ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் காணாமல்போனோரின் உறவுகளின் பிரதிநிதிகள் ஜெனிவாவுக்கு விஜயம் செய்து அங்கு நடைபெறும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் பங்கேற்று தமது கவலைகள், வேதனைகள் தொடர்பாக உரையாற்றுவதற்கு தயாராகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை மிகப்பெரிய அளவில் பேசப்படுவதுடன் அதுதொடர்பான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதுடன் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையிலேயே இம்முறையும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் இந்த விடயம் தொடர்பாக பல உபகுழு கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளதுடன் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையினரும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும் இலங்கையிலிருந்து சென்றிருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களும் இந்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் இதுவரை காணாமல்போன எந்தவொருவருக்கும் என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. தமது அன்புக்குரியவர்களை கண்டுபிடித்து தருமாறும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களிலும் சுழற்சி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களுக்கு இதுவரை எவ்விதமான தீர்வும் வழங்கப்படாமல் இருக்கின்றது. 10 வருடங்களாக இந்த மக்கள் வேதனையுடனும் தமது காணாமல்போன அன்புக்குரியவர்கள் குறித்த எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகின்ற கூட்டத் தொடர்களில் பங்கேற்று தமது கவலையை எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்தகாலத்தின்போது காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்குமாறு கோரிக்கைகள் வலுவடைந்தன. உள்ளக ரீதியில் ஒரு விசாரணைப் பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதுதொடர்பில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதிலும் கூட யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் எனக் கூறப்பட்டது.
எனினும் தொடர்ந்தும் காணாமல்போனோர் தொடர்பில் எந்தவிதமான முடிவும் கிடைக்காத சூழலில் 2010ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசாரணை அமர்வுகளை நடத்தியபோது அங்கு சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியே கதறி அழுதனர். இந்த நிலையில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. அந்தப் பிரேரணைகளிலும் காணாமல்போனோர் தொடர்பாக விரைவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வும் உண்மையைக் கண்டறிதலும் அவசியம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னரே 2013ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு விசாரணை அமர்வுகளை நடத்தி பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டது. சுமார் 20000க்கும் மேற்பட்ட எழுத்துமூல முறைப்பாடுகள் காணாமல்போனோர் தொடர்பில் அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றன. எனினும் இறுதியில் குறித்த ஆணைக்குழுவினாலும் காணாமல்போனோர் பிரச்சினைக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படவில்லை.
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் 30/1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணை பேரவையில் உள்ளடக்கப்பட்டிருந்த பரிந்துரைகளில் காணாமல்போனோர் குறித்து ஆராய்வதற்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு சர்ச்சைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் 2017ஆம் ஆண்டு காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டது. எனினும் இந்த காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை ஏற்படவில்லை. அவர்கள் அதுதொடர்பில் ஒரு விமர்சன ரீதியான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தற்போது இரண்டு வருடங்களாக இந்த காணாமல்போனோர் அலுவலகம் இயங்கி வருகின்றபோதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அலுவலகம் தொடர்பில் பாரிய நம்பிக்கை எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் பாரிய வேதனைகளுடனும் சொல்லொணாத்துன்பங்களுடனும் இருக்கின்றனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்வப்போது காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். அத்துடன் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எனினும் இதுவரை எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் சரியானதொரு முடிவு கிடைக்காத நிலைமையே காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இந்த காணாமல்போனோர் தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளான மன்னிப்புசபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் என்பனவும் காணாமல்போனோர் தொடர்பில் உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான பின்னணியில் அண்மையில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கரை சந்தித்திருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு பிறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதியிடம் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறு வெறுமனே காணாமல்போனவர்கள் இறந்துவிட்டதாக கூற முடியாது என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் இந்த காணாமல்போனோரின் விவகாரமானது தொடர்ச்சியாக ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. ஒரு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்து உண்மைகளை கண்டுபிடிக்குமாறும் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்திலும் இந்த காணாமல்போனோர் விவகாரம் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மக்களுக்கு ஒரு நியாயமான முடிவை வழங்கவேண்டியது மிகவும் அவசியமாகும். தமது உறவுகளை தொலைத்துவிட்டு சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டும் பாரிய வேதனையுடனும் இந்த காணாமல்போனோரின் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காணாமல்போன தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில் அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளே என்பதை உணர்ந்து அவர்களின் பிரச்சினைக்கு ஒரு முடிவை கொடுக்கவேண்டியது அவசியமாகும். அதனால் தொடர்ந்தும் இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
(27.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM