“மண்ணிலிருந்து உலகில் பிறந்த மனிதா நீ மண்ணுக்கேதான் திரும்ப வேண்டும் ஒருநாள்...” பாடல் ஒலிக்க, திருநீற்றுப் புதனை இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் எதிர்கொள்கின்றோம். இன்றிலிருந்து இயேசுவின் திருப்பாடுகளைத் தியானிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
மானிடராகிய எம்மை பாவத்திலிருந்து மீட்க, மனிதனாக இவ்வுலகில் அவதரித்தார் கிறிஸ்து. தந்தையின் சித்தத்தை ஏற்றுக் கொண்ட இயேசு, சிலுவை சுமந்தார், பாடுகள்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். இதைத்தான் நாம் இன்றிலிருந்து நினைவுகூர்கின்றோம்.
நாற்பது நாட்கள் வனாந்தரத்திலே இயேசு நமக்காக உண்ணா நோன்பிருந்தார். இதனை நினைவுகூரவே நாமும் இன்றிலிருந்து நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஆண்டவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவோம்.
பாவ வாழ்விலிருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்வதையே இறை இயேசு விரும்புகிறார்; ஆசிக்கின்றார். தாம் எவ்வாறு, தமது தந்தையின் ஆணைப்படி வாழ்ந்தாரோ, அதையே தாம் நம்மிடமும் அவர் எதிர்பார்க்கின்றார்.
ஆனால் நடப்பதென்ன? எமது அன்றாட வாழ்வை நாம் சிறிது மீட்டிப் பார்ப்போம்.
இறைவனுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைந்திருக்கிறதா என்றால், இல்லை என்ற பதிலே எமக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. இறை இயேசுவுக்கு எதிரான மாபாதகங்கள் அனைத்தும் எம் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பொய், திருட்டு, புறம் பேசுதல், பழி தீர்த்தல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இத்தகைய பாவங்களை எம் வாழ்விலிருந்து நாம் ஒழிக்க வேண்டும். நம் உடன்பிறப்புக்களை, அயலாரை அன்பு செய்ய வேண்டும். மனம் மாற வேண்டும்; மனந்திருந்தி வாழவேண்டும். நம்மிடம் இயேசு கேட்பது, மன மாற்றம் தான். நம் மனதின் அழுக்கைக் களைந்து விட்டு, முழுமையாக பரிசுத்தமடைய வேண்டும், பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.
அதைவிட்டு, தவக்காலத்தில் மட்டும் ஒறுத்தல் செய்து, பரிசுத்தவானாக வாழ்ந்துவிட்டு மீண்டும் செய்த தவறையே செய்ய ஆரம்பிப்பதல்ல.
தவக்காலத்தின் நாற்பது நாட்களும் நாம் என்ன செய்கின்றோம்..? இறை இயேசுவுக்கு எதிராகத்தானே பாவம் செய்கின்றோம். இதிலிருந்து நாம் வெளியே வருவோம். நம்மை முழுமையாக மாற்றிக் கொள்வோம். நிச்சயம் இயேசு, எம்மை மன்னிப்பார், எம்மை ஏற்றுக்கொள்வார்.
என் மீட்பர் இரத்தம் சிந்தினார்; நான் பரிசுத்தமானேன், அவர் எனக்காக மரித்தெழுந்தார்; நான் மறுரூபமானேன். - இதுதான் நாம் இன்றைய நாளில் நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிந்தனை.
ஆம்... நமக்காக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார், பாடுகள் ஏற்றார், மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்...இதுதான் தவக்காலத்தில் நாம் சிந்திக்க வேண்டிய தியானம்.
கடந்த வருடம் குருத்தோலை ஞாயிறு தினத்தன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட சிலுவைகளை வீடுகளிலிருந்து பெற்று, ஆலயத்தில் அவற்றை எரித்துப் பெறப்படும் சாம்பலே இன்றைய நாளில் நம் நெற்றியில் பூசப்படுகிறது.
“மண்ணாய் பிறந்த மனிதா, நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்றவாறே அருட்தந்தையர்கள் எம் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
ஆம், இம்மண்ணில் பிறந்த நாம், மரித்து மீண்டும் மண்ணுக்குள்ளேதான் புதைக்கப்படுகின்றோம். எந்த நேரமும் எம்மை மரணம் ஆட்கொள்ளலாம்...மண்ணுக்கே திரும்பலாம்...நாம் வாழும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாவம் செய்யாதிருக்க முயற்சிப்போம். இன்றிலிருந்து எமது சிந்தனை தொடரட்டும்.
இந்நாளில், இயேசுவின் பின்னால் நாமும் செல்வோம், அவர் வழியில் வாழ்வோம், வாழ்வில் புத்தொளி பெறுவோம்.
-சந்திரா –
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM