந்த முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கையை ஆராய உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும். 30/1 பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை முன்னைய அரசாங்கம் உள்ளக ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது. அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஆலோசனையும் பெறப்படவில்லை. இலங்கையின் இறைமையையும் மதிப்பையும் அவமதிப்பதாக அமைந்திருக்கிறது. 30/1 பிரேரணையானது இலங்கையின் தேசிய அக்கறையை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்தது. தேசிய உளவுத்துறையின் செயற்பாடுகள் பலவீனப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனது. இலங்கையானது ஐக்கியநாடுகள் சபை கட்டமைப்புடன் தொடர்ந்து இணைந்து செயற்படும். மேலும் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்த பிரேரணையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் செயற்படும். இலங்கை அரசாங்கத்தை விட எமது மக்கள் மீது யாரும் அக்கறையுடன் செயற்பட முடியாது. எனவே அனைத்து தரப்பினரும் எம்முடன் இணைந்து செயற்படவேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.’’
இவ்வாறு பல்வேறு விடயங்களை வெளிவிவகார அமைச்சர் பேரவையில் எடுத்துரைத்திருந்தார். அதன்படி இலங்கையானது 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருக்கிறது. அடுத்ததாக அவ்வாறு விலகும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு என்ன மாற்று நடவடிக்கையை பெற்றுக்கொடுக்கும் என்பதும் இங்கு மிக முக்கியமான விடயமாகும். இது தொடர்பிலேயே புலம் பெயர் மக்களும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஆராய்ந்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியுள்ளதால் இனி எந்தவகையிலும் தமக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர். ஜெனிவாவிற்கு வருகை தந்திருக்கின்ற இலங்கையின் காணாமல்போனோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் எம்மிடம் கருத்து பகிர்கையில் அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து விலகியுள்ளதால் சர்வதேசம் எமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
வடக்கு–கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு. மாவட்ட தலைவியும் வடக்கு–கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோர் இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியைப் பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டும்.
இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை புரியவேண்டும் என்று காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.
இவ்வாறு தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேசத்தை நாடிச்செல்லும் நிலை உருவாகியிருப்பதாக இங்கு ஜெனிவா வளாகத்தில் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்த 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோதே பிரேரணைக்கு அனுசரணை வழங்கியமை தவறு என்றும் தாம் ஆட்சிக்கு வந்ததும் அதிலிருந்து விலகிவிடுவதாகவும் தெரிவித்து வந்தது. அதனடிப்படையிலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த பிரேரணை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அதிலிருந்து விலகும் தீர்மானத்தை எடுத்தது. அதன்படி தற்போது இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு வெளிவிவகார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக அடுத்த கட்டமாக புலம்பெயர் மக்களும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஆராய்ந்து வருகின்றனர். சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே தெரிகின்றது. ஜெனிவா வளாகத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்த பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரீக் இலங்கை பிரேரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமன்றி சர்வதேச அமைப்புக்களும் இது தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தன.
இந்த இடத்தில் அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் ஜெனிவா வளாகத்தில் பரந்துபட்ட ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட நாடு இணக்கம் தெரிவிக்காவிடின் பொறுப்புக்கூறலை முன்னெடுக்குமாறு நிர்ப்பந்திக்க முடியாது. கோரிக்கை விடுக்கலாம், வலியுறுத்தலாம், மாறாக ஒருநாட்டின் மீது தடைகளை அமுல்படுத்த முடியாது. எனவே மனித உரிமைப் பேரவையின் வரையறை தொடர்பில் புரிந்துகொண்டு புலம்பெயர் அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் செயற்படவேண்டியது அவசியமாகிறது. அதுமட்டுமன்றி பல யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுவதும் அவசியமாகின்றது.
யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிமை பேரவையில் மூன்று பிரேரணைகள் சர்வதேச நாடுகளினால் கொண்டுவரப்பட்டன. ஆனால் 2015 ஆம் ஆண்டு வரையில் எந்தவிதமான ஒரு முன்னேற்றமும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இடம்பெறவில்லை. இந்த சூழலிலேயே 2015ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் 30/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆட்சியில் இந்த பிரேரணை அமுலாக்கல் விடயம் பாரிய முன்னேற்றத்தை தரவில்லை. எனினும் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டது. இழப்பீடு வழங்கும் அலுவலகம் உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் ஒரு கட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. அதேபோன்று காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரியதொரு நம்பிக்கை இல்லை. அந்தவகையில் இங்கு ஒரு யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. கடந்த 11 வருடங்களாக ஆறுக்கும் மேற்பட்ட பிரேரணைகள் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பிரேரணைகளை இலங்கை நிராகரித்தது. அதன்பின்னர் ஒருசில பிரேரணைகளுக்கு அனுசரணை வழங்கியது. தற்போது அந்த அனுசரணையிலிருந்து வெளியே வந்திருக்கின்றது.
அவ்வாறு பார்க்கும் போது எத்தனை பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் எந்த விமோசனமும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். அதனால் புலம்பெயர் மக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த விடயங்களை உணர்ந்து மிகவும் செயற்றிறனாக செயற்பட முன்வரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர். காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அவ்வாறு உண்மையை கண்டுபிடிப்பதிலேயே இழுபறி நிலவி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தி அடைந்திருக்கின்றனர். எதிர்பார்ப்புக்கள் இன்றி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். வயது முதிர்ந்த தாய் தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதாவது தமக்கு நீதி கிடைக்கும் அல்லது உண்மை வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இந்த மக்களுக்கு இருந்தாலும் காலம் கடந்துகொண்டிருக்கின்றமையினால் தற்போது நம்பிக்கை இழக்கப்பட்டு விரக்தி நிலைக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறான பின்னணியிலேயே அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்துகின்ற 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகியிருக்கிறது. இந்த அனுசரணையிலிருந்து விலகும் தீர்மானத்தை பேரவையில் அறிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தாம் பிரேரணையிலிருந்து விலகினாலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவதாக அறிவித்திருக்கின்றார். அதனடிப்படையிலேயே அரசாங்கம் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார். இதனூடாக கடந்த காலங்களில் செயற்பட்ட ஆணைக்குழுக்கள் வெளியிட்ட அறிக்கைகள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
உண்மையில் சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றது என்பதையே அனைத்து தரப்பினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் இணைந்தே இலங்கை தொடர்பான பிரேரணைகளை ஜெனிவாவில் கொண்டுவந்திருந்தன. தற்போது அந்தப் பிரேரணைகளினால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. எனவே அடுத்த கட்டமாக சர்வதேச சமூகம் எவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்கும் என்பது பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்திருக்கின்றது. அனுசரணையிலிருந்து விலகி இருக்கின்ற அரசாங்கம் அடுத்ததாக மாற்றுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் அரசாங்கம் இந்த மாற்றுத்திட்டத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் எவ்வாறு விடயங்கள் இடம்பெறப்போகின்றன என்பதையே சர்வதேச சமூகமும் பாதிக்கப்பட்ட மக்களும் புலம்பெயர் அமைப்பினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM