கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குத் தெற்கேயும், மொரட்டுவ மாநகர சபை எல்லைக்கு வடக்கேயும் அமைந்துள்ளது தெஹிவளை –கல்கிசை மாநகரம். அதன் மேற்கு எல்லையாக கடலும், கிழக்கு எல்லைகளாக மகரகம மாநகர சபை மற்றும் பொரலஸ்கமுவ நகரசபையும் அமைந்துள்ளன.
தெஹிவளை– கல்கிசை மாநகர எல்லைக்குள் பெளத்த மக்களுக்கு உள்ளதைப் போன்று இந்துத் தமிழர்களுக்கும் பல வரலாற்றுச் சிறப்புக்கள் நிறையவே உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தும் திருநந்தீஸ்வரம் என்ற சிவாலயம் இப்பகுதியிலுள்ள இரத்மலானையில் சிறப்பித்துக் கூறத்தக்கதாயுள்ளது.
தெஹிவளை– கல்கிசை மாநகர எல்லைக்குள் தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய இரு தேர்தல் தொகுதிகள் உள்ளமை போன்று அதே பெயர்களைக் கொண்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் இயங்குகின்றன.
இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளும் சிங்கள மொழியுடன் தமிழ் மொழிக்கும் இணைந்த சமவுரிமையுள்ள செயலகப் பிரிவுகளென்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில) தேசிய மிருகக்காட்சிச்சாலை என்பனவும் இம்மாநகர சபை எல்லையிலேயே உள்ளன. காலி வீதி இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியாகும்.
இம்மாநகர சபை எல்லைக்குள்ள பிலியந்தலை கல்வி வலயத்தில் கொழும்பு– இரத்மலானை இந்துக் கல்லூரி, தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம், நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று தமிழ்ப்பாடசாலைகள் இயங்குகின்றன.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகள் வரை கொண்ட இப்பாடசாலைகளில் இரத்மலானை இந்துக் கல்லூரியில் இலவசமாக இயங்கும் மாணவர் விடுதி அகில இலங்கை இந்து மாமன்றத்தால் நடத்தப்பட்டு வருவதுடன் பாடசாலையால் நிர்வகிக்கப்படும் மாணவ விடுதியொன்றும் செயற்படுகின்றது.
தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய காணியின் மூன்றில் ஒரு பகுதி வெளியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் இடவசதி போதியதாயில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியை மீளப்பெற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருநந்தீஸ்வரம் என்ற பழம்பெரும் சிவாலயம் இரத்மலானையிலுள்ளது. 1518 இல் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் போது சிதைத்து அழிக்கப்பட்ட இவ்வாலயம் இன்று மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாலய வளவில் முருகன் ஆலயமொன்றும் உள்ளது. குறித்த திருநந்தீஸ்வரர் ஆலயம் தொடர்பில் தொட்டகமுவ இராகுலதேரர் தனது “சலலிஹினி சந்தேசய” என்ற சிங்கள மொழியிலான காவிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1454 இல் அதாவது போர்த்துக்கேயர் இந்நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அக்காவிய நூல் எழுதப்பட்டுள்ளது. அதில் சிவாலய வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளதுடன் மக்கள் விரும்பும் இனிமையான தமிழில் தோத்திரங்கள் பாடுவார்கள் என்றும் ராகுலதேரர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் இந்துத் தமிழர்கள் சிறப்புடனும் வளத்துடனும் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்று ஆதாரம் உண்மையை வெளிப்படுத்துகின்றது.
அதுமட்டுமல்ல இவ்வாலயத்தை அண்டிய பகுதிகளில் நிலத்தை வேறு தேவைகளுக்காக அகழ்ந்தபோது நிலத்தின் அடியிலிருந்து பல இந்துத் தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த தொல்பொருளியல் ஆய்வாளர் கலாநிதி செனரத் திசாநாயக்க அவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவையென்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பல நூறு ஆண்டுகள் பழைமை கொண்டதாகக் கணிக்கப்படும் தெஹிவளை நெடுமால் வெங்டேஸ்வரப் பெருமாள் கோயில், தெஹிவளை ஆஞ்சநேயர் கோயில், படோவிட்ட முத்துமாரியம்மன் கோயில், படோவிட்ட கருமாரியம்மன் கோயில் என்பன குறிப்பிடத்தக்க இந்துக் கோயில்களாகும்.
இவற்றுடன் இப்பகுதியிலுள்ள சகல பெளத்த விகாரைகளிலும் இந்துத் தெய்வங்கள் வழிபாட்டுக்குரியவையாயுள்ளன. பெளத்த விகாரைகளில் விநாயகர், முருகன், அம்மன், விஷ்ணு ஆகிய இந்துத் தெய்வங்களை வழிபட முடிகின்றது. இங்குள்ள மங்களாராமய விகாரையில் சிவபெருமானின் திருவுருவமும் வழிபாட்டிற்குரியதாயுள்ளது.
இம்மாநகர சபை எல்லைக்குள் பரந்துவாழும் தமிழர்கள் அரசியல் ரீதியில் கைவிடப்பட்டவர்களாகவேயுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர் தெரிவை உறுதிப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கிவரும் தெஹிவளை– கல்கிசை மாநகரத் தமிழ் மக்களுக்குக் குறித்த மாநகர சபையில் ஒரு பிரதிநிதித்துவமானது இல்லாமை கவலைக்குரியது. மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் நாற்பத்தெட்டு (48) பேர். அவர்களில் வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் இருபத்தொன்பது பேர். தமிழர் இருவரைத் தெரிவு செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்ட வட்டாரங்கள் இரண்டும் அதில் அடக்கம்.
அது மட்டுமல்ல குறைந்தது ஆறு தமிழர்கள் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இருந்தபோதிலும் எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழர் பிரதிநிதித்துவங்கள் பற்றி அக்கறை செலுத்தவில்லை. தமிழர் பிரதிநிதித்துவம் பெறத்தக்கதாக வரையறை செய்யப்பட்ட வட்டாரங்களிலிருந்து பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழர் பிரதிநிதித்துவம் பெறப்படாமைக்கான காரணம் தமிழர் தரப்பின் மெத்தனப் போக்கேயாகும்.
ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி வெளிப்படுத்துவது அப்பிரதேசத்திலுள்ள அரசியல் நிர்வாக அமைப்புகளில் அம்மக்கள் பெற்றுக்கொள்ளும் பிரதிநிதித்துவங்களே. தெஹிவளை– கல்கிசை மாநகர சபை எல்லைக்குள் கணிசமான அளவில் தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்தபோதிலும் மாநகர சபைக்கு வரி செலுத்துபவர்களாக இருந்தபோதிலும் தமக்கென தாம் சார்ந்த தமக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரு பிரதிநிதித்துவமாவது இல்லாதிருப்பது அரசியல் ரீதியில் அவர்களை (தமிழர்களை) அநாதைகளாக்கியுள்ளது.
மாநகர சபையால் பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகளை உரியபடி அனுபவிக்க, அச்சபையில் கேட்டுப்பெற தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லை. தமிழ் மக்களின் குறைகளைக் கண்டறிந்து எடுத்துக் கூறும் பிரதிநிதித்துவங்கள் தெஹிவளை, கல்கிசை மாநகர சபையில் இல்லாமை பாரிய குறைபாடாகவேயுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்று இருப்பைக்கொண்ட இப் பிரதேச தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாகியிருப்பது பற்றிச் சிந்திக்கவேண்டும்.
– த. மனோகரன் –
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM