ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிப்பதற்கான பிரேரணையின் அனுசரணையிலிருந்து இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகியிருக்கிறது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் பேரவையில் உரையாற்றியபோதே இலங்கையானது பிரேரணையின் அனுசரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகுவதாகவும் அறிவித்ததுடன் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்தார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கமொன்றை அளித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன 30/1 பிரேரணையானது இலங்கையின் அரசியலமைப்பினை மீறுவதாகவும் இலங்கை மக்களினதும் பாராளுமன்றத்தினதும் அனுமதியை பெறவில்லை என்றும் அதனால் இந்த பிரேரணையிலிருந்து ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான புதிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை அரசாங்கம் 30/1 பிரேரணையிலிருந்து விலகப்போவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் இலங்கைக்கு முன்னாள் ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையில் ஒரு கூட்டறிக்கை உருவாக்கப்பட்டது. அதில் இலங்கையானது யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின்னர் இலங்கை தானாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஒரு பிரேரணையை கொண்டுவந்தது.
அதிலும் உள்ளக செயற்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கை பெறப்பட்டபோதிலும் அந்த அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இதனால் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பாக அதிருப்தி அடைந்ததுடன் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக மூன்று பிரேரணைகள் கொண்டுவந்தன. எனினும் அப்போதைய அரசாங்கம் அந்தப் பிரேரணைகளை முழுமையாக நிராகரித்திருந்தன. தாம் எந்தவகையிலும் அந்தப் பிரேரணைகளுக்கு கடமைப்படவில்லை என்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூற முடியாது என்றும் முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே 2015ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 30/1 பிரேரணை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில் 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மிக முக்கியமாக பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பொதுநலவாய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்வாங்கப்படவேண்டுமென ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பரிந்துரையை 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.
இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் 30/1 அமைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய தவறு என்றும் தெரிவித்து வந்தனர்.
தாம் ஆட்சிக்கு வந்ததும் குறித்த பிரேரணையிலிருந்து விலகிவிடுவதாகவும் அனுசரணையை மீளப்பெறுவதாகவும் கூறிவந்தனர். இந்தப் பின்னணியில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜெனிவா பிரேரணையானது பாரியதொரு பேசுபொருளாக காணப்பட்டது. தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜ
பக் ஷ அதிகாரத்திற்கு வந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணை தொடர்பாக ஆராய ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் மீளாய்வை அடுத்தே அரசாங்கம் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தது. அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வாறான சூழலிலேயே புதன்கிழமை மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாகவும் எனினும் உள்ளக ரீதியில் தமது விடயங்களை ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்தகட்ட நிலை எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக தற்போது பேசப்படுகின்றது. அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகும் பட்சத்தில் தாம் மாற்று ஏற்பாட்டுக்கு தயாராக இருப்பதாக கடந்தவாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதேபோன்று அரசாங்கம் பிரேரணையிலிருந்து விலகினாலும் பிரேரணை அமுலில் இருக்கும் என்றும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு இலங்கைக்கு இருக்கின்றது என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதுமட்டுமன்றி 43 ஆவது கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவிற்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகினால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் ஆராய்ந்திருந்தார். அந்தவகையில் தற்போது அரசாங்கம் பிரேரணையின் அனுசரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருக்கின்றது. அதனால் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் எவ்வாறு தமது நகர்வுகளை எடுக்கப்போகின்றன என்பது தொடர்பில் பேசப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் அரசாங்கமானது அனுசரணையிலிருந்து விலகியுள்ள நிலையில் தாம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான அணுகுமுறையில் தீர்வை வழங்கப்போகின்றோம் என்பதை அறிவிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களின் வேதனை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இந்த மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளை தொலைத்துவிட்டு தாய்மார் படும் வேதனை சொல்லிலடங்காது. தினமும் கண்ணீர் விட்டவண்ணமே இந்த மக்கள் வாழ்க்கையை கடத்துகின்றனர். எனவே ஒரு நம்பகரமான பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி அரசாங்கம் 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அடுத்த கட்டமாக என்ன மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக விளக்கமளிக்கவேண்டியது அவசியமாகும். முக்கியமாக தற்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஜெனிவா பேரவையில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். ஆனால், அது எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்ற விபரமான விடயங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
கடந்த 11 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் அழுத்தம் பிரயோகித்தபோதிலும் இதுவரை எந்தவிடிவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதிலை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்கப்போகின்றனர் என்பதே தற்போதைய நிலைமையில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கைவிடப்படக்கூடாது என்பதுடன் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.
(28.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM