நாட்டில் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்லுகின்ற வேகத்தைப் பார்க்கும்போது போக்குவரத்து தொடர்பான சட்டதிட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் அவசியமாக காணப்படுகின்றது. நாடளாவியரீதியில் தொடர்ச்சியாக பல்வேறு கோர விபத்து சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது.
பல்வேறு பிரதேசங்களிலும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிவதுடன் விபத்துகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் காயமடையும் சம்பவங்கள் என்பன அதிகரிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு கோர விபத்து சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியிருந்தன. அனைத்து விபத்து சம்பவங்களிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட அதிகளவில் பதிவாகியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பஸ்ஸும் ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் ஐந்துபேர் உயிரிழந்தனர்.
கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பஸ்வண்டி பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கி வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து பஸ் பயணித்த பாதை ஒழுங்கைக்குள் சென்று பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியது. அதேபோன்று கடந்த காலங்களில் வடக்கிற்கு செல்லும் ஏ–9 வீதியில் பல கோர விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உயிரிழப்புக்களும் காயமடைந்த சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியிருந்தன.
நாடளாவிய ரீதியில் அன்றாடம் பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தினம் சராசரியாக ஏழுபேர் அல்லது எட்டுபேர் விபத்துகள் காரணமாக உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அத்துடன் வருடம் ஒன்றுக்கு 2500–3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் இந்த விபத்துகள் காரணமாக பதிவாகின்றன. அதேபோன்று அதிகளவான மக்கள் விபத்துகள் காரணமாக காயமடைந்து தமது வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். பல்வேறு சமூக விளைவுகளும் விபத்துகள் காரணமாக ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. விபத்தொன்றில் கணவன் இறந்துவிட்டால் அதன்பின்னர் அவரது குடும்பத்தின் சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகின்றது. எனவே இவ்வாறு அதிகரித்து செல்லும் விபத்துகளை விரைவாக குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு பரந்துபட்ட ரீதியிலான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
விபத்துகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காரணங்களினால் இடம்பெறுகின்றன. முக்கியமாக சாரதிகள் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வாகனத்தை செலுத்துவதே விபத்துகளுக்கான பிரதான காரணமாக காணப்படுகின்றன. அதேபோன்று குடிபோதையில் வாகனங்களை செலுத்துதல், தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனங்களை செலுத்துதல், வாகனங்களை செலுத்தும்போது சாரதிகளுக்கு நித்திரை ஏற்படுதல், மிக வேகமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விபத்துகள் அதிகளவில் பதிவாகின்றன. முக்கியமாக இரவு நேரங்களில் வாகனங்களை சாரதிகள் செலுத்தும்போது இவ்வாறு நித்திரை ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது. இது தொடர்பில் சரியான அவதானம் இருக்க வேண்டியது அவசியமாகும்.
போக்குவரத்து விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து வாகனங்களை செலுத்தினாலேயே விபத்துகளை அதிகளவில் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது யதார்த்தமாகும். அதிகளவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக வாகனங்களை செலுத்துவதாலும் விபத்து சம்பவங்கள் பதிவாகின்றன. அதுமட்டுமன்றி வீதிகளை கடக்கும் பாதசாரிகளும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகின்றன. மேலும் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து செல்கின்றது. எனவே இவ்வாறான நிலைமை தொடர்பிலும் விபத்துகள் அதிகரித்து செல்வதற்கான காரணம் குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகும்.
முக்கியமாக வீதிகளில் நடந்துசெல்லும்போது, வீதிகளை கடக்கும்போது பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். பாதசாரிகள் கடவைகளில்கூட பொதுமக்கள் விழிப்புணர்வுடனேயே கடந்துசெல்ல வேண்டும். அதேபோன்று சாரதிகளுக்கும் விபத்துகளை தவிர்ப்பதில் பாரியபொறுப்பு காணப்படுகின்றது. முதலில் எக்காரணம் கொண்டும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறிய வேகத்தில் வாகனங்களை செலுத்துவது சாரதியை மட்டுமன்றி வாகனத்தில் பயணிப்பவர்களையும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதையும் சாரதிகள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை அடிப் படை விடயங்களாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். விபத்துகள் அற்ற ஒரு பாதுகாப்பான வாகனப்பயணம் இடம்பெறவேண்டுமானால் உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்த சாரதிகள் முன்வரவேண்டும். சாரதியொருவர் ஒரு வாகனத்தை செலுத்தும்போது தன்மீது நம்பிக்கை வைத்து தனக்குப்பின்னால் பல பயணிகள் பயணிக்கின்றனர் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
இது இவ்வாறிருக்க அரசாங்கமும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதுடன் விபத்துகளை குறைப்பதற்கான அல்லது தடுத்து நிறுத்துவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆழமாக சிந்திக்கவேண்டியது அவசியமாகும். இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் கொண்டுசெல்லவேண்டும். முக்கியமாக போக்குவரத்து சட்டதிட்டங்களை அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்தை அமுல்படுத்தும்போது எக்காரணம் கொண்டும் ஊழல் விடயங்களுக்கு இடமளிக்காமல் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தியும் அரச அதிகாரிகள் செயற்பட முன்வரவேண்டும். சட்ட விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவேண்டியது அவசியம்.
அத்துடன் குடிபோதையில் வாகனத்தை செலுத்துகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை அவசியம். இவ்வாறு சட்டத்தை சரியாக அமுல்படுத்துவதன் ஊடாக எந்தளவுதூரம் இந்த விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் ஆராயவேண்டும். அதேபோன்று விபத்துகளை குறைப்பதற்கு பரந்துபட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். வெளிநாடுகளில் விபத்துகளை குறைப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது தொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகின்றது.
விபத்துகளை குறைப்பது தொடர்பாக எவ்வாறான பரந்துபட்ட திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். இது தொடர்பில் புத்திஜீவிகள் குழுவை நியமித்து ஆராய்வது மிகவும் முக்கியமாகும். விபத்துகளுக்கு அதிகளவு ஏதுவாகின்ற காரணங்களை கண்டறிந்து அவை குறித்து ஆராயவேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது. தற்போதைய விபத்துகள் அதிகரித்து செல்லும் போக்கை பார்க்கும்போது மக்களுக்கு பொதுபோக்குவரத்து தொடர்பில் அச்சநிலைமையே ஏற்படுகின்றது. இதனைப் போக்கி பாதுகாப்பான வாகனப்போக்குவரத்து நிலைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த காலங்களில் அதிகரித்து செல்லும் விபத்துகள் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவை எந்தளவு தூரம் வெற்றி யடைந்துள்ளன என்பது தொடர்பாகவும் பார்க்கவேண்டியது அவசியமாகும்.
மேலும் சிவில் சமூக தலைவர்களும் சர்வமத தலைவர்களும் இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சாரதிகளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கலாம். சிவில்
சமூக நிறுவனங்கள் நாடளாவியரீதியில் சாரதிகளுக்கு சிறந்த அணுகுமுறை தொடர்பான பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும். அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக மட்டும் விபத்துகளை குறைத்துவிட முடியாது என்பதே யதார்த்தமாகும். எனவே விபத்துகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே பாதுகாப்பான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க முடியும்.
(23.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM